search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருவாபரண பெட்டி ஊர்வலம் பந்தளத்தில் இருந்து சபரிமலைக்கு புறப்பட்டது
    X

    வலிய கோயிக்கல் சாஸ்தா கோவிலில் இருந்து புறப்பட்ட போது எடுத்த படம்.

    திருவாபரண பெட்டி ஊர்வலம் பந்தளத்தில் இருந்து சபரிமலைக்கு புறப்பட்டது

    • மகரவிளக்கு பூஜை மற்றும் ஜோதி தரிசனம் நாளை நடக்கிறது.
    • பொன்னம்பல மேட்டில் சாமி ஐயப்பன் 3 முறை பக்தர்களுக்கு ஜோதி வடிவில் காட்சியளிப்பார்.

    மண்டல பூஜை முடிவடைந்ததும் சபரிமலை கோவிலில் மகர விளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 30-ந் தேதி நடை திறக்கப்பட்டது. அன்று முதல் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. பக்தர்களும் ஐயப்பனை தரிசனம் செய்தும் வருகிறார்கள்.

    சிகர நிகழ்ச்சியாக மகரவிளக்கு பூஜை மற்றும் ஜோதி தரிசனம் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. மகர விளக்கு பூஜையின் போது ஐயப்பனுக்கு தங்க திருவாபரணங்கள் அணிவிக்கப்படும். இந்த திருவாபரணங்கள் வைக்கப்பட்டுள்ள சந்தனத்திலான பெட்டி பந்தளம் அரண்மனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

    இந்த திருவாபரணங்கள் நேற்று அதிகாலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அரண்மனையில் இருந்து பந்தளம் வலிய கோயிக்கல் சாஸ்தா கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜைக்கு பிறகு பகல் 11 மணி வரை திருவாபரண தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து நண்பகல் 12 மணிக்கு மேளதாளம் முழங்க, வானத்தில் கருடன் வட்டமடிக்க திருவாபரண ஊர்வலம் புறப்பட்டது.

    இந்த ஊர்வலம் ஐயப்பனின் பாரம்பரிய பெருவழிப் பாதையான எருமேலி, களைகட்டி, அழுதாமலை, முக்குழி, கரிமலை வழியாக நடைபயணமாக நாளை மதியம் பம்பை வந்தடையும். அங்கிருந்து பக்தர்களின் சரண கோஷம் முழங்க ஆபரண பெட்டிகள் நீலிமலை, சரம்குத்தி, மரக்கூட்டம் வழியாக மாலை 6.30 மணிக்கு சபரிமலைக்கு கொண்டு வரப்படும்.

    திருவாபரண பெட்டிகளுக்கு திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் 18-ம் படிக்கு கீழ் பகுதியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும். பின்னர் 18-ம் படி வழியாக சன்னிதானத்திற்கு கொண்டு வரப்பட்டு ஐயப்பனுக்கு திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து பொன்னம்பல மேட்டில் சாமி ஐயப்பன் 3 முறை பக்தர்களுக்கு ஜோதி வடிவில் காட்சியளிப்பார். அப்போது பக்தர்கள் சாமியே சரணம் ஐயப்பா என விண்ணதிர கோஷம் எழுப்புவார்கள்.

    முன்னதாக ஆபரண பெட்டிகள் எடுத்து வர வசதியாக அன்றைய தினம் பகல் 12 மணி முதல் பம்பையில் இருந்து ஐயப்ப பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும் ஐயப்பனுக்கு தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு பூஜை நிறைவடைந்த பிறகு இரவு 8 மணிக்கு பக்தர்கள் படியேற அனுமதிக்கப்படுவார்கள்.

    இதற்கிடையே பக்தர்களின் வருகை அதிகரித்து இருப்பதை தொடர்ந்து மகரவிளக்கு பூஜை அன்று மட்டும் உடனடி தரிசன முன்பதிவு கிடையாது என சபரிமலை சிறப்பு அதிகாரி விஷ்ணுராஜ் தெரிவித்தார்.

    Next Story
    ×