search icon
என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    வளர்இளம் பருவத்தை எட்டும் பெண் குழந்தைகளுக்கு தாய் சொல்லி கொடுக்க வேண்டியவை
    X

    வளர்இளம் பருவத்தை எட்டும் பெண் குழந்தைகளுக்கு தாய் சொல்லி கொடுக்க வேண்டியவை

    • தன்னுடலைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டிய அவசியத்தைப் புரியவைக்கலாம்.
    • தாயே குழந்தையின் தோழியாக மாற வேண்டும்.

    குழந்தைகளுக்குச் சரியான நேரத்தில் சரியான தகவலைச் சொல்லிக் கொடுக்க வேண்டியது அவசியம். பெற்றோர் உடலியல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். உடலியல் பற்றிய இந்தத் தகவல்களை ஆண் குழந்தைகளுக்கு அப்பாக்களும் பெண் குழந்தைகளுக்கு அம்மாக்களும் சொல்லிக்கொடுப்பது சிறப்பு.

    பெண் குழந்தைகள் வளர்இளம் பருவத்தை எட்டும்போதே அவர்களிடம் பருவம் அடைவது குறித்துப் பேச வேண்டும். அப்போது, உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து அறிமுகம் செய்யலாம்.

    பெற்றோர் கவனக்குறைவாகச் செய்யும் பல தவறுகள், குழந்தைகளை வேறு பாதைக்குக் கொண்டுசெல்கிறது. குழந்தைகளுக்கு நாம் கற்றுத்தரும் விஷயங்களின் ரோல்மாடலாக பெற்றோரே உள்ளனர். இதை ஒவ்வொரு பெற்றோரும் மனதில் கொள்ள வேண்டும். குளிப்பது, உடுத்துவது என்று பெற்றோரின் தனிமையை குழந்தைகளுக்கு மிகச்சிறு வயதில் இருந்தே புரிய வைக்க வேண்டும்.

    பருவம் அடைவது பெண்ணுடல் உற்பத்திக்குத் தயாராகும் நிகழ்வு, பெருமைக்குரியது என்ற எண்ணத்தை உருவாக்குவது அவசியம். பெரும்பாலான பெண் குழந்தைகள் இதைப் பற்றிய தெளிவின்மையால் அவதிப்படுகின்றனர். அப்போது ஏற்படும் வலி, வெளியேறும் ரத்தம் ஆகியவற்றை பிரச்சனையாக உணர்கின்றனர்.

    இந்த பயம் போக்க மருத்துவரீதியாக விளக்கம் அளிக்கலாம். இந்தக் காலகட்டத்தில் தன்னுடலைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டிய அவசியத்தைப் புரியவைக்கலாம். எப்படிச் சொல்வது எனத் தயங்காமல், தாயே குழந்தையின் தோழியாக மாற வேண்டும்.

    Next Story
    ×