search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவிரி வழக்கில் மேலும் அவகாசம்- மத்திய அரசுக்கு தலைவர்கள் கண்டனம்
    X

    காவிரி வழக்கில் மேலும் அவகாசம்- மத்திய அரசுக்கு தலைவர்கள் கண்டனம்

    காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான விவகாரத்தில் மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேலும் 2 வாரம் கால அவகாசம் கேட்டு மனு செய்தது. இதற்கு தமிழக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். #CauveryIssue
    சென்னை:

    காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான விவகாரத்தில் மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேலும் 2 வாரம் கால அவகாசம் கேட்டு மனு செய்தது.

    இதற்கு தமிழக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன்:-

    காவிரி பிரச்சனையில் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு தமிழகத்துக்கு தொடர்ந்து துரோகம் இழைத்து வருகிறது. குறுகிய அரசியல் கண்ணோட்டத்தோடு தங்கள் அரசியல் நோக்கம் நிறைவேற வேண்டும் என்பதற்காக ஒரு மாநிலத்தை புறக்கணிப்பது மிகவும் கண்டனத்துக்குரியது.

    ஏற்கனவே இறுதி தீர்ப்பை வழங்கியபோது கால அவகாசம் வழங்கிய சுப்ரீம்கோர்ட்டு கால அவகாசம் முடிந்த பிறகு மீண்டும் 3 மாதம் கால அவகாசம் கோரியதை ஏற்கவில்லை. வருகிற 3-ந்தேதிக்குள் வரைவு திட்ட அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

    இந்த நிலையில் மேலும் காலதாமதம் செய்வதற்காக இன்று மேலும் அவகாசம் கோரப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரிக்க வேண்டும்.

    மத்திய- மாநில அரசுகளின் மீது நம்பிக்கை இழந்து விட்ட மக்கள் கோர்ட்டை நம்பி இருக்கிறார்கள். மக்களின் நம்பிக்கைக்கு பாதகம் வராத வகையில் சுப்ரீம் கோர்ட்டு நடவடிக்கை அமைய வேண்டும்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்:-

    கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (மே) 12-ந்தேதி நடைபெற உள்ளது. அது முடியும் வரை எந்த முடிவும் எடுக்க மாட்டார்கள் என்பது எதிர்பார்த்ததுதான்.

    அதன் பிறகும் கூட மேலாண்மை வாரியம் அமைக்க உறுதியான எந்த திட்டத்தையும் கொண்டு வர மாட்டார்கள். மேலாண்மை வாரியத்துக்கு பதில் மேற்பார்வை குழு அல்லது கண்காணிப்பு குழு என்று ஏதாவது கொண்டு வர பார்ப்பார்கள். அதை ஏற்றுக் கொள்ள முடியாது. அதன் பிறகும் விவாதம் நடக்கும். ஆக, இன்னும் சில மாதங்கள் நீளும்.


    கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் அந்த ஆட்சிக்கு நெருக்கடி ஏற்படுத்த ஒருவேளை மேலாண்மை வாரியம் அமைக்க முன் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

    அப்படியும் தமிழக மக்களுக்கு நல்லது செய்து விடுவார்கள் என்று நம்ப முடியாது. அடுத்த 6 மாதத்தில் பாராளுமன்ற தேர்தல் வர இருக்கிறது. மாநில தேர்தலில் தோற்றாலும் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பார்கள். எனவே பாராளுமன்ற தேர்தல் முடியும் வரை காவிரி மேலாண்மை வாரிய பிரச்சனையையும் முடிவுக்கு கொண்டு வர மாட்டார்கள்.

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்:-

    மத்தியில் உள்ள பா.ஜனதா அரசு, தமிழர்களுக்கு துரோகம் செய்வதையே வாடிக்கையாக கொண்டுள்ளது.

    இதன் காரணமாகவே, தமிழகத்தை வஞ்சிக்கும் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. கர்நாடக மாநில தேர்தலை மனதில் வைத்தே மத்திய அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது.

    இதனாலேயே காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் காலம் தாழ்த்தி வருகிறது. மேலும் 2 வாரம் அவகாசம் கேட்டுள்ளது. அதே நேரத்தில், கர்நாடக மாநில தேர்தல் முடிந்தாலும் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்குமா? என்பது சந்தேகமே.

    அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு:-

    கர்நாடக தேர்தல் முடியும் வரை எதுவும் செய்ய மாட்டார்கள் என்பது எதிர் பார்த்ததுதான். எனவே இப்போது கூடுதல் அவகாசம் கேட்டிருப்பதால் ஆச்சரியம் இல்லை.

    மொத்தத்தில் மோடி அரசு மக்களை ஏமாற்றி கொண்டிருக்கிறது. பேசி பேசியேதான் ஏமாற்றுகிறார்களே தவிர எந்த பிரச்சனைக்கும் தீர்வு காண்பதில்லை.

    4 வருட ஆட்சியில் எல்லா பிரச்சனைகளும் இப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறது இந்தியா- சீனா எல்லையில் டோக்லாம் பிரச்சனையில் எல்லாவற்றையும் சாய்த்து விடுவது போல் வாய்ச்சவடால் விட்டார்கள். நடந்தது என்ன? நமது எல்லையின் மிக அருகில் 7 ஹெலிகாப்டர் தளங்களை சீனா அமைத்து இருக்கிறது. ஆனால் நிர்மலா சீதாராமன், சுஷ்மாசுவராஜ், இப்போது மோடி எல்லோரும் சீனாவில் சுற்றுப்பயணம் செய்கிறார்கள். இந்த ஆட்சியில் எந்த பிரச்சனைக்கும் தீர்வு காண முடியாது. வடிவேலு கதையில் பில்டிங் ஸ்டிராங் பேஸ்மென்ட் ரொம்ப வீக் என்ற நிலையில்தான் பா.ஜனதா அரசு இருக்கிறது.

    இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர். #Cauvery issue
    Next Story
    ×