search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    குமாரநல்லூர் பகவதி அம்மன் வரலாறு
    X

    குமாரநல்லூர் பகவதி அம்மன் வரலாறு

    • பகவதியை பிரதிஷ்டை செய்ய விரும்பி ஒரு சிலை வடித்தார்.
    • பரசுராமர் வேதகிரி மலையில் தவம் இருந்தார்.

    பகவான் பரசுராமர் சகல சக்திகளும் நிறைந்த பகவதியை பிரதிஷ்டை செய்ய விரும்பி ஒரு சிலை வடித்தார். இதை நீரில் மூழ்க வைத்து வேதகிரி மலையில் தவம் இருந்தார்.

    கேரளாவை ஆண்டு வந்த சேரமான் பெருமாள் என்ற மன்னன் குமாரநல்லூரில் முருகனுக்கும், வைக்கத்தில் பகவதிக்கும் கோயில் அமைக்க முடிவு செய்தான்.

    அந்த நேரத்தில் மதுரை மீனாட்சி கோவிலில் அம்மனின் விலை மதிப்புள்ள மூக்குத்தியைக் காணவில்லை. அதை `41 நாட்களுக்குள் கண்டுபிடிக்க வேண்டும், இல்லாவிட்டால் சிறைச்சேதம் செய்யப்படுவீர்' என பூசாரி சாந்திதுவிஜனுக்கு மதுரை மன்னன் உத்தரவிட்டான்.

    ஆனால், பூசாரியால் அதைக் கண்டுபிடிக்கவில்லை. 41-வது நாள் கவலையுடன் மீனாட்சியின் காலில் விழுந்து தியானத்தில் மூழ்கினார். அப்போது அசரீரி தோன்றி, "இங்கிருந்து உடனடியாக கிளம்பிவிடு" என்றது.

    கண்விழித்த பூசாரியின் முன்னால் ஒரு ஒளி செல்ல, அதன்பின் அவர் மீனாட்சியின் திருநாமத்தை உச்சரித்தபடி சென்றார். இந்த பயணம் மதுரையைக் கடந்து கேரளாவைத் தொட்டது.

    குமாரநல்லூரில் முருகனுக்காக கட்டப்பட்டிருந்த கோயில் கருவறையில் அந்த ஒளி ஐக்கியமானது. அந்த நேரத்தில் முருகன் சிலை பிரதிஷ்டைக்குரிய பூஜைகள் நடந்து கொண்டிருந்தன.

    பிரதிஷ்டை நிகழ்ச்சிக்கு வந்திருந்த சேரமானின் காதுகளில், "குமரன் அல்ல ஊரில்" (ஊரில் குமரன் இல்லை) என்று அசரீரி ஒலித்தது.

    இதனால் கலங்கிப்போன மன்னன், முதலில் வைக்கத்தில் பகவதிக்கு சிலை பிரதிஷ்டையை முடித்து விட்டு அதன் பின் இங்கு வரலாம் என்று நினைத்துக்கொண்டு வைக்கம் நோக்கி சென்றான்.

    வைக்கத்திலும் பகவதிக்கு சிலை வைக்க முடியாமல் தடங்கல்கள் ஏற்பட்டது. முடிவாக குமாரநல்லூரில் பிரதிஷ்டை செய்ய இருந்த முருகனை வைக்கத்திலும், வைக்கத்தில் வைக்க இருந்த பகவதியை குமாரநல்லூரிலும் பிரதிஷ்டை செய்ய முடிவெடுக்கப்பட்டது.

    தொடர்ந்து, பரசுராமரால் வேதகிரி மலையில் செய்யப்பட்ட பகவதி சிலை கண்டுபிடிக்கப்பட்டு குமாரநல்லூர் கொண்டு வரப்பட்டது. பிரதிஷ்டை செய்யும் நேரம் நெருங்கியது.

    அப்போது அதிசயிக்கும் வகையில், காவி உடை மற்றும் சடைமுடி கோலத்துடன் ஒரு சன்னியாசி கருவறையில் நுழைந்தார். பகவதி சிலையை பிரதிஷ்டை செய்து விட்டு திடீரென மாயமானார். இவர் பரசுராமர் என தல புராணம் கூறுகிறது.

    மதுரையில் இருந்து தெய்வீக ஒளியால் அழைத்து வரப்பட்ட சாந்திதுவிஜன் கோவில் பூசாரியானார். இவரது வாரிசுகள் இன்றும் கோவில் அருகே தங்கியிருந்து பூஜைகளை மேற்பார்வை செய்து வருகின்றனர்.

    2 ஆயிரத்து 400 ஆண்டுகள் பழமையானதும், 108 துர்க்கை திருத்தலங்களில் முக்கியமானதுமான இக்கோயிலில் நுழைந்தாலே பக்தர்களின் துயரம் தூர விலகி விடுகிறது. கேரளாவில் பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட தலங்களில் இதுவும் ஒன்று.

    இத்தலத்திற்கு அருகில் அற்புத நாராயணன் திருக்கோவில், மகாதேவர் திருக்கோவில், மள்ளியூர் மகா கணபதி திருக்கோவில், கடுத்துருத்தி சிவன் திருக்கோவில், சுப்ரமணியர் திருக்கோவில் ஆகிய திருத்தலங்கள் அமைந்துள்ளது.

    கார்த்திகையில் 10 நாள் திருவிழா சிறப்பாக நடக்கிறது. திருவிழாவின் ஒன்பதாம் நாளான திருக்கார்த்திகை அன்று மதியம் ஆராட்டு பூஜை நடக்கிறது. இந்த பூஜையைக்காண திருச்சூரிலிருந்து வடக்குநாதரே வருகை தருவதாக ஐதீகம்.

    விழா நாட்களில் பகவதி எழுந்தருளும் நிகழ்ச்சியில் பெண் யானைகள் மட்டுமே பயன்படுத்தப்படும். இது தவிர, நவராத்திரி, பங்குனி பூரம், கொடிமர பிரதிஷ்டை தினம் ஆகியவை முக்கிய விழாக்களாகும். மலையாள மாத முதல் தேதி, செவ்வாய், வெள்ளி, கார்த்திகை நட்சத்திர நாட்களில் சிறப்பு பூஜை செய்யப்படுகிறது.

    நீண்டகாலம் திருமணத்தில் தடை உள்ளவர்கள் இத்தலத்தில் ``சுயம்வர புஷ்பாஞ்சலி" என்ற பூஜை நடத்தினால் உடனடியாக திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை.

    அம்மன் இங்கு கன்னியாக அருள்பாலிப்பதால்ம் ``மஞ்சள் நீராட்டு" முக்கிய வழிபாடு. குலம் சிறப்பாக வாழவும், குழந்தை பாக்கியம் வேண்டியும், கல்வி சிறக்கவும், நோய்கள் தீரவும் இந்த வழிபாடு செய்யப்படுகிறது.

    குடும்பத்தில் பிரச்சினை நீங்கி, தம்பதிகளின் ஒற்றுமையான வாழ்க்கைக்காக அம்மனுக்கு பட்டு, தாலி சாத்தப்படுகிறது. அம்மனின் பரிபூரண அருள் வேண்டி கோவில் நடையில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்யப்படுகிறது.

    ஆராட்டு ஊர்வலம்

    கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் குமாரநல்லூர் தேவி கோவிலில் கார்த்திகை திருவிழாவைெயாட்டி நேற்று ஆராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக சாமி அலங்கரிக்கப்பட்ட யானை மீது எழுந்தருளி ஊர்வலமாக ஆராட்டுக்கு புறப்பட்டது

    அமைவிடம்

    அருள்மிகு பகவதி திருக்கோயில், குமாரநல்லூர் – 680664, கோட்டயம் மாவட்டம், கேரளா மாநிலம்.

    திறக்கும்நேரம்:

    காலை 4 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்

    Next Story
    ×