search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வெற்றியை வழங்கும் விஜயதசமி விரத வழிபாடு
    X

    வெற்றியை வழங்கும் விஜயதசமி விரத வழிபாடு

    புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரியின் 10-ம் நாளில் மகிஷாசூரனை அம்மன் வதம் செய்த நிகழ்வை விஜயசதமி என்ற பெயரில் விரதம் இருந்து கொண்டாடுகிறார்கள்.
    புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரியின் 9 நாட்களும் அம்மனை பல்வேறு ரூபங்களில் வழிபடுவார்கள். தொடர்ந்து 10-ம் நாளில் மகிஷாசூரனை அம்மன் வதம் செய்த நிகழ்வை விஜயசதமி என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள்.

    மகிஷன் என்ற அசுரன், பிரம்மனை நோக்கி கடுமையான தவம் இருந்தான். அவனது தவத்திற்கு இரங்கிய பிரம்மன், மகிஷன் முன்பாக போய் நின்றார். பிரம்மனைக் கண்டதும் மகிஷன் மனம் மகிழ்ந்தான். தனக்கு அழிவில்லா வரத்தைத் தருமாறு பிரம்மதேவரிடம் அசுரன் கேட்டான்.

    ‘பிறந்த அனைவருக்கும் இறப்பு நிச்சயம். எனவே வேறு வரம் கேள்’ என்றார் பிரம்மன்.

    இதையடுத்து, ‘எனக்கு அழிவு வந்தால், அது பெண்ணாலேயே வர வேண்டும்’ என்ற வரத்தை மகிஷன் கேட்டான்.

    பிரம்மதேவரும் அப்படியே வரம் அருளி மறைந்தார். மகிஷனின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. பெண்கள் மென்மையானவர்கள். எனவே அவர் களால் நமக்கு ஆபத்து வர வாய்ப்பில்லை என்பது அவனது எண்ணமாக இருந்தது. அந்த தைரியத்தில் தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள் என அனைவரையும் கொடுமைப்படுத்தினான்.

    மகிஷனின் தொல்லை தாங்காமல் தேவர்கள் அனைவரும் துன்பத்தில் ஆழ்ந்தனர். துன்பம் எல்லை கடந்ததால் அவர்கள் மகாவிஷ்ணுவிடம் சென்று மகிஷனிடம் இருந்து தங்களைக் காத்தருளும்படி வேண்டி நின்றனர். ‘மகிஷனுக்கு பெண்ணால்தான் மரணம் என்று உள்ளது. எனவே நீங்கள் அன்னை பராசக்தியிடம் சென்று வேண்டுங்கள்’ என்று கூறி தேவர்களை அனுப்பிவைத்தார் மகாவிஷ்ணு.

    தேவர்கள் சக்தியை நோக்கி வழிபட்டனர். அதன் பயனாக அவர்கள் முன்பு மகாலட்சுமி தோன்றினாள். ‘மகாலட்சுமி’ என்பதற்கு எல்லாவிதமான லட்சணங்களையும் கொண்டவள் என்பது பொருளாகும். அவளிடம் தேவர்கள் வைத்த வேண்டுகோளுக்கு இணங்க, தேவர்களை காக்கும் பொருட்டு தேவியானவள் போருக்கு ஆயத்தம் ஆனாள்.

    சிவபெருமான், அன்னைக்கு சூலத்தை வழங்க, விஷ்ணு பகவான் சக்கரத்தை கொடுத்தார். அக்னி தனது சக்தியையும், வாயு வில்லாயுதத்தையும் வழங்கினர். இப்படியாக ஒவ்வொருவரும் அவரவர் ஆயுதத்தை வழங்கினர். அவற்றைப் பெற்றுக்கொண்ட அன்னை, மகிஷாசுரனை அழிப்பதற்காக புறப்பட்டுச் சென்றாள்.

    போர்க்களம் புகுந்ததும் தன் முன் நின்ற மகிஷனைப் பார்த்து அன்னைக்கு இரக்கம் ஏற்பட்டது. அவனைக் கொல்வதை விடுத்து முதலில் பாசத்தை வீசி தன் வசப்படுத்த நினைத்தாள். ஆனால் அது முடியாமல் போனது. ஏனெனில் தீயவை எதுவும் நல்லதை விரும்பாது. என்ன செய்தாலும் அது தீவினையை மட்டுமே சார்ந்திருக்கும். அதற்கு அழிவு மட்டுமே முடிவு என்பதை உணர்ந்து கொண்ட அன்னை, 9 நாட்கள் போரிட்டு 10-ம் நாளில் மகிஷாசூரனை அழித்தாள். அப்போது தேவர்கள் அனைவரும் மேலுலகில் நின்று பொம்மை போல் பார்த்துக் கொண்டிருந்தனர். அதில் இருந்துதான் கொலு வைக்கும் வழக்கம் ஏற்பட்டதாகவும் ஒரு கூற்று நிலவுகிறது.

    கொடியவனான மகிஷாசூரன் அழிந்ததால் தேவர்கள் அனைவரும் மகிழ்ந்தார்கள். மகிஷாசூரன் அழிந்த தினத்தை, அன்னை வெற்றி பெற்ற நாளை விஜயதசமியாக கொண்டாடிவருகிறோம். இந்தியாவில் ‘தசரா’ என்ற பெயரில் இந்த விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.

    எந்தச் செயலைச் செய்தாலும் அதில் வெற்றி பெற வேண்டும் என்றே அனைவரும் விரும்புவார்கள். அந்த வெற்றியை தந்தருளும் நாளாக விஜயதசமி தினம் திகழ்கிறது. கல்வி, கலைகளை கற்க விரும்புபவர்கள் இந்நாளில் தொடங்குவது வழக்கம். இந்நாளில், குழந்தைகளுக்கு எழுத்துப்பயிற்சி தொடங்கினால் கல்வியில் சிறந்து விளங்குவர் என்பது அனைவரது நம்பிக்கை. படிப்பு மட்டுமில்லாமல் சுப விஷயங்களையும் இன்று தொடங்கினால், எளிதில் வெற்றி பெறலாம்.

    பொதுவாக கோவில்களில் வில்வம், வேம்பு, அரச மரங்களைப் பார்க்கலாம். இதில் அரசமரத்தை மட்டுமே வலம் வருவது மரபு. ஆனால், விஜயதசமியன்று வன்னி மரத்தை வலம் வந்தால் சிறந்த பலன் கிடைக்கும். பாண்டவர்கள் காட்டில் மறைந்து வாழும் போது, நவராத்திரி காலம் வந்தது. அவர்கள் தங்களது ஆயுதங்களை வன்னி மரம் ஒன்றின் கீழ் ஒளித்து வைத்தனர். பத்தாம் நாள் பராசக்தியை வழிபட்ட பிறகு ஆயுதங்களை எடுத்துக் கொண்டு போருக்கு புறப்பட்டனர். அந்த நாளே விஜயதசமி. இந்த நாளில் வன்னி மரத்தை 21 முறை வலம் வந்தால் நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பது ஐதீகம்.
    Next Story
    ×