பிரம்மாவின் கர்வத்தை அடக்கிய சிவபெருமான்
- சிவபெருமானுக்கு 5 தலைகள் இருப்பதை போன்று ஆரம்பத்தில் பிரம்ம தேவனுக்கும் 5 தலைகள் இருந்துள்ளது.
- சிவபெருமான் அழைத்தது, பிரம்மலோகத்தில் இருந்த பிரம்மாவின் காதுகளில் ஒலித்தது.
மும்மூர்த்திகளில் படைக்கும் தொழிலுக்கு அதிபதியானவர், பிரம்ம தேவன். இவரால் தான் உலகில் உள்ள ஒவ்வொரு ஜீவராசிகளும் படைக்கப்படுகின்றன. பூமியில் பிரம்மனுக்கு கோவில்கள் குறைவு என்றாலும், அதில் நான்கு முகங்களுடன் பிரம்மா காட்சி தருவார். நான்கு முகங்களும் நான்கு வேதங்களையும், நான்கு திசைகளையும் குறிப்பதாக கூறப்படுகிறது.
புராணங்கள்படி, சிவபெருமானுக்கு 5 தலைகள் இருப்பதை போன்று ஆரம்பத்தில் பிரம்ம தேவனுக்கும் 5 தலைகள் இருந்துள்ளது. அவ்வாறு ஐந்து தலைகளுடன் இருந்த பிரம்மா 'நான்முகன்' ஆனதற்கு சில புராணக் கதைகள் கூறப்படுகின்றன. அதில் ஒன்றை இங்கு பார்ப்போம்.
சிவனை போன்று 5 தலைகள் இருந்ததால், "அழிக்கும் கடவுளான சிவபெருமானை விட, படைக்கும் கடவுளான நானே உயர்ந்தவர்" என்ற கர்வம் பிரம்மனுக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக, பிரம்மா யாரையும் மதிக்காமல் செயல்பட ஆரம்பித்தார். இதை அறிந்த சிவபெருமான், பிரம்மனின் கர்வத்தை அடக்கி, உண்மையை உணர்த்திட முடிவு செய்தார்.
ஒரு சமயம் சிவபெருமான் கயிலாயத்தில் இருந்துகொண்டே பிரம்ம தேவனை அழைத்தார். சிவபெருமான் அழைத்தது, பிரம்மலோகத்தில் இருந்த பிரம்மாவின் காதுகளில் ஒலித்தது. இருப்பினும், படைப்பு தொழிலில் கவனம் செலுத்துவது போல இருந்தார். இதனால் கோபம் அடைந்த சிவபெருமான், பிரம்மலோகம் வந்தார். அப்போதும் பிரம்மா, சிவபெருமானை கவனிக்காமல் உதாசீனப்படுத்தினார்.
இதனால் மிகுந்த கோபத்துக்கு ஆளான சிவபெருமான், "பிரம்மனே! என்னை போன்று உனக்கும் ஐந்து தலைகள் இருப்பதால் தானே இவ்வளவு ஆணவம். இப்போதே உனது ஐந்தாவது தலையை துண்டித்து விடுகிறேன்" என பிரம்மனின் ஒரு தலையை துண்டித்து எறிந்தார். மேலும், "படைக்கும் தொழிலை இழந்து, பூலோகத்தில் மானிடராய் வாழ்ந்து அவதிப்படுவாய்" என்று சாபமிட்டார்.
பின்பு, தன் தவறை உணர்ந்த பிரம்மா, பூலோகத்தில் மானிடராய் அலைந்து திரிந்து, செல்லும் இடமெல்லாம் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார். அவ்வாறு திருப்பட்டூர் தலத்துக்கு வந்து சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டபோது, சிவபெருமான் மனம் மகிழ்ந்து பிரம்மனுக்கு சாப விமோசனம் அளித்தார். இதையடுத்து நான்முகனாக, பிரம்மா மீண்டும் படைக்கும் தொழிலை கவனிக்க தொடங்கினார்.