வெகு விமர்சையாக நடைபெற்ற காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் மகா கும்பாபிஷேகம்
- காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் 17 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேக விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.
- வாண வேடிக்கைகள் மற்றும் 70-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்களுடன் வாத்தியங்கள் முழங்க சிறப்பாக நடைபெற்றது.
பஞ்சபூத தலங்களில் நிலத்திற்கு உரியதாக போற்றப்படுகிறது காஞ்சிபுரம் ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர் கோவில். பழமையும், பெருமையும் வாய்ந்த இந்த கோவிலில் 29 கோடி ரூபாய் செலவில் பழமை மாறாமல் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மகா கும்பாபிஷேக விழாவையொட்டி யாகசாலையில் சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் ஓத நேற்று எட்டாம் கால பூஜை விமரிசையாக நடைபெற்றது. தமிழகம் முழுவதும் இருந்து வந்த 40-க்கும் மேற்பட்ட ஓதுவார்கள் பக்க இசைக்கருவிகளுடன் திருமுறை பாராயணம் பாடினார்கள்.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் 17 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேக விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.
அதிகாலை 5.45 மணிக்கு ராஜகோபுரம் மற்றும் சன்னதி கோபுரங்களுக்கு புனித நீர் தெளித்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. 6.30 மணிக்கு மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம், வாண வேடிக்கைகள் மற்றும் 70-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்களுடன் வாத்தியங்கள் முழங்க சிறப்பாக நடைபெற்றது.
நண்பகல் 12 மணிக்கு மகா அபிஷேகம் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு திருக்கல்யாணம் பஞ்ச மூர்த்திகள் வீதி உலாவும் நடைபெறுகிறது.
கும்பாபிஷேக விழாவையொட்டி ஏகாம்பரநாதர் கோவில் ராஜகோபுரம், ரிஷிகோபுரம் உள்பட கோபுரங்கள் அனைத்தும் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. கோவிலில் மூலவர் நுழைவுவாயில் முன்பாக வண்ண வண்ண பூக்களால் தோரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ரிஷி கோபுரத்தின் நுழைவுவாயில் பகுதியில் 'காஞ்சிபுரம் ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர்' என வண்ண மலர்களால் எழுத்துகள் கோர்க்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது.