நீரிழிவு நோய் பாதிப்பை கட்டுப்படுத்தும் மூலிகைகள்!

அளவுக்கு மீறி உண்பது நீரிழிவு என்னும் சர்க்கரை நோய்க்கு காரணமாகும்.சர்க்கரை நோய் பாதிப்பால் உடலில் சுண்ணாம்பு, இரும்பு, நார்ச்சத்துக்கள் குறைந்து விடும்.
நீரிழிவு நோய் பாதிப்பை கட்டுப்படுத்தும் மூலிகைகள்!
Published on

ஒரு வேளை உண்பவன் யோகி, இரு வேளை உண்பவன் போகி, மூன்று வேளையும் உண்டவன் ரோகி. எனவே அளவறிந்து உண், பசித்து புசி என்ற பழமொழிகள் எல்லாம் உடலை நோயில் இருந்து காக்க கூறப்பட்டவை. அளவுக்கு மீறி உண்பது, அரிசியுடன் இறைச்சி, நெய் உள்பட உடலுக்கு மந்தம் தரும் உணவுகளை தொடர்ந்து அளவுக்கு மீறி உண்பது நீரிழிவு என்னும் சர்க்கரை நோய்க்கு காரணமாகும் என்கின்றன, சித்த நூல்கள்.

பொதுவாக, சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்காத நிலையில் கண் பார்வை குறைவு, கால்களில் ஆறாத புண் என்று பல பாதிப்புகள் தொடர்ந்து விடும். சர்க்கரை நோய் பாதிப்பால் உடலில் சுண்ணாம்பு, இரும்பு, நார்ச்சத்துக்கள் குறைந்து விடும்.

எனவே, நீரிழிவு நோயாளிகள் உணவில் வாழைப்பூ, பாகற்காய், வெந்தயம் ஆகியவற்றை அடிக்கடி உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிறது சித்த மருத்துவம். நீரிழிவு நோயை எளிதில் கட்டுப்படுத்த எளிய மருந்துகளையும் சொல்கிறது சித்த மருத்துவம்.

நாவல் மரத்தின் பட்டையை ஒரு நாள் முழுவதும் இரவில் நீரில் ஊற வைத்து அடுத்த நாள் காலையில் இந்த நீரை அருந்தினால் சர்க்கரை அளவு கட்டுப்படும். நாவல் கொட்டை, மருதம் பட்டை, சிறுகுறிஞ்சான், வேப்பம் பட்டை, கடலஞ்சில் ஆகிய ஐந்தையும் சம அளவு பொடி செய்து வைத்துக் கொண்டு காலை, இரவு ஆகிய நேரங்களில் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.

இதே போல், ஆவாரம்பூ, சுக்குடன் ஏலக்காய் சேர்த்து கொதிக்க வைத்த நீரை கசாயமாக சாப்பிடலாம். இது எளிய முறை. பொதுவாக, சர்க்கரை நோயாளிகள் உணவு மற்றும் மருந்துகளை டாக்டரின் ஆலோசனைப்படி உட்கொள்வதே பாதுகாப்பானது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com