search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சாலை விதிகளை மதிப்போம், விபத்தை தவிர்ப்போம்...
    X

    சாலை விதிகளை மதிப்போம், விபத்தை தவிர்ப்போம்...

    என்னதான் சட்டமிருந்தாலும் பொறுப்பான பயணமே பாதுகாப்பான பயணம் என்பதை நாம் உணர்ந்து நடக்காதவரையிலும் விபத்துகளையும் உயிரிழப்புக்களையும் தடுக்க முடியாது.
    சாலை விபத்துகள் அதிகமாக ஏற்படும் மாநிலங்களில் தமிழகம் நாட்டிலேயே மூன்றாவது இடத்தில் உள்ளது. தேசியக் குற்றப் பதிவு ஆணையத்தின் ஆண்டறிக்கை பெரும்பாலான விபத்துகள் மனிதக் கவனக்குறைவினால் ஏற்படுவதாகக் கூறுகிறது. தற்போது இருசக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று போக்குவரத்து விதி உள்ளது .ஆனால் அதை யாரும் சரி வர கடைப்பிடிப்பதில்லை. அதேபோல் காரோட்டிகள் சீட் பெல்ட அணிய வேண்டும் என்பது முக்கிய அம்சம்.

    அனைத்துக் கார்களுமே பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுத்தே தயார் செய்யப்படுகின்றன. எனினும் பெரும்பாலான நேரங்களில் காரோட்டிகளும் பயணிகளும் கார்களில் உள்ளப் பாதுகாப்பு சாதனங்களைப் பயன்படுத்துவதில்லை, அலட்சியம் காட்டுகிறார்கள். இதுவே பெரும்பாலான விபத்துகளில் மரணம் ஏற்படக் காரணமாகி விடுகிறது. நவீனரக கார்களில் பல பாதுகாப்புச் சாதனங்களிருந்தாலும் அவற்றுள் மூன்று முக்கியமான சாதனங்கள் சீட்பெல்ட், கூடுதல் பாதுகாப்புக் காற்றுப்பை மற்றும் ஹெட்ரெஸ்ட் எனப்படும் தலைத்தாங்கி அணை ஆகியவை. அவை எப்படி உயிர்சேதத்தைத் தடுக்க உதவும் என்பதையும் பார்ப்போம்.

    முதலாவதாக சீட்பெல்ட். அணிந்து கொண்டு பயணம் செய்யும்போது விபத்து ஏற்பட்டால் சீட்பெல்ட் பயணியை இருக்கையோடு சேர்த்து இறுக்கி அணைத்துக் கொள்ளும். அதனால் விபத்து ஏற்படும் போது பயணி முன்பக்கமாகச் சாய்வது தடுக்கப்படுகிறது. பயணியின் தலை முன் இருக்கையின் மீதோ அல்லது வண்டியின் முன்பக்கத் தட்டிலோ மோதுவது தடுக்கப்படுகிறது.

    ஓட்டுநர் சீட்பெல்ட் அணிந்து கொள்ளும்போது விபத்து நடக்கும்போது முன்பக்கமாக சாய்வதால் அவரது தலையும் நெஞ்சும் வண்டியின் ஸ்டியரிங்கில் இடித்துக்கொள்வது தடுக்கப்படும். ஸ்டியரிங்கில் இடித்துக்கொள்ளும்போது தலைக்காயமும் நெஞ்செலும்புகளில் முறிவும் ஏற்படுவதால்தான் மரணம் ஏற்படுகிறது. அதனால்தான் சீட்பெல்ட் அணிவது கட்டாயமெனச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. எனினும் சீட்பெல்ட் அணியாமல் பயணம் செய்வது வாடிக்கையாகிவிட்டது.



    சீட்பெல்ட் அணிவது அசவுகரியமாக இருக்கிறதென்றும் வசதியாக இல்லையென்றும் நினைக்கிறோம். முதலில் சிறிது அசவுகரியமாக இருந்தாலும் உயிர்பாதுகாப்பிற்கு முக்கியம் என்பதால் பழகிக்கொள்ள வேண்டும். அதுபோலவே முன் இருக்கையில் அமர்பவர்தான் கட்டாயமாக சீட்பெல்ட் அணிய வேண்டும் பின் இருக்கைகளில் பயணம் செய்வோருக்கு அது தேவையில்லை என்று பலர் கருதுகின்றனர். இதுவும் தவறு. பின் இருக்கையில் பயணம் செய்வோர் விபத்து ஏற்படும்போது முன் இருக்கையில் மோதிக்கொள்ள நேரிடும், அதனால் பெரும் காயமோ, உயிர்ச்சேதமோ ஆகலாம்.

    அது போலவே பயணியர் பலர் பின் இருக்கையில் நன்றாகச் சாய்ந்து படுத்துத் தூங்கிக்கொண்டு செல்வதும் வாடிக்கையாகும். இது சரியான செயல் அல்ல. பின் இருக்கையில் பயணம் செய்வோரும் சீட்பெல்ட் அணிந்துகொண்டு அமர்ந்தவாறே பயணம் செய்வதுதான் சரியானதாகும். தூக்கம் வந்தாலும் சீட்பெல்ட் அணிந்து கொண்டு அமர்ந்தவாறே தூங்குவதுதான் நல்லது. ஏனெனில் படுத்துக்கொண்டு பயணிக்கும்போது விபத்து ஏற்பட்டால் வண்டி பக்கவாட்டில் இடிபடும்போது பயணியிக்குத் தலைக்காயம் ஏற்படும் வாய்ப்பு அதிகம். பெரும்பாலும் தலைக்காயங்களால் மரணம் ஏற்படும் வாய்ப்பும் அதிகம்.

    இரண்டாவதாக பாதுகாப்பு காற்றுப்பை. இது ஒரு கூடுதல் பாதுகாப்புச் சாதனம். கார் வாங்கும்போது ஓட்டுநர் மற்றும் பயணியருக்கான கூடுதல் பாதுகாப்பாக காற்றுப்பை இருக்கும் வண்டியை வாங்குவது நல்லது. விபத்து நடக்கும்போது காற்றுப் பைகள் தாமாகவே விரிந்துகொள்ளும். அதனால் பயணி வண்டியின் முன்பக்கத்திலோ அல்லது பக்கவாட்டிலோ இடித்துக்கொள்ள நேரிட்டாலும் காற்றுப்பையிலேயே மோதுவார். அது ஒரு தலையணையைப் போல மிருதுவாக இருப்பதால் பெரும் காயமோ உயிர்ச்சேதமோ ஏற்படுவதில்லை.



    என்னுடைய காரில் கூடுதல் பாதுகாப்புக் காற்றுப் பை உள்ளதால் சீட்பெல்ட் அணியாவிட்டால் ஒன்றும் ஆகாது என்றும் பலர் எண்ணுகின்றனர். அது தவறு. சீட்பெல்ட் அணிந்துகொண்டு அமரும் போதுதான் இந்தப் பாதுகாப்பு முழுமையாகக் கிட்டும். சீட்பெல்ட் அணியாமல் அமரும் போது காற்றுப்பை வெளிவந்து விரியும் வேகத்தோடு அதன்மீது மோதினால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிர்ச்சேதமாகும் வாய்ப்பு அதிகம். காரிலுள்ள காற்றுப்பைக் கூடுதல் பாதுகாப்புச் சாதனம்தான்.

    மூன்றாவதாக ஹெட்ரெஸ்ட் எனப்படும் தலை தாங்கி அணை. பெரும்பாலும் இதன் முக்கியத்துவம் சரியாக உணரப்படுவதில்லை. ஹெட்ரெஸ்ட் கழுத்துக்கும், தண்டுவடத்துக்கும் பெரும் பாதுகாப்பை அளிக்கிறது. வண்டியில் ஓட்டுநர் மற்றும் பயணியின் உயரத்துக்கேற்ப ஹெட்ரெஸ்டைச் சரியான அளவில் பொருத்திக்கொள்ளுதல் அவசியம்.

    விபத்து நேரத்தில் பயணியின் தலைப் பின்பக்கமாகச் சாயநேரிடும். வண்டியின் வேகத்தையும் மோதலின் தீவிரத்தையும் பொருத்து தலை பின்பக்கமாக சாயும் வேகம் அதிகரிக்கலாம். அதனால் கழுத்துப்பகுதியில் பெரும் காயமோ அல்லது கழுத்துமுறிவோ ஏற்படலாம். கழுத்துமுறிவினால் நிச்சயம் மரணம் ஏற்படும். ஹெட்ரெஸ்ட் சரியாகப் பொருந்தியிருந்தால் இதனைத் தடுக்கலாம். ஆனால் 90 சதவீத ஓட்டுனர்கள் இந்த விஷயத்தில் அலட்சியமாக இருக்கிறார்கள். பயணிகளுக்கோ இதுகுறித்த புரிதல் இல்லவேயில்லை என்பது வருத்தமளிக்கும் விஷயமாகும்.

    வண்டியிலுள்ளப் பாதுகாப்பு சாதனங்களைப்பற்றி நன்றாக அறிந்துகொள்வதும், அவற்றைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்வதும் அவசியமாகும். சீட்பெல்ட் அணியாமல் பயணிப்பது குற்றம் என்றும் அதற்கு அபராதம் விதிக்கப்படுகிறது என்றாலும் சட்டத்தால் மட்டுமே விபத்துகளைத் தடுத்துவிடமுடியாது. என்னதான் சட்டமிருந்தாலும் பொறுப்பான பயணமே பாதுகாப்பான பயணம் என்பதை நாம் உணர்ந்து நடக்காதவரையிலும் விபத்துகளையும் உயிரிழப்புக்களையும் தடுக்க முடியாது.

    சோ. கணேச சுப்ரமணியன், கல்வியாளர்
    Next Story
    ×