weekly rasipalan 8.2.2026 to 14.2.2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான வார ராசிபலன்கள்
- மேஷம் தொழில் சார்ந்த வெற்றிகள் தேடி வரும் வாரம்.
- மீனம் புதிய தொழில் ஒப்பந்தம் கிடைக்கும்.
மேஷம்
தொழில் சார்ந்த வெற்றிகள் தேடி வரும் வாரம். மேஷ ராசிக்கு தனத்தை கொடுக்கக்கூடிய கிரகமான சுக்கிரன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் தோற்றப் பொலிவில் புத்துணர்ச்சி பெறுவீர்கள். புதிய தொழில் சார்ந்த ஆர்வம் அதிகரிக்கும். அரசு ஊழியர்களுக்கு கூடுதல் பொறுப்புகள், பணிச் சுமையால் மன சஞ்சலம் உண்டாகும். எந்தப் பஞ்சாங்கத்தின் படி பார்த்தாலும் மேஷ ராசிக்கு ஏழரை சனி நடக்கும் காலம் என்பதால் தொழில் சார்ந்த அரசின் சட்ட திட்டங்களை விதிகளை மதிப்பது அவசியம்.
விரலுக்கேற்ற வீக்கம் தான் இருக்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டு அகலக்கால் வைப்பதைத் தவிர்க்க வேண்டும். உத்தியோகத்தில் விரும்பிய மாற்றங்கள் உண்டாகும். விரும்பியவர்கள் வந்து இணைவார்கள். 10.2.2026 அன்று நள்ளிரவு 1.11 மணி முதல் 12.2.2026 அன்று பகல் 1.42 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் அதிக உழைப்பும் குறைந்த ஊதியமும் கிடைக்கும். அலைச்சல் மிகுந்த பயணம் உண்டாகும். கொடுக்கல், வாங்கலில் நிதானத்தை கடைப்பிடிக்கவும். தாய் வழியில் மனக்கவலை கருத்து வேறுபாடு உண்டாகும். ஸ்ரீ லட்சுமி நரசிம்மரை வழிபடவும்.
ரிஷபம்
இழுபறிகள் குறையும் வாரம். லாப ஸ்தானத்தில் சனி பகவான் சுயசாரத்தில் சஞ்சரிப்பதால் குறைந்த உழைப்பும் நிறைந்த வருமானமும் கிடைக்கும். தொழிலில் நல்ல பணப்புழக்கம் இருக்கும். வாராக்கடன்கள் வசூலாகும் வாய்ப்பு உள்ளது. பூர்வீகச் சொத்து தொடர்பான இழுபறிகள் நீங்கும். உங்களுக்கு சேர வேண்டிய பாகப்பிரிவினை பங்கு முழுமையாக சொத்தாகவோ, பணமாகவோ வந்து சேரும். சிலர் பூர்வீகப் பங்குப் பிரிவினை பணத்தில் பழைய கடன்களை அடைத்து விட்டு புதிய வீடு, வாகனம் வாங்கலாம்.
பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்சினை மனக்கசப்பு முடிவுக்கு வரும். தொழில் தொடர்பான முயற்சியில் தந்தை, மகனுக்கு ஒருமித்த கருத்து நிலவும். உடல் உறுப்பில் இடது காது, கணுக்கால், பின் முதுகில் அவ்வப்போது வலி தோன்றலாம். ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டும்.12.2.2026 அன்று பகல் 1.42 மணி முதல் 15.2.2026 நள்ளிரவு 12.42 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் திட்டமிட்ட காரியங்களில் பின்னடைவு இருக்கும். எதிர்மறை சிந்தனைகளை தவிர்ப்பது நல்லது. அறிமுகம் இல்லாத புதிய நபர்களிடம் பழகக் கூடாது. அஷ்டலட்சுமிகளை வழிபடவும்.
மிதுனம்
திடீர் திருப்பங்கள் உண்டாகும் வாரம். ராசியில் உள்ள ஜென்ம குரு பகவான் வெகு விரைவில் வக்கிர நிவர்த்தி அடையப் போகிறார். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். பேச்சாற்றலால் லாபம் சம்பாதிக்க முயல்வீர்கள். பற்றாக்குறை பட்ஜெட் உபரி பட்ஜெட்டாகும். உறவினர் பகை அகலும். வியாபாரம், தொழிலில் இருந்த மந்த நிலைமாறும். பெரிய மனிதர்களின் ஆதரவோடு புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் வெற்றி உண்டாகும். ஊடகங்களில் பணிபுரிபவர்களின் தனித் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். பணி நிரந்தரமாகும்.
சம்பள உயர்வுடன் கூடிய பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. சிலருக்கு விருப்ப திருமணம் நடக்கலாம். பெண்களின் முயற்சிக்கு கணவரின் ஆதரவும், உதவியும் கிடைக்கும். திருமணத்தடை அகலும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு பூர்வீகம் வந்து செல்வதில் நிலவிய தடை, தாமதம் அகலும். தினமும் சிவபுராணம் படிக்க தொல்லைகள், மனக் கவலைகள் அகலும்.
கடகம்
உழைப்பிற்கான அதிர்ஷ்டத்தை அடையக் கூடிய அற்புதமான வாரம். தன ஸ்தான அதிபதி சூரியன் சம சப்தம ஸ்தானத்தில் நின்று ராசியை பார்க்கிறார். இது சிறப்பான அமைப்பு என்பதால் சகல விதத்திலும் அனுகூலங்கள் உண்டாகும். மறைமுகப் பிரச்சினைகள் இருந்த இடம் தெரியாமல் மறையும். தொழிலை அபிவிருத்தி செய்ய வேண்டுமென்ற எண்ணங்கள் பூர்த்தியாகும். சிலருக்கு கூட்டுத் தொழிலில் மாற்றங்கள் ஏற்படும். சிலருக்கு கவுரவப் பதவிகள் உயர்வுகள் கிடைக்கும். தொழில் தொடர்பாக அடிக்கடி அலைச்சல் மிகுந்த பயணங்கள் செய்ய நேரும்.
சிலருக்கு சொத்துக்கள் அடமானம், விற்றல் மூலமும் பணம் கிடைக்கும். சிலருக்கு சொத்துக்கள் வாங்க, கட்ட, விஸ்தரிக்கத் தேவையான பொருள் உதவி கிடைக்கும். சிறப்பான பணவரவால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்கள் படிப்படியாக குறையத் தொடங்கும். தாய் மாமாவின் ஆதரவால் தாய்வழிச் சொத்து தொடர்பான சர்ச்சைகள் முடிவுக்கு வரும். மங்களகரமான சுப நிகழ்வுகள் நடைபெறும். நீண்ட காலமாக தீர்க்க முடியாத பல பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். அம்பிகை வழிபாட்டால் சங்கடங்கள் தீரும்.
சிம்மம்
சிந்தித்து செயல்பட வேண்டிய காலம். ராசிக்கு எட்டாம் இடத்தில் சனி பகவான் சஞ்சரிப்பதால் தெளிவாக திட்டமிட்டு செயல்பட முடியாத நிலை இருக்கும். சிலருக்கு வேலை மாற்றம், வீடு மாற்றம், தொழில் மாற்றம், ஊர் மாற்றம் போன்றவைகள் ஏற்படலாம். வேலை பளு கூடும். எளிமையாக முடிய வேண்டிய வேலைகள் இழுபறியாகும். பிறரை நம்பி ஒப்படைத்த செயல்களால் விரோதம் உண்டாகும். கூட்டுக் குடும்பம், கூட்டுத் தொழிலில் பிரிவினை உண்டாகும். தொழில் சார்ந்த துறையில் உங்களின் புதிய முயற்சிகளில் தடை உண்டாகலாம்.
சொத்துக்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இழுபறியாக இருக்கும். பிள்ளைகளின் திருமண முயற்சி கைகூடும். முன் கோபத்தைக் குறைத்து நிதானமாக செயல்படவும். கணவன், மனைவி உறவில் அன்பு மிளிரும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். குடும்ப உறவுகளிடம் தேவையற்ற பேச்சை தவிர்க்க வேண்டும். தொழில் நிமித்தமாக பிரிந்த தம்பதியினர் சேர்ந்து வாழ்வார்கள். சனிக்கிழமை ஸ்ரீ காலபைரவரை வழிபடவும்.
கன்னி
தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும் வாரம். ராசி மற்றும் பத்தாம் அதிபதியான புதன் ராசிக்கு ஆறில் ராகுவுடன் இணைந்து குரு பார்வை பெறுகிறார்கள். புதிய முயற்சிக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மறைமுக எதிரிகளால் ஏற்பட்ட இன்னல்கள் விலகும். உடன் பிறந்தவர்கள் மற்றும் தந்தையால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழிலில் கடந்த காலங்களில் நிலவிய நெருக்கடிகள் குறைந்து படிப்படியாக முன்னேற்றம் ஏற்படும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்.
வேலை இழந்தவர்களுக்கு புதிய ஆன்லைன் வேலை கிடைக்கும். தாயின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். போட்டி பந்தயங்களில் வெற்றி நிச்சயம். வரவிற்கு ஏற்ற செலவும் இருக்கும். பெண்களுக்கு தாய் வழிச் சொத்து கிடைப்பதில் நிலவிய தடை, தாமதங்கள் சீராகும். முழுப் பங்கும் முறையாக வந்து சேரும். புதிய நட்புக்கள் கிடைக்கும். வம்பு, வழக்குகளில் இருந்த இழுபறி நிலைமாறி தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக முடியும். மேலும் சுப பலனை அதிகரிக்க ஸ்ரீ மீனாட்சியை வழிபடவும்.
துலாம்
புதிய வாய்ப்புகள் கைகூடும் வாரம். ராசி அதிபதி சுக்கிரன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு மற்றும் புதனுடன் சஞ்சரிக்கிறார். உங்களின் பலமும், வளமும் அதிகரிக்கும். வாழ்வில் நீங்கள் எதிர்பார்க்கும் மிகப் பெரிய மாற்றங்கள் உண்டாகும். பெயர், புகழ், அந்தஸ்து உயர்ந்து சமுதாயத்தில் நல்லதொரு இடத்தினை பிடிக்க முடியும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உங்களின் தனித் திறமைகளை வெளிப் படுத்தக்கூடிய சிறப்பான சந்தர்ப்பங்கள் கிடைக்கும். கமிஷன் ஏஜென்சி, கான்டிராக்ட், பங்குச் சந்தை போன்ற துறையில் இருப்பவர்களுக்கு அதிர்ஷ்டமான லாபகரமான பலன் கிடைக்கும்.
பணிச்சுமைகள் குறைந்து மன நிம்மதியுடன் பணிபுரிய முடியும். நிலவிய தேக்கங்கள் விலகி லாபங்கள் கிடைக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி தொழிலை அபிவிருத்தி செய்ய முடியும். பிரிந்து சென்ற உறவுகள் தேடி வருவார்கள். சிலர் புத்திர பாக்கியத்தை அடைய செயற்கை கருத்தரிப்பு முறையை அணுகலாம். பெண்களுக்கு ஆடம்பர பொருட்கள் வாங்கும் ஆர்வம் அதிகரிக்கும். தினமும் மாலை வேளையில் ஸ்ரீ லஷ்மி நரசிம்மரை வழிபட கடன் தீர்ந்து தாராள தன வரவு உண்டாகும்.
விருச்சிகம்
புதிய அனுபவங்களால் மகிழ்ச்சி உண்டாகும் வாரம். தன அதிபதி குரு பகவான் தன ஸ்தானத்தை பார்ப்பதால் பொருளாதார நெருக்கடிகள் குறையும். எதிர்பாராத தன லாபம் உண்டாகும். வாழ்க்கைத் தரம் உயரும். விலை உயர்ந்த பொருட்கள் சேர்க்கை அதிகரிக்கும். எதையும் சமாளித்து நம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். சில்லறை வியாபாரிகளுக்கு விற்பனை அதிகரிக்கும். தொழிலை விட்டு விலகி விடலாம் என்று நினைத்தவர்களுக்கு கூட நம்பிக்கையை அதிகரிக்கும் விதமான மாற்றங்கள் ஏற்படும்.
நிலுவையில் உள்ள சம்பள பாக்கிகள் வந்து சேரும். காணாமல் போன நகை, பணம் கிடைக்கும். கடந்த கால கடன் பிரச்சினைகள் குறையத் தொடங்கும். தேவையற்ற செலவுகள் குறைந்தால் சேமிப்பு உயரும். குடும்பத்தில் நிலவிய கருத்து வேறுபாடுகள் விலகி மன நிம்மதி ஏற்படும். வீடு, வாகன யோகம் கை கூடி வரும். சித்தப்பாவின் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பழகிய வட்டாரத்தில் மதிப்பும், அந்தஸ்தும் கூடும். பிறரை அண்டி பிழைத்த நிலை மாறும். அரசு சம்பந்தப்பட்ட முயற்சியில் சாதகமான பலன் எதிர்பார்க்கலாம். சிதம்பரம் நடராஜரை வழிபடவும்.
தனுசு
தனித்திறமை வெளிப்படும் வாரம். ராசி அதிபதி குரு பகவான் தன் வீட்டைத் தானே பார்ப்பதால் முயற்சியில் தளர்ச்சி இல்லாத வளர்ச்சி உண்டாகும். புதிய தேடல் உண்டாகும். உடன் பிறப்புகளால் அனுகூலமும், ஆதாயமும் உண்டாகும். உழைப்பிற்கான பலன் கிடைக்கும் அர்தாஷ்டமச் சனி தொடங்கினாலும் குரு ராசியை பார்ப்பதால் படித்து முடித்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். வங்கிக் கடன் கிடைக்கும். வேலை ஆட்களால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும். பிரார்த்தனைகள் நிறைவேறும்.
குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்கள் மூலம் சாதகமான உதவிகள் கிடைக்கும். வரவிற்கும், செலவிற்கும் சரியாக இருக்கும். ஆடம்பரச் செலவுகளையும் அவசியமற்ற கடனையும் குறைப்பது நல்லது. உடல் உபாதைகள், நோய் தொந்தரவு மாற்று வைத்தியத்தில் பலன் தரும். தாத்தா பாட்டியை சந்தித்து நல்லாசி பெறுவீர்கள். தாராள தன வரவு உண்டு. திருமணத் தடை விலகும். வீட்டில் சுப விசேஷங்கள் நடக்கும். கணவன், மனைவி ஒற்றுமை ஓங்கும். வீட்டில் ஸ்ரீ சக்ரம் வைத்து வழிபடவும்.
மகரம்
அறிவாற்றல் பெருகும் வாரம். ராசியில் நிலவிய கிரக சேர்க்கையில் மாற்றம் ஏற்படுகிறது. வார இறுதியில் செவ்வாய் மட்டும் ராசியில் சஞ்சரிப்பார். பிற மாத கிரகங்கள் தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிப்பார்கள். உத்தியோகஸ்தர்கள் கடினமான பணிகளைக் கூட சுலபமாக முடித்து நல்ல பெயர் எடுப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் நிலவிய பிரச்சினைகள் விலகி வளர்ச்சி கிட்டும். சிலருக்கு தொழில் கடன் கிடைக்கும். பிள்ளைகளின் உதவியால் அடமானச் சொத்து நகைகளை மீட்பீர்கள்.
பூர்வீக சொத்து தொடர்பான முயற்சிகள் சிறு மன சஞ்சலத்திற்குப் பிறகு சாதகமாகும். உங்களைச் சுற்றி இருப்பவர்களில் உண்மையாக இருப்பவர்கள் யார்? பகடைக்காயாக பயன்படுத்து பவர் யார்? என்ற அனுபவ உண்மை புரியும். இறை பணிகளில் ஈடுபாடுகள் ஆர்வம் எழும். வழக்குகளில் வெற்றி பெறும் சூட்சுமத்தை அறிவீர்கள். வெளிநாட்டு குடியுரிமை கிடைப்பதில் நிலவிய தடை தாமதங்கள் அகலும். மருத்துவத்தில் நோய் கட்டுப்படும். சிலருக்கு வீண் விரயங்களும் இருக்கும். ராஜ அலங்கார முருகனை வழிபடவும்.
கும்பம்
வாழ்க்கைத் தரம் உயரும் வாரம். ராசியில் உள்ள ராகுவுடன் புதன் சுக்கிரன் சூரியன் சேர்க்கை ஏற்படபோகிறது. ராசியில் உள்ள ராகுவுடன் சூரியன் சேர்வது கிரகணதோஷ அமைப்பாகும். இந்த மாதம் ஏற்படப்போகும் சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது என்றாலும் ராசியில் கிரகணம் ஏற்படுவதால் வாழ்க்கையை பாதிக்கும் முக்கிய முடிவுகளை தவிர்த்துக் கொள்வது நல்லது. தம்பதிகளிடம் நெருக்கம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.
பணிபுரியும் இடத்தில் சக நண்பர்களிடம் ஏற்பட்ட மனபேதம் தீரும். திருமண முயற்சியில் சாதகமான பலன் உண்டு. சிலருக்கு மறுமணம் நடக்கும். பெண்களுக்கு வேலை பார்க்கும் இடத்தில் இணக்கமான சூழ்நிலை உண்டாகும். தந்தை வழியில் உதவி, பூர்வீகச் சொத்து சம்பந்தமாக சாதகமான பலன்களை எதிர்பார்க்கலாம். இந்த மாதம் முழுவதும் சூரியன் மீனத்திற்கு செல்லும் வரை ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30-6 மணிக்குள் சிவ வழிபாடு செய்து வர தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
மீனம்
புதிய தொழில் ஒப்பந்தம் கிடைக்கும். லாப ஸ்தானத்தில் உச்ச செவ்வாய் சஞ்சரிப்பதால் புதிய நம்பிக்கை பிறக்கும். எதிர்காலத் தேவைகளுக்கு சேமிக்க தொடங்குவீர்கள். கடனால் சுணங்கிய தொழிலை முன்னேற்ற பாதைக்கு எடுத்துச் செல்லும் மார்க்கம் தென்படும். பிள்ளைகளுக்கு வேலை கிடைத்து குடும்ப வருமானம் உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். உங்கள் பேச்சிற்கு குடும்ப உறுப்பினர்கள் மதிப்பு கொடுப்பார்கள். ஜென்மச் சனியின் காலம் என்றாலும் குரு சாதகமாக இருப்பதால் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வதும் இருப்பதை தக்க வைத்துக் கொள்வதும் புத்திசாலித்தனம்.
அரசியல்வாதிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு நன்மைகள் அதிகரிக்கும். புதிய சொத்துக்கள் வாங்கலாம் பழைய சொத்துக்களை விற்கலாம். திருமணம் ஆன தம்பதியினர் மகிழ்ச்சியுடன் இல்லறம் நடத்துவர். 10.2.2026 அன்று நள்ளிரவு 1.11 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் அமைதி காக்க வேண்டியது அவசியம். தொழில் சீராக நடந்தாலும் லாபம் நிற்காது. கூட்டம் களை கட்டும் கல்லா களை கட்டாது. வியாழக்கிழமை நவக்கிரக குரு பகவானை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406