search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரளாவுக்கு தண்ணீர் திறந்து விடுவதை நிறுத்த வேண்டும் - முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
    X

    கேரளாவுக்கு தண்ணீர் திறந்து விடுவதை நிறுத்த வேண்டும் - முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

    பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டத்தில் இருந்து கேரளாவுக்கு தண்ணீர் திறந்து விடுவதை நிறுத்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
    சென்னை:

    கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் பிரச்சினையை கருத்தில் கொண்டு பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டத்தில் இருந்து கேரளாவுக்கு தண்ணீர் திறந்து விடுவதை நிறுத்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

    தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களின் பாசனத்துக்கும், குடிநீர் தேவைக்கும் பயன்படும் பரம்பிக்குளம் அணையில் இருந்து கேரளாவுக்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு கொங்கு மண்டல விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி உள்ளனர்.



    தமிழகத்தில் பரம்பிக்குளம் - ஆழியாறு அணைத் திட்டத்தின்கீழ் உள்ள, முதல் மண்டலத்தின் பாசனத் தேவைக்கு இரு சுற்று தண்ணீர் திறந்து விட உத்தரவிட்ட அ.தி.மு.க. அரசு, முதல் சுற்றுத் தண்ணீர் திறப்பு முடிந்தவுடன், தற்போது இருக்கின்ற தண்ணீரை கேரள மாநிலத்திற்கு திறந்து விடுவதால், அந்த நீரைநம்பி தமிழகத்தில் உள்ள ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் ஏற்கனவே செய்யப்பட்டுள்ள விவசாய சாகுபடி வீணாகும் பேரபாயம் ஏற்பட்டுள்ளது.

    தமிழக அரசு இருசுற்று தண்ணீர் திறந்துவிடும் என்ற நம்பிக்கையில் விவசாயம் செய்துள்ள தமிழக விவசாயிகள், தங்களின் பயிர்கள் கருகி விடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். எனவே, பரம்பிக்குளம் - ஆழியாறு பாசனத்திட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலக வளாகத்தில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தியுள்ள விவசாயிகள், கேரளத்திற்கு தண்ணீர் திறந்துவிடும் முடிவை இந்த அரசு மறுபரிசீலனை செய்யும் என்ற நம்பிக்கையில், போராட்டத்தைத் தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளார்கள்.

    மேலும், கேரள மாநிலத்திற்கான பாசனத் தேவைக்கு மாற்று வழிகள் இருக்கும்போது, ஆழியாறு வழியாக திறந்துவிடப்படும் தண்ணீரை உடனடியாக தமிழக அரசு நிறுத்த வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

    எனவே, கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் தேவை, விவசாயத்திற்கான பாசனத்தேவை போன்றவற்றை கவனத்தில் கொண்டு, பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டத்தில் இருந்து கேரளாவிற்கு தண்ணீர் திறந்து விடுவதை நிறுத்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.  #tamilnews

    Next Story
    ×