அறிந்து கொள்ளுங்கள்
null

அமெரிக்காவில் ஸ்மார்ட்வாட்ச் விற்பனையை நிறுத்திய ஆப்பிள் - காரணம் ஐ.டி.சி. தான்..

Published On 2023-12-19 10:13 GMT   |   Update On 2023-12-19 10:14 GMT
  • ஆப்பிள் வாட்ச்களை இறக்குமதி செய்ய சர்வதேச வர்த்தக கூட்டமைப்பு தடை.
  • விற்பனையை மீண்டும் தொடங்கும் பணிகளில் ஆப்பிள் ஈடுபட்டுள்ளது.

ஆப்பிள் நிறுவனம் அமெரிக்காவில் தனது ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 மற்றும் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 மாடல்களின் விற்பனையை நிறுத்துவதாக அறிவித்து இருக்கிறது. ஆப்பிள் மற்றும் மருத்துவ தொழில்நுட்ப நிறுவனமான மசிமோ இடையே சர்வதேச வர்த்தக கூட்டமைப்பில் (ஐ.டி.சி.) நடைபெற்று வந்த காப்புரிமை தொடர்பான வழக்கில் ஆப்பிள் நிறுவனத்திற்கு எதிரான தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.

இதன் காரணமாக அமெரிக்க சந்தையில் ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 மற்றும் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 மாடல்களை ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோர் மற்றும் ரீடெயில் ஸ்டோர்களில் வாடிக்கையாளர்களால் வாங்க முடியாது. அமெரிக்கா தவிர மற்ற நாடுகளில் இரு சாதனங்களின் விற்பனை தொடர்ந்து நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 


இது தொடர்பாக 9டு5மேக் வெளியிட்டுள்ள தகவல்களில், பிலட் ஆக்சிஜன் சென்சிங் அம்சம் தொடர்பாக மசிமோ நிறுவனம் பதிவு செய்திருந்த காப்புரிமைகளை ஆப்பிள் மீறியது கண்டறியப்பட்டது. இதையடுத்து தேர்வு செய்யப்பட்ட ஆப்பிள் வாட்ச் மாடல்களை அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்ய சர்வதேச வர்த்தக கூட்டமைப்பு தடை விதித்துள்ளதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

மசிமோ காப்புரிமை தொடர்பான குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுத்துள்ள ஆப்பிள் நிறுவனம் ஆப்பிள் வாட்ச் விற்பனையை மீண்டும் தொடர்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டிசம்பர் 25-ம் தேதிக்குள் இறுதி முடிவை எடுக்க இருக்கிறார்.

இதைத் தொடர்ந்து டிசம்பர் 26-ம் தேதி சர்வதேச வர்த்தக கூட்டமைப்பின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஆப்பிள் நிறுவனம் முடிவெடுத்துள்ளது. ஆப்பிள் மற்றும் மசிமோ இடையே காப்புரிமை சார்ந்த பிரச்சினை கடந்த 2020 ஆண்டு முதல் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News