என் மலர்
செய்திகள்

வளசரவாக்கத்தில் குடிபோதையில் கார் ஓட்டியதால் கடைகள் மீது மோதியது: 2 வாலிபர்கள் கைது
போரூர்:
பூந்தமல்லி மலையம் பாக்கம் நேரு தெருவை சேர்ந்தவர் சுரேஷ். இவரது நண்பர் வடபழனியை சேர்ந்த கவுதமன். சுரேஷ் நேற்று இரவு கவுதமன் வீட்டுக்கு சென்று இருந்தார். இன்று அதிகாலை கவுதமன் தனது காரில் சுரேசை பூந்தமல்லியில் உள்ள வீட்டுக்கு கொண்டு விட அழைத்து சென்றார். காரை சுரேசே ஓட்டினார்.
ஆற்காடு சாலையில் வளசரவாக்கத்தில் உள்ள பள்ளி அருகே வந்தபோது கார் திடீரென்று கட்டுப் பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் அங்கிருந்த கடைகள் மீது மோதி விட்டு ரோட்டோரம் இருந்த விளம்பர பலகைகள் மீது மோதி நின்றது.
இதில் காரின் முன்பகுதி நொறுங்கியது. கவுதமனுக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சுரேஷ், கவுதமனிடம் விசாரணை நடத்தினர். அப்போது இருவரும் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து பாண்டி பஜார் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷ், கவுதமனை கைது செய்தனர்.
கார் தாறுமாறாக ஓடிய சமயத்தில் பிளாட்பாரத்தில் யாரும் படுத்திருக்கவோ, நின்று இருக்கவோ இல்லை. இதனால் அதிர்ஷ்டவசமாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.






