என் மலர்tooltip icon

    இஸ்லாம்

    உங்களில் எவர் இறையச்சம் உடையவராக இருக்கின்றாரோ, அவர்தான் அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக மிகக் கண்ணியமானவர்.
    நபி முஹம்மது (ஸல்) அவர்கள் மக்காவை வெற்றி கொண்டு, கஅபாவினுள் நுழைந்து கதவை தாழிட்டுத் தொழுதுவிட்டு, பின்பு கதவைத் திறந்தார்கள். குறைஷிகள் பள்ளிக்கு வெளியில் கூடி நின்று நபி(ஸல்) என்ன செய்யப் போகிறார்கள் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

    அத்தருணத்தில் நபி(ஸல்) ஓர் உரையை நிகழ்த்தினார்கள், “வழிப்பாட்டுக்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவன் தனித்தவன். அவனுக்கு எவ்விதத் துணையுமில்லை. அவன் நமக்குத் தந்த வாக்கை நிறைவேற்றினான். தன் அடியாருக்கு உதவி செய்தான். அவனே ராணுவங்கள் அனைத்தையும் தனியாகத் தோற்கடித்தான்.

    இதுவரை நடைமுறையில் இருந்து வந்த அல்லாஹ்வின் இந்த இல்லத்தைப் பராமரிப்பது, ஹாஜிகளுக்குத் தண்ணீர் புகட்டுவது ஆகிய இவ்விரண்டைத் தவிர ஏனைய அனைத்து சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் எனது இவ்விரண்டு கால்களுக்குக் கீழ் புதைத்து விட்டேன் என்பதை அறிந்து கொள்ளுங்கள். குறைஷிக் கூட்டமே! அறியாமைக் காலத்தில் நீங்கள் கடைப்பிடித்த மூடத்தனமான பழக்க வழக்கங்களையும் முன்னோர்களைக் கொண்டு பெருமையடித்து வந்ததையும் இப்பொழுது உங்களை விட்டு அல்லாஹ் போக்கி விட்டான் மக்கள் அனைவரும் ஆதமிடமிருந்து வந்தவர்கள் ஆதம் மண்ணால் படைக்கப்பட்டவர்”.



    நபி(ஸல்) அவர்கள் தமது உரையின் தொடர்ச்சியாகத் திருக்குர்ஆனின் வசனத்தைக் குறைஷிகளுக்கு ஓதிக் காட்டினார்கள் “மனிதர்களே! உங்கள் அனைவரையும் நாம் ஒரே ஆண், ஒரே பெண்ணிலிருந்துதான் படைத்தோம். ஒருவர் மற்றவரை அறிந்து கொள்ளும் பொருட்டு, உங்களைக் கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் எவர் இறையச்சம் உடையவராக இருக்கின்றாரோ, அவர்தான் அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக மிகக் கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவனாகவும் நன்கு தெரிந்தவனாகவும் இருக்கின்றான்”. (குர்ஆன் 49:13)

    உரையை முடித்த நபி(ஸல்) அவர்கள் குறைஹிகளை நோக்கி, “நான் உங்களுக்கு யூஸுஃப் நபி தனது சகோதரருக்குக் கூறியதைப் போன்றுதான் கூறுவேன். நீங்கள் எவ்விதத்திலும் பழிக்கப்பட மாட்டீர்கள். நீங்கள் மன்னிக்கப்பட்டவர்கள். நீங்கள் செல்லலாம்” என்று கூறினார்கள்.

    நபி (ஸல்) அவர்கள், உஸ்மானிடம் சாவியை ஒப்படைத்து, “இதை நீங்கள் பெற்றுக் கொள்ளுங்கள். இது உங்களிடம் காலம் காலமாக இருக்கட்டும். உங்களிடமிருந்து இச்சாவியை ஓர் அநியாயக்காரனைத் தவிர வேறெவரும் பறிக்க இயலாது. உஸ்மானே! நிச்சயமாக அல்லாஹ் உங்களைத் தனது வீட்டிற்கு நம்பிக்கைக்குரிய பொறுப்பாளியாக நியமித்திருக்கின்றான். இந்தக் கஅபாவின் மூலம் நல்வழியில் உங்களுக்குக் கிடைக்கும் பொருட்களை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.

    ஸஹீஹ் புகாரி 1:8:468, திருக்குர்ஆன் 49:13, அர்ரஹீக் அல்மக்தூம்

    - ஜெஸிலா பானு.
    இஸ்லாமியர்கள் தங்கள் வாழ்நாளில் ஒரு தடவையாவது மெக்காவுக்கு புனித யாத்திரை செல்ல வேண்டும் என்பது 5 முக்கிய கடமைகளில் ஒன்றாக கூறப்பட்டுள்ளது.
    இஸ்லாமிய மக்களின் புனித ஸ்தலமாக இருப்பது மெக்கா மசூதி.சவுதி அரேபியா நாட்டில் இறை தூதர் முகமது நபியின் சொந்த ஊரான மெக்கா நகரில் இந்த மசூதி அமைந்துள்ளது.

    இஸ்லாமியர்கள் தங்கள் வாழ்நாளில் ஒரு தடவையாவது மெக்காவுக்கு புனித யாத்திரை செல்ல வேண்டும் என்பது 5 முக்கிய கடமைகளில் ஒன்றாக கூறப்பட்டுள்ளது. எனவே, மெக்காவுக்கு உலகம் முழுவதும் இருந்து முஸ்லிம்கள் புனித யாத்திரை வருகின்றனர்.

    இதனால் தினமும் லட்சக்கணக்கானோர் மெக்காவுக்கு வருகின்றனர். புனித ஹஜ் யாத்திரை மாதத்தில் 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வருகின்றனர். உலகிலேயே அதிகம் பேர் வரும் வழிபாட்டு ஸ்தலமாக மெக்கா மசூதி உள்ளது. அத்துடன் உலகிலேயே பெரிய மசூதியாகவும் இந்த மசூதி இருக்கிறது.

    தற்போது 38 லட்சத்து 30 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் மசூதி அமைந்துள்ளது. அதை மேலும் விரிவுபடுத்தி கட்டி வருகிறார்கள். இதனால் மிக பிரமாண்ட மசூதியாக மெக்கா மசூதி அமைய உள்ளது. மெக்கா மசூதி ஆரம்பத்தில் சிறு வழிபாட்டு தளமாக இருந்து வந்தது. பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததால் ஒவ்வொரு கால கட்டத்திலும் அதை விஸ்தரித்து கட்டி வந்துள்ளனர்.

    கி.மு. 2130-ம் ஆண்டு வாக்கிலேயே இந்த இடத்தில் வழிபாட்டு தளம் இருந்திருக்கிறது. இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்ட இப்ராகீம் நபி முதலில் இங்கு வழிபாட்டு தளத்தை கட்டியுள்ளார். இறைவன் அடையாளம் காட்டிய இடத்தில் இப்ராகிம் நபி தனது மகன் இஸ்மாயில் உதவியுடன் அங்கு புனித இடமான காபாவை கட்டி அதை ஒட்டி வழிபாட்டு தளத்தை அமைத்தார். அங்கு தொடர்ந்து வழிபாடுகள் நடந்து வந்தன.

    இந்த நிலையில் மெக்காவில் பிறந்த இறை தூதரான முகமது நபி மதீனா சென்று விட்டு பல வெற்றிகளுடன் கி.பி. 630-ல் மெக்கா திரும்பினார். முகமது நபியும், அவரது மருமகன் அலி அபுதலீப்பும் சேர்ந்து வழிபாட்டு தளத்தை சீரமைத்து மசூதியை அமைத்தனர். அதை தொடர்ந்து மெக்கா மசூதி முக்கிய இடமாக மாறியது. எல்லா இடங்களில் இருந்தும் பக்தர்கள் இங்கு வந்து வழிபாடு செய்தனர்.

    இதன் பின்னர் அப்த் அல் மாலிக் கி.பி. 692-ல் மசூதியை மிகப்பெரிய அளவில் சீரமைத்தார். பக்கவாட்டு பகுதியை விஸ்தரித்து மசூதி கட்டப்பட்டது. அதன் பிறகு இயற்கை சீற்றங்கள் போன்றவற்றால் மசூதி கட்டுமானம் பாதிக்கப்பட்டது. இதனால் ஒவ்வொரு காலகட்டத்திலும் இவற்றை சீரமைத்து வந்தனர்.

    8-ம் நூற்றாண்டு வரை மசூதி மரத்தூண்கள் அமைத்து அதன் மூலம்தான் உருவாக்கப்பட்டு இருந்தது. அப்போது நடந்த சீரமைப்பு பணியின் போது, மரத்தூண்கள் எல்லாம் அகற்றப்பட்டு மார்பல் கற்கள் தூண் கொண்டு கட்டுமான பணி நடந்தது. அப்போது இன்னும் விரிவுபடுத்தி கட்டினார்கள். மசூதியின் இருபக்கத்திலும் பிரார்த்தனை கூடம் தனியாக அமைக்கப்பட்டது.

    அப்போது மசூதியில் ஒரு கோபுரமும் கட்டப்பட்டது. அதன்பிறகு மீண்டும் நடந்த கட்டுமான பணிகளின் போது கூடுதலாக மேலும் 3 கோபுரங்கள் கட்டப்பட்டன.

    1570-ல் துருக்கியின் ஒட்டாமான் மன்னர்கள் கட்டுப்பாட்டின் கீழ் மெக்கா இருந்தது. அப்போது மன்னராக இருந்த சுல்தான் 2-ம் சலீம் மசூதியை பிரமாண்டமாக விரிவுபடுத்தி கட்டினார். மசூதியின் தூண்கள் அனைத்தும் அகற்றப்பட்டதுடன் மேற்கூரையும் அகற்றப்பட்டு புதிய வடிவமைப்புடன் கட்டப்பட்டது. கூரை மேல் பகுதியில் புதிதாக பிரமாண்ட குவிமாடம் (டூம்’)அமைக்கப்பட்டது.

    1621, 1629-ம் ஆண்டுகளில் பெய்த பலத்த மழை காரணமாக மசூதியின் மதில் சுவர் மற்றும் உள்கட்டுமான பகுதிகள் பாதிக்கப்பட்டது. அப்போது ஒட்டாமான் மன்னராக இருந்த சுலதான் 5-ம் முராத் மசூதி முழுவதையும் சீரமைத்தார். அப்போது ‘காபா’வும் மாற்றி அமைத்து பளிங்கு கற்களால் கட்டப்பட்டது. மசூதி முழுவதும் புதிய பளிங்கு கற்கள் பதித்து மாற்றி அமைக்கப்பட்டது. பக்தர்கள் நடந்து வர நீண்ட நடைபாதையும் உருவாக்கப்பட்டது. மசூதி தரைப்பகுதி முழுவதும் மார்பல் கற்கள் பதிக்கப்பட்டது.

    மேலும் மசூதியில் 3 கோபுரங்களையும் மன்னர் முராத் கட்டினார். இதனால் மெக்கா மசூதி கோபுரங்களின் எண்ணிக்கை 7 ஆனது. இந்த சீரமைப்புக்கு பிறகு மசூதி மிகவும் அழகாக காணப்பட்டது. பக்தர்கள் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்து இருந்தது.

    அதன் பிறகு 300 ஆண்டுகளாக மசூதியில் எந்த பெரிய சீரமைப்பு பணிகளும் நடக்கவில்லை. ஆனாலும், ஒவ்வொரு ஆண்டும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வந்த நிலையில் 1955-ல் பெரிய அளவில் மசூதியை சீரமைக்கும் பணி நடந்தது. பக்தர்களுக்கு புதிய வசதிகளும் ஏற்படுத்தப்பட்டன.

    பின்னர் 1973-ம் ஆண்டும் சீரமைப்பு பணிகள் நடந்தன. புதிதாக 4 கோபுரங்கள் கட்டப்பட்டது. இதன் மூலம் மசூதியின் கோபுரங்களின் எண்ணிக்கை 11 ஆனது. கூரையிலும் மாற்றம் செய்யப்பட்டது. ஒட்டாமான் மன்னர்கள் காலத்தில் அமைக்கப்பட்ட தூண்கள் இடிக்கப்பட்டு புதிய தூண்கள் அமைக்கப்பட்டன.

    அடுத்து சவுதி அரேபிய மன்னர் பகத் 1982-லும், 1988-லும் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டார். அப்போது மசூதிக்கு வெளியிலும் பிரார்த்தனை கூடங்கள் அமைக்கப்பட்டன. பின்னர் 2005-ம் ஆண்டிலும் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது 3-வது பிரார்த்தனை கூடம் அமைத்தனர். மேலும் மசூதிக்கு உள்ளே செல்ல 18 புதிய வாசல்களும் அமைக்கப்பட்டன. புதிதாக 3 குவிமாடம் அமைக்கப்பட்டது.



    எவ்வளவு விரிவு செய்து கட்டினாலும் பக்தர்கள் வருகை தொடர்ந்து அதிகரித்து வந்ததால் மசூதியை பிரமாண்டமாக விரிவுபடுத்தி கட்ட மன்னர் அப்துல்லா அப்துல் அசிஸ் முடிவு செய்தார். இதன்படி மிகப்பெரிய சீரமைப்பு பணி 2007-ம் ஆண்டு தொடங்கியது. மசூதியின் உள்பகுதி, வெளிப்பகுதி என அனைத்தும் மாற்றி அமைத்து விரிவாக்கம் செய்து கட்டப்பட்டு வருகிறது. 2 புதிய பிரமாண்ட கோபுரங்களும் கட்டப்பட உள்ளன.

    இந்த சீரமைப்பு பணி 2020-ம் ஆண்டு வரை தொடர்ந்து நடைபெற உள்ளது. இதற்காக மட்டும் ரூ.6 லட்சத்து 50 ஆயிரம் கோடி செலவிடப்பட உள்ளது. உலகிலேயே தனி ஒரு கட்டிடத்துக்காக அதிக தொகை செலவிடப்படுவது இங்குதான் என்பது குறிப்பிடத்தக்கது. முழு விரிவாக்க பணி முடிந்ததும் ஒட்டு மொத்த மசூதி பகுதியும் 4 லட்சத்து 90 ஆயிரம் சதுர அடியாக விரிவடையும்.

    உலகிலேயே அமெரிக்காவில் உள்ள போயிங் விமான நிறுவனத்தின் கட்டிடம்தான் பெரியதாகும். அதற்கு அடுத்து பெரிய கட்டுமான இடமாக மெக்கா மசூதி இருக்கும். சுமார் 25 லட்சம் பக்தர்களுக்கு ஒரே நேரத்தில் இடம் அளிக்கும் வகையில் மசூதி விரிவாக்கம் செய்யப்படுகிறது. மசூதி முற்றத்தில் மட்டும் ஒரே நேரத்தில் 2½ லட்சம் நின்று வழிபாடு செய்ய முடியும்.

    மசூதி விரிவாக்கம் செய்வதுடன் உள் அலங்காரங்களும் சிறப்பாக செய்யப்பட்டு வருகின்றன. முழு பணிகளும் முடிந்த பிறகு மெக்கா மசூதி மிக பிரமிப்பை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    புனித காபா  :

    மெக்கா மசூதியில் அமைந்துள்ள புனித ‘காபா’தான் முக்கிய இடமாகும். மெக்கா மசூதிக்கு செல்பவர்கள் காபாவை 7 முறை வலம் வந்து வழிபடுவார்கள்.

    காபா பளிங்கு கற்களால் கட்டப்பட்டுள்ளது. முதலில் இந்த இடத்தில் வழிபாட்டு தளம் கட்டப்பட்ட போது காபாதான் கட்டப்பட்டது. இதை சுற்றி பின்னர் மசூதி கட்டப்பட்டது.

    உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் இந்த காபாவை நோக்கி தான் வழிபடுகிறார்கள்.

    காபாவின் உயரம் 43 அடி. அகலம் ஒரு பகுதியில் 36 அடியும், மற்றொரு பகுதியில் 42 அடியும் உள்ளது. இதன் வாசலில் 7 அடி உயர கதவு உள்ளது. இது, 300 கிலோ தங்கத்தால் ஆனது.

    உள் பகுதியில் மன்னர் மற்றும் முக்கிய நபர்கள் மட்டும் குறிப்பிட்ட நாளில் அனுமதிக்கப்படுகிறார்கள். காபாவின் ஒரு மூலையில் கருப்பு விசே‌ஷ பளிங்கு கல் வைக்கப்பட்டுள்ளது. இது, விண்ணில் இருந்து வந்த கல் என்று கூறுகின்றனர்.

    காபாவுக்கு ‘ஜம் ஜம்’ என்ற புனித கிணறு உள்ளது. இது, இப்ராகிம் வழிபாட்டு தளம் கட்டிய போதே இருந்த நீரூற்று ஆகும். இத்தனை ஆண்டுகள் கடந்தும் இன்றும் இதில் தண்ணீர் உள்ளது. யாத்திரை வரும் பக்தர்கள் இந்த கிணற்றில் உள்ள நீரை தங்கள் வீட்டுக்கு புனித நீராக எடுத்து செல்கிறார்கள்.
    பாவங்களை மன்னித்து, பாவ அழுக்குகளிலிருந்து மனிதனை தூய்மைப்படுத்த சிலருக்கு வியாதிகளை கொடுத்து இறைவன் சோதிக்கின்றான்.
    நோய் விஷயத்தில் பிரார்த்தனை என்பது இரண்டு விதமாக அமைந்துள்ளது. ஒன்று, நோயாளி தமது நோய் நீங்கிட தானே இறைவனிடம் பிரார்த்தனை புரிவது. இரண்டாவது, நோயாளிகளுக்காக, அவர்கள் குணமடைய மற்றவர்கள் பிரார்த்திப்பது.

    நபி இப்ராகீம் (அலை) அவர்கள் நோயுற்றபோது, தமது இறைவனிடம் அவர்கள் நிவாரணம் வேண்டி முறையிட்டதை இறைவன் பின்வருமாறு தெரிவிக்கின்றான்:

    ‘நான் நோயுறும் போது அவனே எனக்கு நிவாரணம் தருகின்றான்’. (திருக்குர்ஆன் 26:80)

    மேலும், நபி அயூப் (அலை) அவர்கள் கடுமையாக நோயுற்றபோது, தமது நோய் நீங்கிட, குணம் கிடைத்திட தமது இறைவனிடம் பிரார்த்தித்து, அதன் வாயிலாக அவர் நலம் பெற்றதை இறைவன் பின்வருமாறு கூறுகின்றான்:

    “இன்னும், அயூப் (அலை) தம் இறைவனிடம் ‘நிச்சயமாக என்னை (நோயினாலான) துன்பம் தீண்டியுள்ளது; (இறைவனே!) நீயே கருணையாளர்களுக்கெல்லாம் மிகக் கருணையாளன்’ என்று பிரார்த்தித்த போது, நாம் அவருடைய பிரார்த் தனையை ஏற்றுக்கொண்டோம்; அவருக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்கிவிட்டோம்; அவரது குடும்பத்தாரையும், அவர்களுடன் அவர்களைப் போன்றோரையும் நம் அருளாக அவருக்கு வழங்கினோம். வணங்குவோருக்கு இது அறிவுரை”. (21:83,84)

    ஒரு நோயாளி தமக்கு ஏற்பட்டுள்ள நோய் குறித்து இறைவனிடம் பிரார்த்திக்கும் போது, அவரின் நோயை இறைவன் கண்டிப்பாக குணமளிப்பான் என்பது மேற் கூறிய இறைவசனங்களிலிருந்து உண்மையாகிறது.

    நோயாளிகளை நலம் விசாரிப்பது நபி வழியே

    நோயாளிகளை நலம் விசாரிப்பது நபி வழியாகவும், இஸ்லாமிய அடிப்படை மரபு வழியாகவும் உள்ளது. நோயாளிகளை நோயாளிகளாக மட்டுமே பார்க்க வேண்டும். அவர் என்ன சாதி? அவர் என்ன மதம்? அவர் நிறம் என்ன? அவர் மொழி என்ன? அவர் ஏழையா? அவர் பணக்காரரா? அவர் சிறியவரா? அவர் பெரியவரா? என்றெல்லாம் பார்க்கக்கூடாது. இத்தகைய உயர்ந்த பண்பாட்டை உத்தம நபி (ஸல்) அவர்கள் உலகத்தாருக்கு கற்றுத்தருகிறார்கள்.

    இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘பசித்தவருக்கு உணவளியுங்கள்; நோயாளியை (சந்தித்து) உடல் நலம் விசாரியுங்கள்; (போர்க்) கைதியை (எதிரியிடமிருந்து) விடுவியுங்கள்’. (அறிவிப்பாளர் : அபூ மூஸா அல்அஷ்அரீ (ரலி), புகாரி)

    ‘யூதர்களின் அடிமையொருவர் நபி (ஸல்) அவர்களுக்கு ஊழியம் செய்து வந்தார். அவர் நோயுற்றுவிட்டார். அவரை நபி (ஸல்) அவர்கள் உடல்நலம் விசாரிக்கச் சென்றார்கள்’ (அறிவிப்பாளர் : அனஸ் (ரலி), புகாரி)

    உடல்நலம் குன்றியவர் எவராயினும் அவரையும் உடல் நலம் விசாரிக்க வேண்டும் என்பது இஸ்லாத்தின் கோட்பாடு; நபி (ஸல்) அவர்களின் பண்பாடு.

    நோயாளிகளுக்காக பிரார்த்திப்பதும் நபி வழியே

    நோயாளிகளைக் கண்டு நலம் விசாரிப்பது மட்டும் போதாது. அவர்கள் நலம் பெற பிரார்த்திக்கவும் வேண்டும் என இஸ்லாம் வலியுறுத்துகிறது.

    நபி (ஸல்) அவர்கள் ஒரு நோயாளியிடம் உடல் நலம் விசாரிக்கச் சென்றால் அந்த நோயாளியிடம், ‘கவலைப்பட வேண்டாம். இறைவன் நாடினால், (இது உங்கள் பாவத்தை நீக்கி உங்களைத்) தூய்மைப்படுத்தி விடும்’ என்று கூறுவார்கள்.

    ஒரு நோயாளியிடம் எவ்வாறு நலம் விசாரிக்க வேண்டும்? என்பதில் நபி (ஸல்) அவர்கள் அகில உலகத்தாருக்கு அழகிய முன்மாதிரியாக இருக்கிறார்கள்.

    ஒரு நோயாளியை சந்திக்கும்போது, நலம் விசாரிப்பு என்கிற அடிப்படையில் மணிக்கணக்கில் அவரிடம் பேசிக் கொண்டிருக்கக்கூடாது; அல்லது அறவே பேசாமலும் வந்துவிடக்கூடாது. இந்த இரண்டு விதமான செயல்பாடுகளும் நோயாளிக்கு தொந்தரவு தருவதாக ஆகிவிடும்.

    “ஸஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) கூறினார்: நான் மக்காவில் கடுமையாக நோய் வாய்ப்பட்டிருந்தேன். நபி (ஸல்) அவர்கள் என்னை உடல் நலம் விசாரிக்க வந்தார்கள். பிறகு, நபி (ஸல்) அவர்கள் தம் கையை என் நெற்றியின் மீது வைத்துப் பிறகு, அதை என் வயிற்றின் மீதும், என் முகத்தின் மீதும் தடவினார்கள். பின்னர், ‘இறைவா! ஸஅதுக்குக் குணமளிப்பாயாக!’ என்று பிரார்த்தித்தார்கள்”. (புகாரி)

    நோயாளியை சந்திக்கும்போது, அவரைப் பார்த்து “கவலைப்பட வேண்டாம் இறைவன் நாடினால் இந்த நோயின் மூலம் உமது பாவங்களை மன்னித்து, உமக்கு குணமளிப்பான்” என்று ஆறுதல் கூறி, நமது கையால் நோயாளியின் முகத்தையும், வயிற்றையும் தடவிக் கொடுத்து, அவருக்காக, “இறைவா! நீ அவரின் நோயைப் போக்கி, அவருக்கு நிவாரணம் அளிப்பாயாக!” என்று பிரார்த்திக்க வேண்டும்.

    “காய்ச்சல் மற்றும் இதர நோய்களை திட்டாதீர்”

    காய்ச்சல் ஏற்படாத எந்த மனிதரையும் உலகில் காணமுடியாது. ஏன் இறைத் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்குக் கூட காய்ச்சல் ஏற்பட்டிருக்கிறது. அதுவும் சாதாரண காய்ச்சல் கிடையாது. இருவருக்கு ஏற்படும் காய்ச்சல் போன்று நபி (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதையும் நபி (ஸல்) அவர்கள் கடந்து தான் வந்திருக்கிறார்கள்.

    இப்னுமஸ்ஊத் (ரலி) கூறுகிறார்:

    நபி (ஸல்) அவர்கள் காய்ச்சலால் சிரமப்பட்டுக் கொண்டிருந்தபோது அவர்களிடம் நான் சென்றேன்.

    ‘இறைத்தூதர் அவர்களே, தாங்கள் கடும் காய்ச்சலால் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறீர்களே’ என்று விசாரித்தேன்.

    ‘ஆம்; உங்களில் இரண்டு மனிதர்கள் காய்ச்சலால் அடைகிற துன்பத்தை (ஒரே மனிதனாகிய) நான் அடைகிறேன்’ என்றார்கள்.

    ‘(இந்தத் துன்பத்தின் காரணமாகத்) தங்களுக்கு இரண்டு மடங்கு நற்பலன்கள் கிடைக்கும் என்பதாக இதற்குக் காரணமா?’ என்று நான் கேட்டேன்.

    இதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘ஆம்’ என்று கூறிவிட்டு, ‘ஒரு இறைவிசுவாசியைத் தைக்கும் ஒரு முள்ளாயினும், அதற்கு மேலான துன்பம் எதுவாயினும் அதற்கு பதிலாக, மரம் தன் இலைகளை உதிர்த்து விடுவதைப் போன்று அவரின் பாவங்களை இறைவன் (உதிரச்செய்து) மன்னிக்காமல் விடுவதில்லை’ என்று கூறினார்கள். (நூல் : புகாரி)

    பாவங்களை மன்னித்து, பாவ அழுக்குகளிலிருந்து மனிதனை தூய்மைப்படுத்த சிலருக்கு வியாதிகளை கொடுத்து இறைவன் சோதிக்கின்றான். எனவே நாம் பாவங்களில் இருந்தும், பாவச்செயல்களில் இருந்தும் நம்மை பாதுகாத்துக்கொண்டால் இந்த சோதனையில் இருந்து தப்பிக்கலாம். மேலும் இந்தச்சோதனையில் சிக்கியவர்கள், அதில் இருந்து மீண்டு நலம் பெற பிரார்த்தனை செய்வதும் நம் அனைவரின் கடமையாகும்.

    மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுன்.
    ஒரேயொரு விநாடியே என்றாலும் உண்மையாக நடந்துகொள்ளும் பட்சத்தில் அவர் சொர்க்கத்தை அடைந்துவிடுவார் என்பதற்கான நிகழ்வுதான் பின்வரும் சம்பவம்.
    நல்ல செயலைச்செய்வதென தீர்மானம் எடுப்போம். அதனைச் செய்து முடிக்குமுன் இடையே மரணம் வந்தாலும் பரவாயில்லை. அதற்கான நற்கூலி கிடைத்துவிடும். ஆயினும் அந்தத் தீர்மானம் உண்மையானதாக இருக்க வேண்டும். உள்ளொன்றுவைத்து புறமொன்று பேசும் கபடதாரியாக அல்லாமல் உளப்பூர்வமாக இருக்க வேண்டும்.

    ஒரேயொரு விநாடியே என்றாலும் உண்மையாக நடந்துகொள்ளும் பட்சத்தில் அவர் சொர்க்கத்தை அடைந்துவிடுவார் என்பதற்கான நிகழ்வுதான் பின்வரும் சம்பவம்.

    சுட்டெரிக்கும் வெயில். தோழர்களுடன் நபி (ஸல்) அவர்கள் தமது ஏதோ ஒரு தேவைக்காக மதீனாவின் எல்லையைத் தாண்டி வெளியே செல்லத் தயாராக இருந்த வேளை. தூரத்தில் ஒரு உருவம் வருவதுபோல் தோன்றியது. நபிகளார்அதன்பால் பார்வையைக் கூர்மையாக்கி நோக்கினார்கள். ஒட்டகத்தில் ஒருவர் வருவது தெரிந்தது.

    வெகு சிரமத்துடன் தங்களை நோக்கித்தான் அவர் வருகின்றார் என்பது தெரிந்தது. தோழர்களிடம் கூறினார்கள்: அவர் நம்மை நோக்கித்தான் வருவதுபோல் தெரிகிறது.

    சற்று நேரத்தில் அந்த மனிதரும் அருகே வந்துவிட்டார். பெருமானார் (ஸல்) அவர்களுக்கு அருகே வந்தவர், அங்கிருந்தவர்களை ஒருகணநேரம் நோட்டம் விட்டார். கூர்மையாகப் பார்க்கத் தொடங்கினார். கலைந்த கேசம். தூசு படிந்த தேகம். பயணக் களைப்பும் சிரமங்களும் முகத்தில் அப்படியே பிரதிபலித்தது.

    இறைத்தூதர் (ஸல்) அவரிடம் கேட்டார்கள்: ‘எங்கிருந்து வருகின்றீர்?’

    அவர் கூறினார்: ‘எனது மனைவி, மக்கள், குடும்பம் அத்தனை பேரையும் விட்டுவிட்டு வெளி ஊரிலிருந்து வருகின்றேன்’.

    நபி (ஸல்): ‘எங்கே செல்கின்றீர்?’

    ‘அல்லாஹ்வின் தூதரைச் சந்திக்க வேண்டும். அவர் எங்கே இருக்கின்றார்?’

    ‘அல்லாஹ்வின் தூதரோடுதான் நீங்கள் இப்போது பேசிக்கொண்டு இருக்கின்றீர்’.

    உடனே அவரது முகம் பிரகாசமானது. உற்சாகம் பிறந்தது. ஒட்டகத்தில் இருந்து இறங்காமலே, ‘அல்லாஹ்வின் தூதரே! இஸ்லாத்தைக் குறித்தும் இறைநம்பிக்கையைக் குறித்தும் எனக்குக்கற்றுத்தாருங்கள்’ என்று கேட்டார்.

    நபி (ஸல்): ‘அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் முஹம்மத் அல்லாஹ்வின் தூதர் என்றும் சாட்சி கூறுவீராக. தொழுகையை நிலைநாட்டுவீராக. ஜகாத்தைக் கொடுப்பீராக. ரமலான் மாதத்தில் நோன்பு வைப்பீராக. ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றுவீராக. இதுதான் இஸ்லாம்’.

    உடனே அவர் இஸ்லாத்தை ஏற்றார். அண்ணலாரின் உபதேசத்தை உள்ளத்தில் ஏந்தி அதனைச் செயல்படுத்துவதாக அப்போதே உறுதிபூண்டார். தமது உறுதி மொழியை அவர் கூறிக்கொண்டிருக்கும்போதே அவரது ஒட்டகம் அசையத் தொடங்கியது. அங்கிருந்த ஒரு பாறாங்கல்லில் ஒட்டகத்தின் முன்னங்கால்கள் சிக்கிக்கொண்டன. ஒட்டகத்தின் மீது அந்த மனிதர் இருக்கும் நிலையிலேயே ஒட்டகம் தரையில் விழுந்தது. அவரும் ஒட்டகமும் ஒருசேர கீழே விழுந்ததில் ஒட்டகம் அவருடைய உடலின் மேல் விழுந்தது. அங்கிருந்த ஒரு கல்லில் தலை பலமாக மோதியது. சற்று நேரத்தில் மூச்சுவிட சிரமப்பட்டார். பலத்த அடி.

    சுற்றி நின்ற தோழர்களுக்கு அதிர்ச்சி. தோழர்களிடம் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘அவரை என்னிடம் கொண்டு வாருங்கள்’.

    அம்மர்பின்யாஸர்(ரலி) அவர்களும் ஹுதைபா(ரலி) அவர்களும் அவரை அண்ணலார் (ஸல்) அவர்களிடம் தூக்கிக்கொண்டு வந்தார்கள்.

    உட்கார வைக்க முயன்றார்கள். முடியவில்லை. கை கால்களைஅசைக்க முயன்றார்கள். அசையவில்லை. உடனே பெருமானார் (ஸல்) அவர்களிடம், ‘அல்லாஹ்வின் தூதரே! இவர் மரணித்துவிட்டார்போல் தெரிகிறது’ என்றார்கள்.

    அவரை நோக்கி அதிர்ச்சியுடன் திரும்பினார்கள் பெருமானார் (ஸல்). உண்மைதான். மரணித்துவிட்டார். ஆயினும், அதே வேகத்தில் தமது முகத்தை உடனே வேறு பக்கம் திருப்பினார்கள் பெருமானார் (ஸல்). அவருடைய மரணத்தால் அதிர்ச்சியுற்றிருந்த தோழர்களுக்கோ பெருமானார் (ஸல்) அவர்களின் இந்தச் செயல் ஆச்சரியத்தைத் தந்தது.

    தோழர்களிடம் கூறினார்கள்: ‘அவரைவிட்டு முகத்தைத் திருப்பியதைத்தானே ஆச்சரியமாகப் பார்க்கின்றீர்கள்..? நீங்கள் காணாத ஒரு காட்சியை நான் கண்டேன். இரண்டு வானவர்கள்அவருக்கு இப்போது சொர்க்கத்து உணவை ஊட்டிக்கொண்டு இருக்கின்றார்கள். பசியுடன் அவர் இறந்திருக்கின்றார் என்பதை அறிந்துகொண்டேன். ஆகவேதான் எனது முகத்தைத் திருப்பிக்கொண்டேன்’. (அஹ்மத்)

    உளப்பூர்வமாக ஒன்றை ஏற்றுக்கொண்டு அதைச் செயல்படுத்த வேண்டும் என்று தீர்மானமும் செய்துவிட்டால்.. அதனைச் செயல் படுத்துமுன்னரே மரணம் வந்துவிட்டாலும் அதற்கான கூலியும் சொர்க்கமும் நிச்சயம் என்பதை இந்த நிகழ்வு கற்றுத்தருகின்றது.

    இங்கே நோக்கங்களும் லட்சியங்களும்தான் கவனிக்கப்படுகின்றன தவிர, செயல்களும் வார்த்தைகளும் அல்ல. இறைவனின் சன்னிதியில் ஒருமுறை கூட சிரவணக்கம் (ஸுஜுத்) செய்யாத பலர் ‘ஷஹீத்’ எனும் (இறைப்பாதையில் உயிர் தியாகம்செய்யும்) பாக்கியம் பெற்றுள்ளனர். வரலாற்றின் பக்கங்களில் பல இடங்களில் இதனை அவதானிக்கலாம்.

    பிர்அவ்னின்அவையில் மூஸா (அலை) அவர்களுக்கு எதிராக சூனியம் செய்ய வந்த மந்திரவாதிகள், உண்மை தெரிய வந்தபோது இறைநம்பிக்கைக் கொள்கின்றனர். அவர்களைக் கொலை செய்வதாக மிரட்டுகின்றான் பிர்அவ்ன். அதற்கு அவர்களின் பதில் என்ன தெரியுமா..?

    அதற்கு சூனியக்காரர்கள் மறுமொழி பகர்ந்தார்கள்: “எங்களைப் படைத்த இறைவன் மீது சத்தியமாக! தெளிவான சான்றுகள் எங்கள் கண்ணெதிரே வந்த பின்னரும் நாங்கள் (சத்தியத்தை விட) உனக்கு ஒருபோதும் முன்னுரிமை தரமாட்டோம். எனவே, நீ என்ன செய்ய விரும்புகின்றாயோ செய்துகொள். (அதிகபட்சம்) இவ்வுலகவாழ்வில் மட்டுமே உன்னால் தீர்ப்பு வழங்க முடியும். திண்ணமாக, நாங்கள் எங்கள் இறைவன் மீது நம்பிக்கை கொண்டுவிட்டோம்” (திருக்குர்ஆன்20:72)

    பின்னர் பிர்அவ்ன் அவர்கள் அனைவரையும் கொலை செய்தான். ஆம், காலையில் மந்திரவாதிகளாக இருந்தவர்கள், மாலையில் ஷஹீத்களாக மாறினர். ஒருமுறை கூட இறைவனுக்கு முன் சிரவணக்கம் செய்யாமலேயே இந்த பாக்கியத்தை அவர்கள் பெற்றனர். காரணம், உள்ளத்தில் கொண்ட உறுதி. அது மட்டுமே வெற்றியைத் தேடித்தரும்.

    நூஹ் மஹ்ழரி, குளச்சல்.
    நபி(ஸல்) அவர்கள் தங்கள் கையில் இருந்த வில்லால் கஅபாவைச் சுற்றி இருந்த 360 சிலைகளை அடித்துக் கீழே தள்ளினார்கள். அப்போது “சத்தியம் வந்தது அசத்தியம் மறைந்தது.
    நபி (ஸல்) அவர்களின் ஆலோசனையின்படி முஸ்லிம்களின் படை பலம் மக்காவாசிகளுக்குத் தெரியாமல் இருக்க, முஸ்லிம்கள் சிறு சிறு படை பிரிவுகளாக, ஒவ்வொரு படை பிரிவிற்கும் ஒவ்வொரு தலைவரை உருவாக்கி வெவ்வேறு இடங்களிலிருந்து மக்காவை நோக்கிப் புறப்பட்டனர்.

    காலித் இப்னு வலீத் (ரலி) மற்றும் அவரது படையினர் தங்களை எதிர்த்த இறைநிராகரிப்பாளர்களை வெட்டி வீழ்த்தினர். காலித்(ரலி) அவர்களின் படையிலிருந்து வழிதவறி சென்றவர்களைக் குறைஷிகள் கொன்றனர். ஆனால் காலித்தின் வீரத்தையும் அவருடைய படை பலத்தையும் ஒன்றும் செய்ய முடியாமல் குறைஷிகள் புறமுதுகு காட்டி உயிருக்கு அஞ்சி ஓடினர்.

    இப்படி ஒவ்வொரு பிரிவினரும் மக்காவில் நுழைந்து முன்னேறி, தங்களிடமிருந்த கொடியை நட்டுவிட்டு நபி (ஸல்) அவர்களின் வருகைக்காக அங்கேயே காத்திருந்தனர்.

    அன்சாரிகளின் புடைசூழ நபி (ஸல்)  அவர்கள் அணிவகுத்து அங்கு சென்றார்கள். நபி(ஸல்) அவர்கள் மக்கா பள்ளிக்குள் நுழைந்து ‘ஹஜ்ருல் அஸ்வதை’ (சொர்க்கத்து    கல்லை) நெருங்கி அதனைத் தங்களது கையால் தொட்டு முத்தமிட்டு, கஅபாவை தங்களது வாகனத்திலிருந்தபடியே தவாஃப் செய்தார்கள் -  அதாவது வலம் வந்தார்கள். அவர்களைப் பார்த்து மற்றவர்களும் அவ்வாறே  தவாஃப் செய்தனர்.

    நபி(ஸல்) அவர்கள் தங்கள் கையில் இருந்த வில்லால் கஅபாவைச் சுற்றி இருந்த 360 சிலைகளை அடித்துக் கீழே தள்ளினார்கள். அப்போது “சத்தியம் வந்தது அசத்தியம் மறைந்தது. நிச்சயமாக அசத்தியம் அழிந்தே தீரும்” என்ற குர்ஆனின் வசனத்தை உரக்க ஓதிக் கொண்டே தவாஃப் செய்தார்கள். சிலைகளெல்லாம் முகம் குப்புற கீழே விழுந்தன. உம்ரா செய்யும் நோக்கத்தில் வராததால் நபி(ஸல்) அவர்கள் இஹ்ராம் (உம்ராவிற்கான ஆடை) அணியாமல் தவாஃப் மட்டும் செய்தார்கள். வலம் வந்த பிறகு உஸ்மான் இப்னு தல்ஹா (ரலி) அவர்களிடம் இருந்த கஅபாவின் சாவியைப் பெற்று அதைத் திறக்கக் கூறினார்கள்.

    கஅபாவின் உள்நுழைந்து அங்கு வரையப்பட்ட பலவிதமான படங்களை அழித்தார்கள். தங்களது படை வீரர்களையும் உருவப் படங்களை அழிக்கக் கட்டளையிட்டார்கள்.

    சிலைகளும் உருவப்படங்களும் முற்றிலுமாக அகற்றப்பட்ட பின்னர் நபி(ஸல்) அவர்கள் கஅபாவுக்குள் நுழைந்து கதவைத் தாழிட்டுக் கொண்டார்கள். அவர்களுடன் உஸாமா(ரலி) மற்றும் பிலால்(ரலி) உடனிருந்தனர்.

    இந்நிகழ்வின் போது கஅபா ஆறு தூண்களின் மீதே அமைக்கப்பட்டிருந்தது. நபி(ஸல்) தனது இடப்புறத்தில் இரண்டு தூண்கள், வலப்புறத்தில் ஒரு தூண் தனக்குப் பின் மூன்று தூண்கள் இருக்குமாறும், கஅபாவின் வாயிலுக்கு நேர் திசையிலுள்ள சுவரை நோக்கி, மூன்று முழங்கள் சுவருக்கும் தனக்குமிடையே இடைவெளி விட்டு நின்றும் தொழுதார்கள். தொழுத பின் கஅபாவுக்குள் சுற்றி வந்து ஒவ்வொரு மூலையிலும் லாஇலாஹஇல்லல்லாஹ், அல்லாஹு அக்பர் என்று இறைவனைப் புகழ்ந்து, மேன்மைப் படுத்தி, பின்னர் கதவைத் திறந்தார்கள்.

    குறைஷிகள் அனைவரும் பள்ளிக்குள் திரண்டு வரிசையாக நின்று கொண்டு நபி(ஸல்) அவர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என எதிர்பார்த்திருந்தனர்.

    திருக்குர்ஆன் 17:81, ரஹீக் அல் மக்தூம்

    -ஜெஸிலா பானு.
    எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அற்புதமான திரு நாமங்களில் ஒன்று, ‘அர் ரகீப்’. ‘ரகீப்’ என்றால் ‘கண்காணிப்பாளன்’ என்று பொருளாகும்.
    எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அற்புதமான திரு நாமங்களில் ஒன்று, ‘அர் ரகீப்’. ‘ரகீப்’ என்றால் ‘கண்காணிப்பாளன்’ என்று பொருளாகும். ஈமானின் (இறையச்சத்தின்) உறுதியான நிலைப்பாடு ‘யகீன்’ என்பதாகும். இந்த இரு வார்த்தைகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.

    சமுதாயச் சீரழிவுகளுக்கும், சீர்கேடுகளுக்கும் காரணம், மனிதர்கள் தவறுகள் செய்பவர்களாக இருப்பதுதான். தவறு செய்யும் ஒரு மனிதன் பின் விளைவுகளைப் பற்றி யோசிப்பதில்லை.

    தான் செய்வது தவறு என்று உணர்ந்தால்தான் தன்னைத் திருத்திக் கொள்ள முற்படுவான். தாங்கள் செய்வது தவறே அல்ல என்று நினைப்போரும், மற்றவர்கள் செய்வதை விடவா பெரிதாக நான் தவறுகள் செய்கிறேன் என்று தங்கள் நிலைப்பாட்டினை நியாயப்படுத்துவோரும் ஒரு நாளும் தங்களின் தவறு களைத் திருத்திக்கொள்ள மாட்டார்கள்.

    மனிதர்கள் பொதுவாகவே மற்றவர்கள் தங்களைக் கவனிக்கிறார்களா, மதிக் கிறார்களா, கண்ணியம் தருகிறார்களா என்பதில்தான் அதிகக்கவனம் செலுத்துகிறார்கள். அந்தக் காரணத்திற்காகவே மற்ற வர்கள் பார்வையில் இருக்கும் பொழுது தவறு செய் வதற்கு அஞ்சு கிறார்கள், தயக்கம் காட்டுகிறார்கள்.

    தனிமையில் இருக்கும்பொழுது எந்த தயக்கமும், பயமும் இன்றி தவறுகள் செய்யக்கூடிய மனோபாவம் உள்ளவர்களாக மாறி விடுகின்றனர்.

    ஆனால், ‘ஆழ்கடலின் ஆழத்தில் கூட அனைத்தையும் கண்காணிப்பவனாக இறைவன் இருக்கிறான்’ என்பதை தவறு செய்யும் மனிதன் உணருவதில்லை. அதை உணரும் பட்சத்தில் எந்நிலையிலும் தவறு செய்வதற்கு அஞ்சுவான். மனதின் இச்சைக்கு அடிபணிந்து என்றாவது தவறு செய்துவிட்டாலும், தன் இறைவனைக் குறித்த அச்சத்தில், குற்ற உணர்வில் தவித்து, தொழுகையில் உள்ளச்சத்துடன் அழுது மன்னிப்புக் கேட்டு மன்றாடுவான். ஷைத்தானின் ஊசலாட்டத்தால் மனம் தடுமாறும் காலங்களில் கூட அல்லாஹ்வின் தண்டனைக்கு அஞ்சியும், அவனின் திருப்பொருத்தத்தை வேண்டியும் பாவம் செய்வதைத் தவிர்த்து விடுவான்.

    இதுவே ஈமானின் உறுதிப்பாடு (யகீன்) என்பதாகும். ஈமானில் உறுதிப்பாடு உள்ளவர்கள் தன் இறைவன் கண்காணிப்பாளனாக (ரகீபாக) இருக்கிறான் என்று உறுதியாக நம்புகிறார்கள். தன்னைப் படைத்த இறைவன் தன்னைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறான் என்ற அச்சத்துடனே வாழ்கிறார்கள். இந்நினைப்பு அவர்களைப் புடம் போடுகிறது. அவர்களின் செயல்பாடுகளில் எவ்வித கள்ளத்தனமும் வெளிப்படாது. அவர்கள் உள்ளத்தில் எப்படியோ அப்படியே மற்றவர்களுக்கு வெளிப்படுகிறார்கள்.

    மற்ற மனிதர்களுக்குத் தெரியாவண்ணம் தவறு செய்பவர்கள் தங்கள் அகம் மறைத்து, முகம் வேறொன்று காட்டித் திரிவார்கள். அத்தகைய மனிதர்கள் சிந்தித்துப் பார்த்தால் தாங்கள் செய்யும் தவறு கள் புலப்படும்.

    அவர்கள் தங்கள் ஈமானின் உறுதிப்பாட்டை பலப்படுத்திக் கொண்டால், இறைவன் தங்களை எப்பொழுதும், எந்நிலையிலும் கண் காணித்துக் கொண்டிருக்கிறான் என்ற உணர்வு அவர்களின் நாடி, நரம்புகள் அனைத்திலும் ஓடிக்கொண்டிருக்கும்.

    நபி (ஸல்) அவர்கள், ‘தனிமையில் இருக்கும் பொழுதும், மக்கள் மத்தியில் இருக்கும் பொழுதும், உன்னுடைய அச்சத்தை எனக்குத் தா’ என இறைனிடம் பிரார்த்தனை செய்வார்கள்.

    ஒரு முறை ஆடு மேய்க்கும் சிறுவனிடம், தனக்கு ஒரு ஆட்டினை விலைக்குத் தருமாறு உமர் (ரலி) கேட்டார்கள். அப்போது அந்தச் சிறுவன் ‘இவை எனக்குச் சொந்தமான ஆடுகள் அல்ல, என் எஜமானருக்குச் சொந்தமானது’ என்று கூறினான்.

    ‘அதற்கென்ன, உன்னிடம், உன் எஜமானர் ஆடு களைப் பற்றி விசாரித்தால் ஓநாய் சாப்பிட்டு விட்டதாகக் கூறு’ என்று உமர் (ரலி) தெரிவித்தார்.

    பதறிப்போன அச்சிறுவனோ ‘என் எஜமானர் இங்கில்லை என்றாலும், அல்லாஹ்வுமா இல்லை?, அல்லாஹ் பார்த்துக் கொண்டல்லவா இருக்கிறான்?’ என்று பதில் கூறினான்.

    அச்சிறுவனின், ‘அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான்’ என்ற உறுதியான நிலைப்பாட்டினை அறிந்த உமர் (ரலி) நெகிழ்ந்து போனார்கள்.

    மற்றுமொரு சம்பவத்தில் கலீபாவான உமர் (ரலி) ஒரு நாள் இரவில் நகர்வலம் செல்கிறார். ஒரு வீட்டினருகே வரும் பொழுது தாயும், மகளும் பேசிக்கொள்ளும் சத்தம் வீட்டிற்குள் இருந்து வரு கிறது.

    தாய் மகளைப் பார்த்து, பாலில் தண்ணீர் கலக்கச் சொல்கிறார். ‘பாலில் தண்ணீர் கலக்கக் கூடாதென்ற உமரின் உத்தரவு உங்களுக்குத் தெரியாதா?’ என்று மகள் மறுக்கிறார். ‘கலீபா என்ன பார்த்துக் கொண்டா இருக்கிறார்?’ என்று தாய் கேட்டபோது, ‘கலீபா இங்கு இல்லையென்றால் என்ன, அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறானே’ என்று மகள் பதிலளித்தார்.

    அந்தப்பெண்ணின் இறை அச்சத்தை உணர்ந்த உமர் (ரலி) மகிழ்ந்து, பின்னர் தன் மகனுக்கு அந்த இளம் பெண்ணைத் திருமணம் செய்து வைத்தார்.

    நபி (ஸல்) அவர்களின் காலத்திலும், அவர்களுக்குப் பின் வந்த கலீபாக்களின் காலத்திலும் மக்கள் உறுதியான ஈமானுடன் (இறை அச்சத்துடன்) வாழ்ந்ததற்கான சம்பவங்கள் நபி மொழி தொகுப்புகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ஆனால் இன்று உலகம் எங்கே போய்க் கொண்டிருக்கிறது? இப்படியே தொடர்ந்தால் இது எங்கு போய் முடியும் என்ற கேள்விக் கணைகள் நம்மைத் துளைத்துக் கொண்டிருக்கின்றன.

    இறை நம்பிக்கை கொண்ட ஒவ்வொருவரும் ‘என் இறைவனே, உனக்காகவே நான், உன் பொருட்டு, உன் தண்டனைகளுக்கு அஞ்சி, நான் எந்தத் தவறுகளும் செய்ய மாட்டேன்’ என்ற பிரார்த்தனையுடனும், ஈமானின் உறுதிப்பாட்டுடனும் தம் வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டால், நம் சமுதாயம் முன்னேறிய சமுதாயமாக, முன் மாதிரி சமுதாயமாக விளங்கும்.

    கண்காணிப்பாளனாக (அர் ரகீபாக) இருக்கும் அல்லாஹ், நமக்கும், நம் சந்ததியருக்கும் ஈமானின் உறுதிப்பாட்டை பலப்படுத்தி, அனைத்து விதமான தவறுகள் மற்றும் பாவங்களில் இருந்தும் நம் அனைவரையும் பாதுகாக்கட்டும்.

    ம. அஹமது நவ்ரோஸ் பேகம், புரசைவாக்கம், சென்னை.
    இன்றைய தினம் நான் உங்கள் மீது எந்தக் குற்றமும் சுமத்துவது இல்லை. அல்லாஹ்வும் உங்கள் குற்றங்களை மன்னித்து விடுவானாக! அவன் கருணையாளர்களிலெல்லாம் மகா கருணையாளன்.
    நபி (ஸல்) 10,000 தோழர்களுடன் மதீனாவிலிருந்து மக்காவை நோக்கிப் புறப்பட்டார்கள்.

    இது தெரியாமல் நபியவர்களின் தந்தையின் சகோதரர் அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப் தனது குடும்பத்தினரோடு மக்காவிலிருந்து வெளியேறி மதீனாவிற்கு இஸ்லாமை ஏற்க வந்து கொண்டிருந்தார். வழியிலேயே நபி(ஸல்) அவர்களைப் பார்த்ததும் மகிழ்ச்சியுடன் அதே இடத்தில் அனைவரும் இஸ்லாமை ஏற்றனர்.

    அதேபோல் நபி(ஸல்) அவர்கள் பேச மறுத்த, நபியவர்களின் பெரிய தந்தையின் மகன் அபூ ஸுஃப்யான் இப்னு ஹாரிஸும், மாமியின் மகன் அப்துல்லாஹ் இப்னு அபூ உமையாவும் நபி(ஸல்) அவர்களைத் தேடி வந்தனர். இருவருமே முஸ்லிம்களுக்கு நிறையத் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தவர்கள் என்பதால் நபி(ஸல்) அவர்களுடன் பேச மறுத்துவிட்டார்கள்.

    மக்கா பயணத்தில் நபி(ஸல்) அவர்களுடன் இருந்த அவர்களது மனைவி உம்மு ஸலமா(ரலி), நபி(ஸல்) அவர்களைச் சமாதானப்படுத்தி வந்தவர்களுடன் பேசும்படி கேட்டுக் கொண்டார்கள்.

    அபூஸுஃப்யானிடம் அலீ(ரலி) அவர்கள் "நீங்கள் திருக்குர்ஆனில் யூஸுஃப் நபியின் சகோதரர்கள் யூஸுப்(அலை) அவர்களிடம் மன்னிப்பு கேட்டவாறு நீங்களும் கேட்டால் நபி(ஸல்) நிச்சயம் மன்னித்துவிடுவார்கள்" என்று யோசனையைத் தெரிவித்தார்கள்.

    அவ்வாறே அபூ ஸுஃப்யானும் “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நாங்கள் உங்களுக்குப் பெரும் தீங்கிழைத்தோம். ஆயினும், நிச்சயமாக அல்லாஹ் எங்களைவிட உங்களை மேன்மையாக்கி வைத்திருக்கிறான். எங்களுக்கு நன்மை செய்ய அல்லாஹ் உங்களுக்குச் சந்தர்ப்பமும் அளித்திருக்கிறான்” என்ற திருக்குர்ஆனின் வசனத்தை மொழிந்தார்கள்.

    உடனே நபி(ஸல்) அவர்களும் அதன் பதில் வசனமான “இன்றைய தினம் நான் உங்கள் மீது எந்தக் குற்றமும் சுமத்துவது இல்லை. அல்லாஹ்வும் உங்கள் குற்றங்களை மன்னித்து விடுவானாக! அவன் கருணையாளர்களிலெல்லாம் மகா கருணையாளன்” என்று பதிலளித்தார்கள்.

    அபூ ஸுஃப்யான், "நான் நேர்வழிக்கு அழைக்கப்பட்டுள்ளேன். அதை நான் ஏற்று நேர்வழி பெறுகிறேன். நான் ஒவ்வொரு இடத்திலும் விரட்டியத்தேனே அவர்தான் அவர்தான் நான் நேர்வழி பெற்றதற்குக் காரணம். அவர்தான் எனக்கு நேர்வழி காட்டி அல்லாஹ்வை காட்டித் தந்தார்" என்று கவிதை நடையில் நபி(ஸல்) அவர்கள் முன் உருகினார்.

    திருக்குர்ஆன் 12:91,92, இப்னு ஹிஷாம், ரஹீக் அல் மக்தூம்

    - ஜெஸிலா பானு.
    உலகின் செல்வங்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்து வைத்திருந்தாலும் மண்ணறைக்கு வரும்போது ஒன்று மில்லாமல்தான் வரவேண்டும். இதை மறந்துவிடாதீர்கள்.
    ஒருமுறை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தமது தோழர்களுடன் மதீனாவின் வீதிகளில் சென்றுகொண்டிருந்தபோது அவர் களைக் கடந்து ஒரு பிரேதம் (ஜனாஸா) கொண்டு செல்லப்பட்டது.

    அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘(இவர்) நிம்மதி பெற்றவராவார் அல்லது பிறருக்கு நிம்மதி அளித்தவராவார்’ என்று சொன்னார்கள்.

    பெருமானார் (ஸல்) அவர்கள் என்ன கூறுகின்றார்கள் என்று தோழர்களுக்குப் புரியவில்லை. அவர்களிடமே விசாரிக்கலாமே என்று, ‘அல்லாஹ்வின் தூதரே! நிம்மதி பெற்றவர்; நிம்மதி அளித்தவர் என்றால் என்ன?’ என்று கேட்டார்கள்.

    அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘இறைநம்பிக்கை கொண்ட அடியார் இறக்கும்போது இவ்வுலகத்தின் துன்பத்திலிருந்தும் தொல்லையிலிருந்தும் நிம்மதி பெற்று இறையருளை நோக்கிச் செல்கிறார். பாவியான ஓர் அடியான் இறக்கும்போது அவனின் தொல்லைகளில் இருந்து மற்ற அடியார்கள், நாடு நகரங்கள், மரங்கள் மற்றும் கால்நடைகள் ஆகியன நிம்மதி பெறுகின்றன’ என்று சொன்னார்கள். (புகாரி)

    இறந்தவர்களைக் குறித்து குறை எதுவும் கூறக்கூடாதுதான். ஆயினும் ஒருசில கெட்ட மனிதர்கள் இறக்கும்போது மனம் ஒருவகை நிம்மதி பெறுவது இயற்கை. அப்பாடா.. என்று நிம்மதிப் பெருமூச்சு விடுகிறோம். ஏன்..? என்ன காரணம்..?

    அவனால் இந்த சமூகத்திற்கு நன்மை எதுவும் இல்லை என்பதைவிட, அநீதியும் அக்கிரமங்களும் அதிகம் என்பதால். ஒரு கெட்ட மனிதன் இறக்கும்போது சக மனிதன் மட்டுமல்ல; மாறாக மரமும் செடியும் கொடியும் ஏன் விலங்குகள்கூட நிம்மதி பெறுகின்றன என்றால், அவனால் எந்த அளவுக்கு இவை அனைத்தும் பாதிக்கப்பட்டிருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள்.

    சுய லாபத்திற்காக விவசாய நிலங்களை இல்லாமல் ஆக்கும் மனிதன், திருட்டுத்தனமாக வாய்க்கால் மணலை அள்ளி விற்கும் மனிதன், சாயக்கழிவுகளை ஆறுகளில் விட்டு நல்ல தண்ணீரையும் கெட்ட தண்ணீராக மாற்றும் மனிதன், மலைகளை வெட்டிஎடுத்து விற்பனை செய்யும் மனிதன், இவர்கள் அனைவரும் இறந்தால் ஏனைய படைப்புகள் நிம்மதி பெறும் என்பது பெருமானாரின் அமுத வாக்கு.

    ஏனெனில், இதுபோன்ற கெட்ட மனிதர்களால் ஏனைய படைப்புகள் நேரடியாகவே பாதிப்பு அடைகின்றன. அதனால்தான் இவர்கள் இறக்கும்போது அவை நிம்மதி பெறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றனர்.

    அதேவேளை நல்ல மனிதர்கள் மனித நெஞ்சங்களில் வாழ்கின்றார்கள். ஆம், அவர்கள் மறைந்தாலும் அவர்களின் நினைவுகள் ஒருபோதும் நெஞ்சைவிட்டு மறைவதில்லை. அவர் களின் மறைவுக்காக மனித மனங்கள் அழும். நல்லவராக வாழ்ந்த ஒரே காரணத்திற்காக பல சிரமங்களுக்கு அவர்கள் முகம் கொடுத்திருப்பார்கள். மரணித்துவிட்டால் உலகைவிட்டு நிம்மதியாகப் போய் சேர்கின்றார்கள்.

    எவ்வளவு பெரிய கருத்தை அந்த நபிமொழி உணர்த்திச் செல்கிறது என்பதைப் பாருங்கள்.

    வரலாற்றில் யாரெல்லாம் கெட்டவர்களாக வாழ்ந்திருக்கின்றார்களோ அவர்கள் அனைவரும் மனித மனங்களில் இன்னும் வெறுப்புக்குரியவர்களாகத்தானே வாழ்கிறார்கள். ஹிட்லரைக் குறித்து நினைவு கூரும்போதெல்லாம் நாஜிகளுடன் அவர் நடந்துகொண்ட விதம் குறித்தும், அவரது கொடுமை குறித்தும்தானே நமது நினைவுத்திரையில் வந்து போகின்றது. அவ்வாறெனில் அவர் இறந்தபோது யார் யாரெல்லாம் நிம்மதி அடைந்திருப்பார்கள் என்று யோசித்துப் பாருங்கள்.

    நல்லவர்களாக வாழ்ந்தவர்கள், வாழும்போதே மரணம் எப்படி வருமோ என்று அஞ்சி நடுங்கியவர்களாகவே வாழ்ந்துள்ளனர். அதேவேளை கெட்டவர்கள், எதைக்குறித்தும் கவலைப்படுவது இல்லை.



    இஸ்லாமிய வரலாற்றில் ஹாரூன் ரஷீத் பிரபலமான ஆட்சியாளர். ஒருநாள் வேட்டைக்காக வெளியே சென்றபோது மண்ணறைகள் இருக்கும் பகுதியைக் கடந்துசென்றார். அங்கே பஹ்லூல் என்றொரு அறிஞர் இருந்தார். பஹ்லூல் ஒரு பேரறிஞர்.

    ‘எனக்கு ஏதாவது உபதேசம் செய்யுங்கள்’ என்று அவரிடம் ஹாரூன் கேட்டார்.

    ‘நம்பிக்கையாளர்களின் தலைவரே! உமது முன்னோர்கள் எங்கே?’ என்று பஹ்லூல் வினவினார்.

    ‘அனைவரும் இறந்துவிட்டனர்?’

    ‘அவர்களது கோட்டை எங்கே?’

    ‘அதோ அங்கே இருக்கின்றது’

    ‘இறந்தபின் அவர்கள் எங்கு கொண்டு செல்லப்பட்டார்கள்?’

    ‘இதோ இந்த மண்ணறைக்குத்தான்’

    ‘அது அவர்களுடைய கோட்டை, இது அவர்களுடைய மண்ணறை. அந்த கோட்டை அவர்களுக்கு எப்பயனையும் தரவில்லையே. அரசே! உலகின் செல்வங்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்து வைத்திருந்தாலும் மண்ணறைக்கு வரும்போது ஒன்று மில்லாமல்தான் வரவேண்டும். இதை மறந்துவிடாதீர்கள்’.

    அவ்வளவுதான், அழுதார் ஹாரூன் ரஷீத். வேட்டையாடாமல் அரண்மனைக்குத் திரும்பினார். படுத்த படுக்கையாக வீழ்ந்தார். அதுவே அவரது மரணத்திற்கான அறிகுறியாக மாறியது.

    பின்னர் தன்னுடைய படைகள் அனைத்தையும் ஓரிடத்தில் ஒன்றுகூட்டுமாறு கூறினார். ஒன்றுகூட்டப்பட்டது. எண்ணிலடங்கா வீரர்கள். அனைத்தையும் பார்வையிட்டபின் அழுதார்.

    ‘இறைவா..! நீங்காத ஆட்சிக்குரியவனே! என் மீது கருணை புரிவாயாக! இந்த அதிகாரம் நீங்கக்கூடியது என்பது எனக்குப் புரிந்துவிட்டது’.

    பின்னர் தனக்கென மண்ணறை தோண்டுமாறும், கஃபன் (இறந்தவர் உடலுக்கு அணிவிக்கப்படும் ஆடை) கொண்டுவருமாறும் கூறினார். அவ்வாறே செய்யப்பட்டது. பின்வரும் இறைவசனத்தை ஓதினார்: ‘இன்று என்னுடைய செல்வம் எனக்கு எவ்விதப் பயனும் அளிக்கவில்லையே! என்னுடைய அதிகாரம் அனைத்தும் முடிந்துபோய் விட்டதே!’ (69:28,29)

    அழுத நிலையில் இதனை ஓதியவாறே மரணத்தைத் தழுவினார்.

    நாம் யாராக மரணிக்கப்போகின்றோம்? நம்மால் அடுத்தவர் நிம்மதி பெறும் அளவுக்கா? அல்லது இந்த உலகில் இருந்து நாம் நிம்மதி பெறும் அளவுக்கா? என்பதை யோசித்து முடிவெடுப்போம்.

    நூஹ் மஹ்ழரி, குளச்சல்.
    ஒற்றர்கள் வழியாகச் செய்தி செல்வதை அல்லாஹ் தடுத்துவிட்டான். குறைஷிகளுக்கு எந்தச் செய்தியும் கிடைக்கவில்லை. முஸ்லிம்கள் போருக்கு தயாராகி மக்காவிற்குப் புறப்பட்டனர்.
    மக்காவை நோக்கி இஸ்லாமியப் படை வருகிறது என்ற செய்தி இரகசியமாக இருக்க வேண்டும். மக்காவிற்குள் திடீரென நுழையும் வரை ஒற்றர்கள் மூலம் குறைஷிகளுக்கு இச்செய்தி தெரியாமல் இருக்க வேண்டுமென்று பார்த்துக் கொண்டார்கள் நபி(ஸல்) அவர்கள்.

    ஆனால் ஹாதிப் இப்னு அபீ பல்தஆ(ரலி) ஒரு பெண்ணின் மூலம் குறைஷிகளுக்குக் கடிதம் எழுதி அனுப்பியிருந்தார். இதனால் அவர் பிடிக்கப்பட்டார். நபி(ஸல்) அவர்களின் முன்பு ஹாதிப் இழுத்து வரப்பட்டார். உமர்(ரலி), “ஹாதிப் துரோகமிழைத்துவிட்டார், ஆணையிடுங்கள் அவருடைய கழுத்தைக் கொய்துவிடுகிறேன்” என்று கூறினார். மிகப் பொறுமையுடன் நபி(ஸல்) அவர்கள் ஹாதிப்பை பார்த்து “ஏன் இப்படிச் செய்தீர்கள்?” என்று கேட்டார்கள்.

    அதற்கு ஹாதிப் “நான் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் விசுவாசமில்லாதவனாக நடந்து கொள்ள வேண்டுமென்று இப்படிச் செய்யவில்லை. இணைவைப்பாளர்களுக்கு நான் செய்யும் இந்த உதவியால் எனக்கு அங்கு செல்வாக்கு கிடைக்கும், அதன் மூலம் மக்காவிலிருக்கும் என் மனைவியும் மக்களும் பாதுகாக்கப்படுவார்கள் என்று நம்பியே இக்காரியத்தைப் புரிந்தேன்.

    நான் மக்காவில் வாழ்ந்தேனே தவிர நான் குறைஷியல்ல, என் குடும்பத்தைப் பாதுகாக்க எனக்கு அங்கு எந்தக் குறைஷி உறவினரும் இல்லை. உங்களுடைய தோழர்கள் அனைவருக்குமே மக்காவில் அவர்களின் குடும்பத்தையும் அவர்களின் செல்வத்தையும் பாதுகாப்பதற்கு அங்கு அவர்களது மற்ற உறவினர்கள் இருக்கின்றார்கள். எனக்கு அப்படி யாரும் அங்கில்லை” என்று கூறினார்.



    இதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள், “இவர் உண்மையைத்தான் சொல்கிறார் என்று நான் நம்புகிறேன்” என்று கூறினார்கள். இருப்பினும் கோபத்தில் கொந்தளித்த உமர்(ரலி), “இவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் இறைநம்பிக்கையாளர்களுக்கும் துரோகமிழைத்துவிட்டார், என்னை விடுங்கள், இவரின் கழுத்தைக் கொய்து விடுகிறேன்” என்று மீண்டும் கூறினார்கள்.

    அப்போது நபி(ஸல்) அவர்கள், ”இவர் பத்ருப் போரில் பங்கெடுத்தவர். பத்ரில் பங்கெடுத்தவர்களை நோக்கி அல்லாஹ், 'நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள். உங்கள் பாவங்களை நான் மன்னித்துவிட்டேன். உங்களுக்குச் சொர்க்கம் உறுதியாகிவிட்டது' என்று கூறியிருக்கிறான். உமரே! இவர் பத்ரில் கலந்து கொண்டவர் என்பது உனக்குத் தெரியுமா?” என்றார்கள்.

    இதைக் கேட்ட உமர்(ரலி) ஸ்தம்பித்து நின்றார்கள். அவர்களின் கண்கள் கண்ணீர் உகுத்துக் கொண்டிருக்க, 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் ஹாதிப்பை மன்னித்து விடுவித்தார்கள்.

    ஒற்றர்கள் வழியாகச் செய்தி செல்வதை அல்லாஹ் தடுத்துவிட்டான். குறைஷிகளுக்கு எந்தச் செய்தியும் கிடைக்கவில்லை. முஸ்லிம்கள் போருக்கு தயாராகி மக்காவிற்குப் புறப்பட்டனர்.

    ஸஹீஹ் புகாரி 4:64:3983

    - ஜெஸிலா பானு.
    இறைவனின் வல்லமையை கொண்டே ஒவ்வொரு பொருட்களும் உண்டாகுகின்றன. பின்னர் அவை அனைத்தும் அவன் வசமே மீட்கப்படுகின்றன என்பதை அருள்மறை குர்ஆன் இவ்வாறு கூறுகின்றது
    இந்த உலகையும், அதைவிட பிரமாண்டமான பல ஆயிரம் கோள்களையும், அவை அனைத்தும் நீந்திச் செல்வதற்காக எல்லையற்ற பிரமிப்பூட்டும் இந்த பிரபஞ்சத்தையும் மிகநுட்பமாக படைத்து, பரிபாலித்து இயக்குபவன், பூரண ஞானமுள்ள இறைவனே.

    அவனுடைய வல்லமையை கொண்டே ஒவ்வொரு பொருட்களும் உண்டாகுகின்றன. பின்னர் அவை அனைத்தும் அவன் வசமே மீட்கப்படுகின்றன என்பதை அருள்மறை குர்ஆன் இவ்வாறு கூறுகின்றது:

    ‘எவனுடைய கைவசத்தில் ஒவ்வொரு பொருட்களின் அதிகாரம் இருக்கின்றதோ, (அவன்) மகாத்தூய்மையானவன், அவன் பக்கமே நீங்கள் மீட்டப்படுவீர்கள்’ (36:83).

    வாழ்க்கை என்பது மரணத்தோடு முடிந்து போகின்ற ஒன்றல்ல. அது முடிவில்லாத மறுமை வாழ்வை நோக்கி நம்மை நகர்த்திக் கொண்டு செல்கின்றது.

    இந்த உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளையும் படைத்தவன் இறைவன். ஆனால் மனிதன் இதை உணராமல் இறைவனின் படைப்பு குறித்து தர்க்கம் செய்கிறான். இதனை குர்ஆன் இவ்வாறு கூறுகின்றது:

    ‘தன்னுடைய (ஆரம்ப) படைப்பை (மனிதன்) மறந்த நிலையில் அவன் ஓர் உதாரணம் காட்டுகின்றான். எலும்புகளை அவை மக்கிப்போன நிலையில், யார் உயிர்ப்பிப்பது என்று கேட்கின்றான். (நபியே!) நீர் கூறுவீராக, அவற்றை முதன் முறையில் படைத்தவனே! அவற்றை மீண்டும் உயிர்பிப்பான், இன்னும் அவன் ஒவ்வொரு படைப்பையும் முற்றிலும் அறிந்தவனாவான்’ (36:78,79).

    ‘மனிதன் - அவனை ஒரு துளி விந்திலிருந்து நிச்சயமாக நாம் படைத்தோம் (இதனை) சிந்தித்து பார்க்க வேண்டாமா? பிறரும் அவன் பகிரங்கமான தர்க்கவாதியாகவே இருக்கின்றான்’ (36:77).

    விந்து துளிகளில் ஒன்றாக இருந்த மனிதன், உலகில் பலவீனமான நிலையிலேயே பிறந்து, பின்னர் வளர்ந்து வலிமை பெற்ற பின்பு, தான் முன்பு இருந்த நிலையை மறந்து வீண் தர்க்கம் புரிவதிலே மகிழ்வு காணுகின்றான்.

    இவ்வாறு தர்க்கம் செய்யும் மனிதன் இறைக்கட்டளைக்கு மாறுசெய்து சைத்தானின் மாயவலையில் சிக்கி ஏமாந்து விடுகிறான். இதை திருக்குர்ஆன் இவ்வாறு எச்சரிக்கிறது:

    ‘ஆதமுடைய மக்களே! நீங்கள் சைத்தானை வணங்க கூடாது, நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான விரோதி, என்று உங்களிடம் நாம் உறுதிவாங்கவில்லையா?’ (36:60).

    இப்படி இரக்கத்தோடு இறைவன் எச்சரித்த பின்பும் மனிதன் பாராமுகமாகவே இருக்கின்றான். இறைவனின் அத்தாட்சிகள் எத்தனையோ தன்னை சுற்றி இருந்தும் அதனை பார்க்க இயலாதவனாய் இருப்பதற்கு மனிதனுக்கு இரண்டு தடுப்புகள் இருப்பதாக குர்ஆன் கூறுவதை பார்ப்போம்.

    ‘அவர்களுக்கு முன்னால் ஒரு தடுப்பையும், அவர்களுக்கு பின்னால் ஒரு தடுப்பையும் நாம் ஏற்படுத்தி விட்டோம், (இவ்வாறு) நாம் அவர்களை மூடிவிட்டோம் அவர்கள் (சிந்தித்து) பார்க்க மாட்டார்கள்’ (36:09).

    இந்த உலகம் தான் நிச்சயமானது, சத்தியமானது என நம்புகின்ற மனிதர்களுக்கு உண்மையை புரிந்துகொள்ளும் ஆற்றல் இல்லாமலேயே போய்விடுகின்றது. அழிய கூடிய உடலையும், இந்த உலகையும் சத்தியம் என மனிதன் கருதும்போது, என்றும் அழியாத இறைவனையும், அவனது அத்தாட்சிகளையும் பார்க்க முடியாமலும், சிந்திக்க முடியாமலும் ஆகிவிடுகிறான்.



    அப்படிப்பட்டவர்களுக்கு இவ்வாறு விளக்கம் தருகிறது திருக்குர்ஆன்:

    ‘இரவும் அவர்களுக்கு ஓர் அத்தாட்சியாகும், அதிலிருந்து நாம் பகலை சுழற்றி எடுக்கின்றோம். அப்போது அவர்கள் இருளில் ஆகி விடுகின்றனர்’. ‘சூரியன் அதற்கு நிர்ணயிக்கப்பட்ட இடத்துக்கு செல்கின்றது. இது முற்றிலும் அறிந்தவன் (யாவற்றையும்) மிகைத்தவனான (அல்லாஹ்வின்) ஏற்பாடாகும்’. ‘சூரியன் அது சந்திரனை எட்டிவிட முடியாது. இன்னும் இரவு பகலை முந்திவிடவும் முடியாது. ஒவ்வொன்றும் (அதனதன்) வட்டவரைக்குள் நீந்திச் செல்கின்றன’ (36:37-40)

    விஞ்ஞானம் வளர்ச்சியடையாத ஆறாம் நூற்றாண்டில் குர்ஆன் பேசிய இந்த ஞானத்தை அறிந்த இன்்றைய ஆராய்ச்சியாளர்கள் ஆச்சரியப்படுகிறார்கள். இதுபோல் மனிதர்களுக்கு தேவையான ஞானம் அனைத்தும் திருக்குர்ஆனில் நிறைந்துள்ளது. இதை திருக்குர்ஆன் இவ்வாறு பிரகடனப்படுத்துகிறது:

    “முற்றிலும் ஞானம் நிறைந்த இந்தக் குர்ஆன் மீது சத்தியமாக!. (நபியே!) நிச்சயமாக நீங்கள் நம்முடைய தூதர்களில் ஒருவர். (நீங்கள்) நேரான வழியில் இருக்கின்றீர்கள்”. (36:2,3,4)

    இறைவன் பூரண ஞானமுள்ளவன் அவன் அருளிய குர்ஆன் ஞானம் நிறைந்தது. அதனை பெற்றுத் தந்த நபிகளார் நேரிய வழியில் ஞானத்தை பெற்றவர்கள் ஆவார்கள். எனவே ஞானம் என்பது இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படை அம்சமாகவே உள்ளது. அதனை அடைய குர்ஆன் இவ்வாறு வழிகாட்டுகின்றது.

    “ஈமான் (இறை நம்பிக்கை) கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்வீர்களானால் அவன் உங்களுக்கு (நன்மை தீமையைப்) பிரித்தறிந்து நடக்கக்கூடிய நேர்வழி காட்டுவான்; இன்னும் உங்களை விட்டும் உங்கள் பாவங்களைப் போக்கி உங்களை மன்னிப்பான்; ஏனெனில் அல்லாஹ் மகத்தான அருட்கொடையுடையவன்”. (8:29)

    இறைவனை அஞ்சி நேர்வழியில் நடப்பதால் மட்டுமே ஞானத்தை பெறமுடியும், அந்த ஞானம் மனிதனின் உணரும் ஆற்றலை அதிகரிக்க செய்து அவனை நன்மையின் வழியில் அழைத்து செல்லும். அதனை அடைய பாடுபடுவது நமது பொறுப்பாகும்.

    மு. முகம்மது சலாகுதீன், ஏர்வாடி, நெல்லை மாவட்டம்.
    நபி(ஸல்) பதில் பேசாமல் இருக்கவே அவர்களது கோபத்தைப் புரிந்து கொண்டு, அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் தமக்காகப் பேசும்படி கேட்டார் அபூ ஸுஃப்யான்.
    “நபியவர்களுடன் சேர விரும்பியவர்கள் நபியவர்களுடனும் குறைஷிகளுடன் சேர விரும்பியவர்கள் குறைஷிகளுடனும் சேர்ந்து கொள்ளலாம். யாரும் யார் மீதும் அதிருப்தியால் தாக்குதல் நடத்த கூடாது” என்பதுதான்  ஹுதைபிய்யா ஒப்பந்தம். ஆனால் குஜாஆவினர் நபியவர்களுடன் சேர்ந்துவிட்டார்களென்று குறைஷிகளும் பக்ரு கோத்திரத்தினரும், குஜாஆவினர் அசந்த நேரத்தில் தாக்குதல் நடத்தினர்.

    அத்துமீறல் குறித்து நபி(ஸல்) அவர்களுக்குத் தெரிய வந்தது. குஜாஆவினர் நபி(ஸல்) அவர்களிடம் புகார் தெரிவித்து உதவும்படியும், நியாயம் கிடைக்கும்படியும் கேட்டுக் கொண்டனர். இதற்காகக் குறைஷிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிந்த குறைஷியினர் அவசரமாக அபூ ஸுஃப்யானை தங்களது தூதராக மதீனாவிற்குப் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்த அனுப்பி வைத்தனர்.

    அபூ ஸுஃப்யான் மதீனாவை அடைந்து நபி(ஸல்) அவர்களிடம் பேசினார். நபி(ஸல்) பதில் பேசாமல் இருக்கவே அவர்களது கோபத்தைப் புரிந்து கொண்டு, அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் தமக்காகப் பேசும்படி கேட்டார் அபூ ஸுஃப்யான். அபூ பக்ர்(ரலி) அவர்களும் மறுக்க, அதன்பின் உமர்(ரலி), அலி(ரலி), ஃபாத்திமா(ரலி) என்று ஒவ்வொருவரிடமும் சிபாரிசுக்காகச் சென்று தோற்று மீண்டும் மக்காவிற்குத் திரும்பினார் அபூ ஸுஃப்யான்.



    நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களை மக்காவிற்குச் செல்லவும், அவர்களின் மீது போர் தொடுக்கவும் தயாராகும்படி கட்டளையிட்டார்கள். முஸ்லிம்களின் படை பலம் மக்காவாசிகளுக்குத் தெரியாமல் இருக்க, சிறு சிறு படைகளாக வெவ்வேறு இடங்களிலிருந்து வந்து சேர்ந்து கொள்ள நபி(ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். இவ்விஷயம் குறைஷிகளுக்கு ஒற்றர்கள் மூலம் தெரிந்துவிடக் கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள்.

    அப்போது நபி(ஸல்) அவர்களுக்கு ஒற்றர் மூலம் மக்காவிற்கு விஷயம் செல்லவிருக்கிறது என்ற செய்தியை அறிந்து, அதைத் தடுக்க அலீ(ரலி), அபூ மர்ஸத்(ரலி), ஸுபைர்(ரலி) மூவரையும் அனுப்பினார்கள். நபி(ஸல்) அவர்களின் போர் ரகசியத் திட்டங்களைத் தெரிவிக்கும் கடிதத்தை ஹாதிப் இப்னு அபீ பல்தஆ என்பவர் ஒரு பெண்ணின் மூலம் குறைஷிகளுக்குக் கடிதம் அனுப்புகிறார், அக்கடிதத்தைத் தடுக்க வேண்டும், அதனைக் கைப்பற்ற வேண்டுமென்று புறப்பட்டனர்.

    நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்ட இடத்தில் அந்தப் பெண் தன்னுடைய ஒட்டகத்தில் சென்று கொண்டிருக்க, மூவரும் அவளை வழி மறித்து அவளிடம், 'கடிதம் எங்கே?' என்று கேட்டனர். அவள், 'எம்மிடம் கடிதம் எதுவுமில்லை' என்று பதிலளித்தாள். சத்தியம் செய்தாள். அவள் அமர்ந்திருந்த ஒட்டகத்தை அவர்கள் படுக்க வைத்து அந்தக் கடிதத்தைத் தேடினர். ஆனால் கடிதத்தைக் காணவில்லை.

    உடனே அவர்கள் அப்பெண்ணிடம், 'நபி(ஸல்) அவர்கள் பொய் சொல்லமாட்டார்கள். ஒன்று, நீயாகக் கடிதத்தை எடுத்துக் கொடு; அல்லது உன்னைச் சோதிப்பதற்காக உன்னுடைய ஆடையை நாங்கள் கழற்ற வேண்டியிருக்கும்' என்று பயமுறுத்தினர். அச்சத்தில் அவள் கூந்தல் நீண்டு தொங்கும் தன்னுடைய இடுப்புப் பகுதிக்கு அவள் கையைக் கொண்டு சென்றாள். அவள் ஒரு துணியை இடுப்பில் கட்டியிருந்தாள். அங்கிருந்து அந்தக் கடிதத்தை வெளியில் எடுத்தாள். அந்தக் கடிதத்துடன் நபி(ஸல்) அவர்களிடம் வந்து சேர்ந்தனர்.

    ஹாதிப் இப்னு அபீ பல்தஆ ஏன் துரோகமிழைத்தார் என்று விசாரிக்க அழைக்கப்பட்டார்.

    ஸஹீஹ் புகாரி 4:64:3983

    -ஜெஸிலா பானு.
    ‘ஒருவர் தன் கையால் உழைத்து உண்பதை விடச் சிறந்த உணவை ஒருபோதும் உண்ண முடியாது’ என நபியவர்கள் தன் தோழர்களிடம் குறிப்பிடுகிறார்கள்.
    உழைப்பு குறித்து இஸ்லாம் பல இடங்களில் குறிப்பிடுகிறது. உழைப்புதான் ஒரு மனிதனை உயர்த்தும் என்பதை நபிகள் நாயகம் அவர்கள் வலியுறுத்திக் கூறுகிறார்கள். உழைக்காமல் பிறரின் உழைப்பில் தங்கள் காலத்தை கழித்துவிடலாம் என்று எண்ணுபவர்களை இஸ்லாம் அங்கீகரிக்கவில்லை. அதேபோல் உழைக்காமல் இறைவன் கொடுப்பான் என்று பள்ளிவாசலில் முடங்கி கிடப்பதிலும் எந்த பிரயோசனமும் இல்லை என்பதை இஸ்லாம் அழுத்திச் சொல்கிறது. உடலில் வலு இருந்தும் உழைக்காமல் யாசகம் கேட்பதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை.

    நபிகள் நாயகம் அவர்களிடம் ஓர் இளைஞன் வந்து யாசகம் கேட்டான். அவனைப் பார்த்த நபியவர்கள் ‘உன்னுடைய வீட்டில் ஏதேனும் இருக்கிறதா?’ எனக் கேட்டார்கள். ‘ஒரே ஒரு போர்வைதான் உள்ளது’ என்று அந்த இளைஞன் கூறினான். அந்த போர்வையை கொண்டு வரச் செய்த நபியவர்கள், அந்த போர்வையை ஏலம் விட்டார்கள். அந்த பணத்தைக் கொண்டு கோடரி ஒன்றை வாங்கி அந்த இளைஞனிடம் கொடுத்துவிட்டு ‘காட்டிற்கு சென்று விறகு வெட்டிப் பிழைத்துக்கொள். யாசகம் கேட்பதைவிட அதுதான் சிறந்தது’ என்று கூறி அந்த இளைஞனை அனுப்பி வைத்தார்கள்.

    பதினைந்து நாட்கள் கழித்து மீண்டும் வந்தான் அந்த இளைஞன், ‘தற்போது நானும் என் குடும்பமும் மகிழ்ச்சியுடன் இருக்கிறோம். தங்களுக்கு நன்றி கூறவே வந்தேன்’ என்று நன்றி சொல்லி விடைபெற்று சென்றான்.

    பொருள் வேண்டுவோருக்கு பொருளைக் கொடுப்பதைவிட பொருள் ஈட்டக் கற்றுக்கொடுக்க வேண்டும். அதற்கு வழிவகைகளை செய்து கொடுக்க வேண்டும் என்பதுதான் நபிகள் நாயகம் அவர்களின் மூலம் மனித சமூகத்திற்கு இஸ்லாம் வழங்கியிருக்கும் நற்செய்தியாகும்.



    ‘ஒருவர் தன் கையால் உழைத்து உண்பதை விடச் சிறந்த உணவை ஒருபோதும் உண்ண முடியாது’ என நபியவர்கள் தன் தோழர்களிடம் குறிப்பிடுகிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் உழைப்பின் மூலமே தனது வாழ்வையும் அவர்கள் அமைத்துக்கொண்டார்கள்.

    மிகப்பெரிய மார்க்க அறிஞராக, மிகப்பெரிய சாம்ராஜ்யத்தின் அதிபராக நபியவர்கள் இருந்த போதிலும் தொடக்க காலத்தில் ஆடு மேய்ப்பது, பின்னர் வியாபாரம் செய்வதுமாகத்தான் இருந்தார்கள். நபிகள் நாயகம் மட்டுமல்ல இறை வனால் அனுப்பப்பட்ட அனைத்து தூதர்களும் உழைத்துதான் தங்களது காலத்தை கடினத்தோடு கழித்திருக்கிறார்கள்.

    தனது செய்தியை மக்களிடம் எடுத்துரைப்பதற்காக அனுப்பப்பட்ட தூதர்களையே உழைத்து தான் வாழ வேண்டும் எனக் கட்டளை பிறப்பித்திருக்கிற இறைவன், மனிதர்கள் உழைக்காமல் உண்பதை எவ்வாறு ஏற்றுக்கொள்வான்.

    இறைவனிடம் கையேந்தினால் அவன் தருவான், அவன் தங்களது கஷ்டங்களை போக்குவான் என்ற நம்பிக்கையில் உழைக்கச் செல்லாமல் பள்ளிவாசலில் இறை வணங்குதலை மட்டுமே சிலர் மேற்கொண்டு வருகிறார்கள். அவர்களை நோக்கி தனது சாட்டையை உயர்த்தி கலீபா உமர் (ரலி) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்: ‘உழைக்காமல், வருமானத்தைத் தேடி வெளியே செல்லாமல் உங்களில் எவரும் இருக்கக்கூடாது. அல்லாஹ்வே எனக்கு உணவை வழங்கு என பிரார்த்தனை செய்தால் மட்டும் போதாது. வானம் தங்கத்தையோ, வெள்ளியையோ மழையில் பொழிவதில்லை’.

    உழைப்பின் அருமையை நாம் அனைவரும் உணர்ந்துகொண்டு, அதற்கு ஏற்ப இறைவனை வணங்கி, உழைத்து வாழ்வோம்.

    வி.களத்தூர் எம்.பாரூக்.

    ×