search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையில் கமல்ஹாசன் பேசும் முதல் பொதுக்கூட்டம்
    X

    சென்னையில் கமல்ஹாசன் பேசும் முதல் பொதுக்கூட்டம்

    சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் வருகிற 8-ந்தேதி மகளிர் தின பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்து வருகிறார்கள். அக்கூட்டத்தில் கமல்ஹாசன் பேசுகிறார்.
    சென்னை:

    கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி இருக்கிறார். இந்த கட்சியில் உறுப்பினர் சேர்க்கை, கட்சியின் கட்டமைப்புகளை உருவாக்குதல் போன்ற பணிகளில் கமல்ஹாசன் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

    கமல் நியமித்த 15 பேர் கொண்ட உயர்மட்டக்குழுவினர் இதற்கான பணிகளை செய்து வருகிறார்கள்.

    கட்சி தொடங்கிய 48 மணி நேரத்திலேயே 2 லட்சத்து ஆயிரத்து 597 பேர் உறுப்பினர்களாக சேர்ந்ததாக அறிவித்துள்ளார்.

    இந்த நிலையில் சென்னையை சேர்ந்த பெண் தொழில் முனைவோர் 500 பேர் ஆழ்வார்பேட்டையில் கமல்ஹாசனை சந்தித்து மக்கள் நீதி மய்யத்தில் உறுப்பினர்களாக இணைத்து கொண்டனர்.

    கட்சியில் இணைந்தவர்களை வரவேற்ற கமல், பெண்கள் சமூக வளர்ச்சியில் பெரும்பங்கு வகிப்பதாக பாராட்டினார். மேலும் தனது கட்சியில் பெண்களுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படும் என்றார்.

    இதற்கிடையில் 10 பேர் கொண்ட பேச்சாளர்கள் பட்டியலை கமல் நேற்று வெளியிட்டார். அந்த பட்டியலில் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி மவுரியா, எழுத்தாளர் பாரதிகிருஷ்ணகுமார், தயாரிப்பாளர் கமீலா நாசர், பேராசிரியர் கு.ஞான சம்பந்தன், இயக்குனர் முரளி அப்பாஸ், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி ரங்கராஜன், தொழில் அதிபர்கள் சிவராமன், சவுரி ராஜன், நடிகை ஸ்ரீபிரியா, பாடலாசிரியர் சிநேகன் ஆகியோர் இடம் பெற்றுள்ளார்கள்.


    இதில் பாடலாசிரியர் சிநேகன், முரளி அப்பாஸ் தவிர மற்ற 8 பேரும் உயர் மட்ட குழுவிலும் இருக்கிறார்கள்.

    பெண்களை அதிக அளவில் திரட்டவும் ஏற்பாடு செய்கின்றனர். இதன் ஒரு கட்டமாக சர்வதேச மகளிர் தினத்தை பிரமாண்டமாக கொண்டாட முடிவு செய்துள்ளனர்.

    இதையொட்டி வருகிற 8-ந்தேதி சென்னை ஆழ்வார்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் மகளிர் தின பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்து வருகிறார்கள். கமல் கட்சி தொடங்கிய பிறகு சென்னையில் நடத்தப்படும் முதல் பொதுக் கூட்டமும் கமல் சென்னையில் பேசப் போகும் முதல் பொதுக் கூட்டம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. #Tamilnews
    Next Story
    ×