என் மலர்
பொது மருத்துவம்

Health| நள்ளிரவில் திடீரென விழித்துக்கொள்கிறீர்களா?... தூக்க குறைபாட்டுக்கான காரணங்கள்
- மிகுந்த மன அழுத்தம் கொண்டிருந்தாலும் இரவில் திடீரென விழிப்பு ஏற்படும்.
- அமைதியான, வசதியான, குளிர்ச்சியான அறையில் தூங்கவும்.
உடலின் சமநிலையை பேணவும், உடல்-மன நிம்மதியை அளிக்கவும் தூக்கம் மிகவும் அவசியமானது. சோர்வில் இருந்து மீட்டெடுத்து, புதிய ஆற்றலை உடலுக்கும், உள்ளத்துக்கும் வழங்கும் மகத்தான சக்தி தூக்கத்திற்கு இருக்கிறது. ஆனால், இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையால் பலர் தூக்கக் குறைபாடு பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள். எந்தவித வெளிப்புற சத்தமோ அல்லது அலாரமோ இல்லாமல் இரவில் திடீரெனவோ, அடிக்கடியோ விழித்துக்கொள்வதும், மீண்டும் தூங்க முடியாமல் அவதிப்படுவதும் தூக்கம் பாதிக்கப்பட்டுள்ளதற்கான அடையாளமாக கருதப்படுகிறது.
ஆய்வு என்ன சொல்கிறது?
அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வின் படி, 35.5 சத வீதம் பேர் வாரத்தில் குறைந்தது மூன்று இரவுகள் இவ்வகை தூக்க இடையூறுகளை அனுபவிக்கிறார்கள். 23 சதவீதம் பேர் இரவில் திடீரென விழித்துக்கொள்வதாக தெரிவிக்கிறார்கள்.
நீங்கள் அடிக்கடி அதிகாலை 3 மணி அல்லது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தினமும் விழித்துக்கொண்டு, மீண்டும் தூங்க முடியாமல் சிரமப்படுவதை வாடிக்கையாக கொண்டால் அதற்குரிய மருத்துவ காரணங்கள் குறித்து பார்ப்போம்...
சர்க்காடியன் ரிதம் பாதிப்பு
மனித உடலில் உள்ள சர்க்காடியன் ரிதம் எனப்படும் உட்புற உயிரியல் கடிகாரம் பாதிக்கப்படும்போது, தூக்கத்தில் அடிக்கடி விழிப்பு ஏற்படலாம். ஒளி மற்றும் இருள் போன்ற சுற்றுச்சூழல் காரணிகளின் அடிப்படையில், இந்த உயிரியல் கடிகாரம் செயல்படுகிறது. இது பாதிப்புக்குள்ளாகும்போது, தூக்கத்திற்கு முக்கிய பங்கு வகிக்கும் மெலட்டோனின் ஹார்மோன் சுரப்பு குறையலாம். அதன் காரணமாக தூங்குவதில் சிரமம், அடிக்கடி கண் விழித்துக்கொள்வது, வழக்கத்தை விட முன்பே கண் விழித்தல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
ஒழுங்கற்ற தூக்க நேரம், சுற்றுச்சூழலில் நிலவும் அதிக சத்தம், அறை வெப்பநிலை சீரற்ற நிலையில் இருத்தல், மன அழுத்தம், நோய் பாதிப்பு, தூக்க கோளாறுகள், சில மருந்துகள், மின்னணு சாதனங்களை அதிகமாகப் பயன்படுத்துதல் உள்ளிட்டவை சர்க்காடியன் ரிதம் பாதிக்கப்படுவதற்கு முக்கிய காரணங்களாக அமைந்திருக்கின்றன. இந்த உயிரியல் கடிகாரம் நீண்ட காலம் பாதிக்கப்பட்டால், தூக்கக்கோளாறால் நீண்ட நாட்கள் தவித்தல், சோர்வு, உடல் எடை அதிகரிப்பு, நீரிழிவு, மன அழுத்தம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
தூக்க இடையூறுக்கான மற்ற காரணங்கள்
மிகுந்த மன அழுத்தம் கொண்டிருந்தாலும் இரவில் திடீரென விழிப்பு ஏற்படும். அப்படிப்பட்ட தூக்க குறைபாடு பிரச்சனை நீடித்தால் கார்டிசால் போன்ற மன அழுத்த ஹார்மோன்களின் சுரப்பு அதிகரித்து, தூக்கத்தை மேலும் பாதிக்கும். கவலை, பதற்றம் அதிகரித்தாலும் தூக்கத்தின் போது பயமுறுத்தும் கனவுகள் காணக்கூடும். அப்போது திடீரென விழிப்பு உண்டாகலாம். 'சிலீப் அப்னியா' எனப்படும் தூக்கத்தின்போது சுவாசம் அடிக்கடி தடைபடுவது அல்லது சுவாசம் குறைவது போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் குறட்டை, மூச்சுத்திணறல், பகலில் தூக்கம் கண்களை தழுவுதல், சோர்வு போன்ற அறிகுறிகள் வெளிப் படும்.
தூக்கத்தை மேம்படுத்த சில ஆலோசனைகள்
தினமும் இரவில் ஒரே நேரத்தில் தூங்கச் செல்லவும், காலையில் ஒரே நேரத்தில் விழிக்கவும்.
தூங்குவதற்கு முன்பு குறைந்தது 30 நிமிடம் மின்னணு சாதனங்களை தவிர்க்கவும்.
தூங்கும் முன்பு காபி, புகையிலை, மதுபானம் போன்றவற்றை தவிர்க்கவும்.
தினமும் உடற்பயிற்சி செய்யவும்.
அமைதியான, வசதியான, குளிர்ச்சியான அறையில் தூங்கவும்.
தூங்குவதற்கு முன்பு ஜீரணிக்க கடினமான உணவுகளை தவிர்க்கவும்.
இயற்கை சூரிய ஒளியை போதுமான அளவு பெறவும்.
படுக்கையறையை தூக்கம் மற்றும் தாம்பத்தியத்துக்கு மட்டுமே பயன்படுத்தவும்.
தியானம், சுவாச பாச பயிற்சி போன்ற தளர்வு முறைகளை பின்பற்றவும்.






