என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமஜெயம் கொலை வழக்கில் துப்பு கிடைத்ததும் குற்றவாளிகள் கைது: சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி விளக்கம்
    X

    ராமஜெயம் கொலை வழக்கில் துப்பு கிடைத்ததும் குற்றவாளிகள் கைது: சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி விளக்கம்

    முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பியான திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் துப்பு கிடைத்ததும் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில், ராமஜெயம் கொலை வழக்கின் விசாரணை குறித்து விளக்கம் அளித்தார். அவர் பேசியதாவது:-

    திருச்சி, தில்லை நகரைச் சேர்ந்த லதா ராமஜெயம் என்பவர், 29.03.2012 அன்று, அதிகாலை 5 மணிக்கு நடை பயிற்சிக்கு சென்ற தனது கணவரும், முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பியுமான ராமஜெயம் வீடு திரும்பவில்லை எனவும், அவர் கடத்தப்பட்டிருக்கலாம் எனவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறும் கோரி அன்றைய தினம் காலை 11.45 மணிக்கு புகார் அளித்ததன் பேரில், விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

    இந்நிலையில் அன்றைய தினம் சுமார் 11.30 மணியளவில், திருச்சி கல்லணை சாலையில் உள்ள பொன்னுரங்கபுரம் என்ற இடத்திற்கு அருகில், ராமஜெயத்தின் உடல் காயங்களுடன் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டது.

    இதுதொடர்பாக, திம்மராயபுரம் கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில் திருவரங்கம் காவல் நிலைய குற்ற எண்.228/12 இதச 302 பிரிவின்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டது.


    பின்னர் இவ்வழக்கு தில்லை நகர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குடன் (கு.எண்.128/12) இணைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கடந்த 27.06.2012 அன்று இவ்வழக்கு மாநில குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறைக்கு மாற்றப்பட்டது.

    மாநில குற்றப்புலனாய்வுத் துறையினர் இவ்வழக்கில் 12 தனிப்படைகள் அமைத்து இச்சம்பவம் தொழில்போட்டி அல்லது அரசியல் விரோதம் அல்லது குடும்ப பிரச்சனை காரணமாக நடந்துள்ளதா என அறிய பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

    இறந்தவரின் உறவினர்கள், அவருடைய பணியாட்கள், அவருடன் தொழில் ரீதியாக அறிமுகம் உள்ளவர்கள், அரசியல் தொடர்பு உடையவர்கள் எனப் பலரும் விசாரிக்கப்பட்டு அவர்களிடம் இருந்து பெறப்பட்ட அனைத்து விவரங்களைப் பற்றியும் மேல் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 1100 சாட்சிகளுக்கு மேல் விசாரணை செய்யப்பட்டுள்ளனர்.

    2910 கைபேசி எண்கள் பட்டியலிடப்பட்டு அவற்றைப் பயன்படுத்துவோர் விசாரிக்கப்பட்டுள்ளனர்.

    2007ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியின் போது திருச்சியைச் சேர்ந்த இருவர் வையம்பட்டி அருகில் ஒரு காரில் மர்மமாக எரிந்த நிலையில் கிடந்தது பற்றிய வழக்கு நான்கு ஆண்டுகள் திமுக ஆட்சியில் கண்டுபிடிக்க முடியவில்லை. இவ்வழக்கில் 2013ம் ஆண்டு குற்றப்புலனாய்வுத் துறையினர் தக்க துப்பு கிடைத்ததும் குற்றவாளிகளைக் கண்டு பிடித்து உண்மையை வெளிக்கொண்டு வந்தனர்.

    அதுபோல இவ்வழக்கிலும் காவல் துறையினர் தகுந்த துப்பு கிடைத்ததும் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பார்கள்.

    ராமஜெயத்தின் மனைவி, இவ்வழக்கு புலன் விசாரணையை மத்திய புலனாய்வுத் துறையினர் (சிபிஐ) விசாரணைக்கு மாற்றம் செய்யக் கோரி 10.03.2015 அன்று, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

    இம்மனு மீதான விசாரணை நீதிமன்றத்தில் பல்வேறு தினங்களில் நடைபெற்ற போது நீதிமன்றம் கூடுதல் அரசு வழக்கறிஞர் வழக்கு விசாரணையின் தற்போதைய நிலை குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டதன் பேரில், மாநில குற்றப்புலனாய்வுத் துறையினர் வழக்கின் தற்போதைய நிலை குறித்த அறிக்கையை ஒவ்வொரு விசாரணையின் போதும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் 19.01.2017 அன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது அத்துறையினர் தாக்கல் செய்த அறிக்கையை பரிசீலனை செய்த நீதிமன்றம், புலன் விசாரணை முடிக்க மேலும் மூன்று மாத காலம் அவகாசம் வழங்கி, மனுவை ஒத்திவைத்தது.

    இவ்வழக்கு மீண்டும் 27.04.2017 அன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, மாநில குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறையினர் இவ்வழக்கில் மேற்கொண்ட விசாரணை குறித்து அறிக்கை தாக்கல் செய்தனர். அந்த அறிக்கையை ஆய்வு செய்த நீதிமன்றம் இருதரப்பு வாதங்களையும் கேட்டு, இவ்வழக்கை தீர்ப்பிற்காக ஒத்திவைத்துள்ளது. வழக்கு புலன் விசாரணையில் இருந்து வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×