என் மலர்
செய்திகள்

கடலூர்: கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய 18 பேர் மீது வழக்கு
கடலூர் வடக்கு ராமாபுரம் வெள்ளக்கரை பகுதியை சேர்ந்தவர் வினோத்பாபு (வயது 17). இவர் கடலூரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார்.
நேற்று மாலையில் வினோத்பாபும், அவரது நண்பர் வெங்கடேசனும் வெள்ளக்கரையில் இருந்து கடலூர் வந்த தனியார் பஸ்சில் பயணம் செய்தனர். அந்த பஸ் எம்.புதூர் பஸ்நிறுத்தம் அருகே வந்து நின்றது.
அப்போது அந்த பகுதியை சேர்ந்த ராஜூ, விஷ்ணு உள்பட 10 பேர் சேர்ந்து மாணவர் வினோத்பாபு, வெங்கடேசன் ஆகியோரை தாக்கினர். இதில் வினோத்பாபு படுகாயம் அடைந்தார். அவர் கடலூர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தசம்பவம் தொடர்பாக வெங்கடேசன் திருப்பாதிரிப்புலியூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சம்பத் வழக்குபதிவு செய்து ராஜூ, விஷ்ணு உள்பட 10 பேரை தேடி வருகின்றார்.
இதேபோல் கடலூர் எம்.புதூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜீவா(19). இவர் கடலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வருகிறார்.
ஜீவா வண்டிப் பாளையம் அருகே சாலையில் நடந்து சென்றபோது வினோத் பாபுவின் ஆதரவாளர்கள் தர்மேந்திரா உள்பட 8 பேர் சேர்ந்து ஜீவாவை தாக்கியுள்ளனர்.
இதுகுறித்து ஜீவா கொடுத்த புகாரின் பேரில் தர்மேந்திரா உள்பட 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






