தொழில்நுட்பம்

புதிய பிராசஸருடன் 2019 ஐபாட் டச் இந்தியாவில் அறிமுகம்

Published On 2019-05-29 06:16 GMT   |   Update On 2019-05-29 06:16 GMT
ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் புதிய பிராசஸருடன் 2019 ஐபாட் டச் மாடலை அறிமுகம் செய்துள்ளது.



ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் புதிய ஐபாட் டச் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இது ஆப்பிள் நிறுவனத்தின் ஏழாம் தலைமுறை ஐபாட் ஆகும். 

2019 ஐபாட் டச் மாடலில் ஆப்பிள் ஏ10 ஃபியூஷன் பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர புதிய ஐபாட் மாடலில் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி, க்ரூப் ஃபேஸ் டைம் மற்றும் பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. புதிய ஆப்பிள் ஐபாட் டச் மாடலில் ஆப்பிள் நிறுவனத்தின் ஏ10 ஃபியூஷன் சிப் வழங்கப்பட்டுள்ளது. இதே பிராசஸர் ஐபோன் 7 மாடலில் வழங்கப்பட்டது.

புதிய ஐபாட் டச் மாடலில் பழைய பிராசஸர் வழங்கப்பட்டிருக்கிறது என்றாலும், இதில் முந்தைய மாடலில் இல்லாத பல்வேறு அம்சங்களை இயக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி, க்ரூப் ஃபேஸ் டைம் உள்ளிட்டவை முதல்முறையாக ஐபாட் டச் மாடலில் வழங்கப்பட்டுள்ளது. 



புதிய பிராசஸர், 256 ஜி.பி. மெமரி தவிர 2019 ஐபாட் மாடலின் வடிவமைப்பில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. இதில் 4-இன்ச் டிஸ்ப்ளே, ஹோம் பட்டன், கேமராக்கள் உள்ளிட்டவை முந்தைய மாடல்களில் இருப்பதை போன்றே வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் புதிய ஐபாட் மாடலில் ஆப்பிள் ஆர்கேட் கேமிங் சேவைக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.

புதிய தலைமுறை ஐபாட் டச் மாடலில் கேமிங் அனுபவம் சீராக இருக்கும் என்றும், காட்சிகள் மிகவும் அழகாக தெரியும் என்றும் ஆப்பிள் தெரிவித்துள்ளது. கேமிங், கல்வி மற்றும் பிரவுசிங் உள்ளிட்டவற்றில் ஏ.ஆர். அனுபவங்கள் பயனர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புதிய ஐபாட் டச் மாடல் ஸ்பேஸ் கிரே, வைட், கோல்டு, புளு, பின்க் மற்றும் பிராடக்ட் ரெட் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இதன் 32 ஜி.பி. மாடல் விலை ரூ.18,900, 128 ஜி.பி. மாடல் ரூ.28,900 என்றும் 256 ஜி.பி. மாடல் விலை ரூ.38,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெறுகிறது.
Tags:    

Similar News