தொழில்நுட்பச் செய்திகள்
ரிலையன்ஸ் ஜியோ

மீண்டும் விலை உயர்வுக்கு திட்டமிடும் டெலிகாம் நிறுவனங்கள் - இணையத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்?

Published On 2022-05-25 06:02 GMT   |   Update On 2022-05-25 06:02 GMT
இந்திய டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனங்கள் மீண்டும் சேவை கட்டணங்களை உயர்த்த திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களான ரிலைன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வி (வோடபோன் ஐடியா) சேவை கட்டணங்களை மீண்டும் உயர்த்த திட்டமிடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன் படி இந்த ஆண்டு தீபாவளி காலக்கட்டத்தில் டெலிகாம் நிறுவனங்கள் தங்களின் சேவை கட்டணங்களை உயர்த்தலாம் என கூறப்படுகிறது.

நிறுவனங்கள் சார்பில் ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து கிடைக்கும் வருவாயை (ARPU) அதிகப்படுத்தும் முயற்சியாக ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வி போன்ற நிறுவனங்கள் தங்களது சலுகைகளின் விலையை 10 முதல் 12 சதவீதம் வரை உயர்த்த திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. 



விலை உயர்வு அமலுக்கு வந்தாலும், மூன்று நிறுவனங்கள் கூட்டாக சேர்ந்து சுமார் 35 முதல் 40 மில்லியன் பயனர்களை கூடுதலாக சேர்க்கும் என கணிக்கப்பட்டு உள்ளது. புது வாடிக்கையாளர்களில் பெரும்பாலானோர் ஊரக பகுதிகளை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்த விலை உயர்வை கொண்டு மூன்று முன்னணி நிறுவனங்களும் அடுத்த ஆண்டு இறுதியில் ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து பெறும் வருவாயை (ARPU) பத்து சதவீதம் வரை அதிகரித்துக் கொள்ள முடியும் என தனியார் ஆய்வு நிறுவனம் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

பாரதி ஏர்டெல் நிறுவன தலைமை செயல் அதிகாரியும் நிர்வாக இயக்குனருமான கோபால் விட்டல், இந்த ஆண்டு டெலிகாம் சேவை கட்டணங்கள் மீண்டும் உயர்த்தப்படலாம் என ஏற்கனவே அறிவித்து இருந்தார். எனினும், வரும் மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு இந்த விலை உயர்வு அமலுக்கு வராது என அவர் தெரிவித்து இருந்தார்.
Tags:    

Similar News