search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஸ்ரீகிருஷ்ண லீலைகள்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    ஸ்ரீகிருஷ்ண லீலைகள்

    • குச்சியினால் ஓட்டை செய்து, பால், தயிர் ஆகியவற்றைக் குடித்துவிட்டு ஓடுகிறான்.
    • சின்னஞ்சிறிய அந்த பவள வாய்க்குள் அண்ட சராசரங்களும் தெரிந்தன.

    * குழந்தையாக இருக்கும் போதே கிருஷ்ணன் தன்னை கொல்லவந்த பூதனை, சகடாசுரன், திருணாவர்த்தன் ஆகியோரை கொன்றான்.

    * குழந்தை பருவத்தில் கிருஷ்ணனும் பலராமனும் தவழ்ந்து சென்று பலவித லீலைகளில் ஈடுபட்டனர். மாடுகள் மற்றும் அவற்றின் கன்றுகள் இருக்கும் தொழுவத்துக்கு சென்று அவற்றின் வாலை பிடித்து இழுத்து விளையாடினர்.

    *ஆயர்குல சிறுவர்களை அழைத்துக்கொண்டு கோபியர்களின் வீடுகளுக்குச் சென்று யாரும் அறியா வண்ணம் பால், தயிர், வெண்ணெயை எடுத்து உண்டு மகிழ்ந்தார்கள்.

    * கோகுலத்து பெண்கள் ஸ்ரீகிருஷ்ணரை பிடிக்க முயற்சித்தும் முடியவில்லை. ஒருநாள் கோபியர்கள் யசோதையிடம் வந்து கிருஷ்ணரைப்பற்றிக் குறை கூறினார்கள்.

    'அம்மா! உங்கள் மகன் கிருஷ்ணன் எங்கள் வீடுகளில் புகுந்து வெண்ணெய் திருடித் தின்கிறான். உரலின் மீதேறி, உரியில் உள்ள பானைகளைக் குச்சியினால் ஓட்டை செய்து, பால், தயிர் ஆகியவற்றைக் குடித்துவிட்டு ஓடுகிறான்' என்று புகார் செய்தார்கள். ஸ்ரீகிருஷ்ணர் அப்பாவியாய் நடித்து தாயை நம்ப வைத்தார்.

    * ஒருமுறை வெண்ணெய் திருடும்பொழுது மதுகரவேணி என்ற பெண், கிருஷ்ணனை கையும் களவுமாகப் பிடித்து விட்டாள். யசோதையிடம் அழைத்துச் சென்றாள். அப்போது கிருஷ்ணன் அப்பெண்ணின் முகத்தில் கரி இருப்பதாகக் கூறினார். தான் துடைத்து விடுவதாகக் கூறினார். அதைக்கேட்ட மதுகரவேணி குனிந்து நின்றாள். உடனே, தன் கையில் இருந்த வெண்ணெயை அவளது கையிலும் வாயிலும் தடவி விட்டு தன் தாயான யசோதையை அழைத்தான்.

    அங்கு வந்த யசோதையிடம், 'அம்மா! இந்தப் பெண் தன் கணவனுக்குத் தெரியாமல் வெண்ணெ யைத் தின்று விட்டு என்மீது பழியைப் போடுகிறாள். இவளது வாயில் வெண்ணெய் ஒட்டிக்கொண்டு இருக்கிறது பார்' என்று கூறிக் காட்டினான். இதைக்கேட்ட யசோதை மதுகரவேணியைப் பார்த்து, 'நீ தவறு செய்துவிட்டு என் குழந்தைமீது பழி போடுகிறாயா?' என்று கேட்டாள். இதைக் கேட்ட மதுகர வேணி 'அம்மா உன் மகன் மாயாவி கிருஷ்ணன், என் வாயில் வெண்ணெ யைத் தடவி விட்டு ஏமாற்றுகிறான்' என்றாள். யசோதை, ஸ்ரீகிருஷ்ணன் சொன்னதையே நம்பினாள்.

    * ஒருமுறை கிருஷ்ணன் மண்ணைத் தின்று விட்டதாக, அவனுடைய தோழர்கள் யசோதையிடம் தெரிவித்தனர். யசோதை, 'கிருஷ்ணா! நீ மண்ணைத் தின்றாயா?' என்று அதட்டிக் கேட்டாள். 'இல்லை யம்மா' என்று அப்பாவிக் குழந்தைபோல் கண்ணன் மறுத்துக் கூறினான். ' அப்படியானால், வாயைத் திறந்துகாட்டு' என்றாள் யசோதை. கிருஷ்ணன், தன் பவளவாயைத் திறந்து காட்டினான். குழந்தை கிருஷ்ணன் வாய்க்குள் மண் இருக்கிறதா என்று பார்த்த யசோதைக்கு அதிசயம் காத்திருந்தது.

    சின்னஞ்சிறிய அந்த பவள வாய்க்குள் அண்ட சராசரங்களும் தெரிந்தன. அஷ்டதிக்குப் பாலகர்கள், சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், நவக்கிரகங்கள், தீவுகள், அஷ்ட நாகங்கள், தேவர்கள், மூவர்கள், முனிவர்கள், சித்தர்கள், மாடமாளி கைகள், கூட கோபுரங்கள் உட்பட உலகிலுள்ள அனைத்தும் தெரிந்தன. இந்த அதிசயத்தைக் கண்டு மயங்கி நின்றாள் யசோதை. பின் தனது மாயையால், இந்த நிகழ்ச்சியை யசோதையின் நினைப்பில் இருந்து நீங்கிடுமாறு செய்தான் கிருஷ்ணன். இது போன்று பால பருவத்தில் பல லீலைகளை கிருஷ்ணர் நிகழ்த்திக் காட்டினார்.

    Next Story
    ×