வழிபாடு

திருவேட்டீசுவரர் - செண்பகாம்பிகை

மகாலட்சுமி வழிபட்ட திருவேட்டீசுவரர் கோவில் தல வரலாறு

Published On 2026-02-04 13:06 IST   |   Update On 2026-02-04 13:06:00 IST
  • சிவபெருமான் வேடனாக காட்சி தந்ததால், இத்தல இறைவன் 'திருவேட்டீசுவரர்' என்று அழைக்கப்படுகிறார்.
  • கோவிலில் தனித்தனி சன்னிதியில் அருகருகே மகாலட்சுமி தாயார் மற்றும் சரஸ்வதி தேவி உள்ளனர்.

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் அமைந்துள்ளது, மிகவும் பழமை வாய்ந்த செண்பகாம்பிகை உடனுறை திருவேட்டீசுவரர் திருக்கோவில். தேவார வைப்புத் தலம், மகாலட்சுமி வழிபட்ட தலம், ராகு-கேது பரிகாரத் தலம், சிவன், அம்பாள், சண்முகர் ஆகிய மூவருக்கும் தனித் தனியாக கொடிமரம் அமைந்த தலம் என பல்வேறு சிறப்புகளை உடைய தலமாக இக்கோவில் விளங்குகிறது. இத்தலத்தின் இறைவன் 'திருவேட்டீசுவரர்' என்றும், இறைவி 'செண்பகாம்பிகை' என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

தல வரலாறு

ஒரு சமயம் பஞ்ச பாண்டவர்களில் ஒருவனான அர்ஜூனன் தீர்த்த யாத்திரை மேற்கொண்டான். பல தலங்களுக்கு சென்ற அர்ஜூனன், செண்பக காடு வழியாக வந்தபோது, வித்தியாசமான நிறத்தில் ஒரு பன்றி இருப்பதை கண்டான். அந்த பன்றியை வேட்டையாட எண்ணிய அர்ஜூனன், பன்றியின் மீது அம்பு எய்தான். அம்பு பாய்ந்த பன்றி, கீழே விழுந்து இறந்தது. அர்ஜூனன் அருகில் வந்து பார்த்தபோது, பன்றியின் உடலில் இரண்டு அம்புகள் இருந்தன.

அர்ஜூனன், 'இன்னொரு அம்பை யார் செலுத்தி இருப்பார்' என்று யோசித்தான். அந்த வேளையில் அங்கு வந்த வேடன் ஒருவன், "இந்த பன்றியை நான் தான் கொன்றேன். எனவே இது எனக்கு தான் சொந்தம்" என்றான். அர்ஜூனன், 'முதலில் அம்பு எய்தது நான் தான். என்னுடைய அம்புபட்டு தான் பன்றி வீழ்ந்தது. எனவே இந்த பன்றி எனக்கே சொந்தம்" என்றான். இதனால் கோபம் அடைந்த வேடன், தன்னுடைய அம்பை எடுத்து அர்ஜூனன் மீது குறிவைத்தான்.

உடனே சுதாரித்துக்கொண்ட அர்ஜூனன், வேகமாக வேடனின் தலையை குறி பார்த்து அம்பு எய்தான். அர்ஜூனன் எய்த அம்பு வேடனின் தலையில் பட்டு ரத்தம் வடிந்தது. அடுத்த நொடியே வேடன், சிவபெருமானாக தோன்றினார்.

இதையடுத்து அர்ஜூனன், 'தங்களையா நான் காயப்படுத்தினேன்' என்று கண்ணீருடன் வருந்தினான். சிவபெருமான், "கவலைப்படாதே அர்ஜூனா, நடப்பது அனைத்தும் ஒரு காரணத்திற்காக தான். அடுத்த பிறவியில் நீ கண்ணப்பனாக பிறந்து, என்னை வணங்கி புகழ் பெறுவாய்" என்று ஆசி வழங்கினார். சிவபெருமான் வேடனாக காட்சி தந்ததால், இத்தல இறைவன் 'திருவேட்டீசுவரர்' என்று அழைக்கப்படுகிறார். இவருக்கு 'பார்த்த பிரகர லிங்கம்' என்ற பெயரும் உண்டு.

அடுத்த பிறவியில் அர்ஜூனன், கண்ணப்பன் எனும் வேடனாக பிறந்தான். மிகுந்த சிவ பக்தி கொண்டிருந்த கண்ணப்பன், சிவனுக்கு தன் கண்ணையே காணிக்கையாக கொடுத்து பரிகாரம் தேடிக்கொண்டான். மேலும் சிவன் அருளால் நாயனாராகவும் அந்தஸ்து பெற்றான். அர்ஜூனன் வழிபட்ட தலம் என்பதால் இங்கு கண்ணப்ப நாயனார் உற்சவராக இருக்கிறார்.

இக்கோவில் 7-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது. காலப்போக்கில் இக்கோவில் முற்றிலும் அழிந்து, மூலவர் சிவலிங்கம் செண்பக மரங்களுக்கு இடையில் புதைந்து இருந்துள்ளது. சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு, இங்கு ஒரு பசு தினமும் பால் சொரிந்து கொண்டிருந்துள்ளது. இதைப் பார்த்த ஊர் மக்கள், அந்த இடத்தை ஆராய்ந்து பார்த்தபோது, அங்கு சுயம்பு லிங்கம் இருந்துள்ளது. அந்த லிங்கத்தில் வெட்டு வடு இருந்ததால் இறைவன் 'திருவேட்டீசுவரர்' என்று அழைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. பின்பு இறைவனுக்கு கோவிலும் எழுப்பப்பட்டது.

கோவில் அமைப்பு

இந்த ஆலயம் ஐந்து நிலை ராஜ கோபுரத்துடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. முக மண்டபத்தின் முன், கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியன உள்ளன. உள் பிரகாரத்தில் விநாயகர், வீரபத்திரர், பால முருகன், சமயக் குரவர்கள், சேக்கிழார் போன்றோர் உள்ளனர். வெளிப்பிரகாரத்தில் விஸ்வநாதர், ராமலிங்கர், நவக்கிரகங்கள் காட்சி அளிக் கின்றன. கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் அருள் பாலிக்கின்றனர்.

 

கோவில் தோற்றம் - சிவனை வழிபடும் மகாலட்சுமி

அம்பாள் செண்பகாம்பிகை தாயார், தெற்கு நோக்கிய தனிச் சன்னிதியில் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார். இவர் சன்னிதி முன்பாக கொடிமரம் பலிபீடம், சிம்ம வாகனம் ஆகியவை இருக்கின்றன. மகாலட்சுமி, திருமாலை மணந்து கொள்வதற்காக இங்குள்ள சிவபெருமானை வணங்கியதாக ஐதீகம். இதன் அடிப்படையில் இங்குள்ள தூண் ஒன்றில் மகாலட்சுமி கைகளில் கலசத்தை வைத்து சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தபடி காட்சி தருகிறார். மேலும் இங்குள்ள மண்டப தூண்களில் முனிவர்கள், ரிஷிகள் மற்றும் அனுமனின் பல்வேறு தோற்றத்தில் புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றன.

கோவிலில் தனித்தனி சன்னிதியில் அருகருகே மகாலட்சுமி தாயார் மற்றும் சரஸ்வதி தேவி உள்ளனர். இங்குள்ள சரஸ்வதியிடம் வீணை கிடையாது. பிரகாரத்தில் தனிச் சன்னிதியில் வீற்றிருக்கும் முருகப்பெருமான், ஆறு முகங்களுடன் மயில் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். இவருக்கு ஒவ்வொரு சஷ்டியின் போதும் 6 மலர்கள், 6 நைவேத்தியங்கள், 6 வகையான பழங்கள் படைத்து பூஜை செய்யப்படுகிறது.

வழிபாடு

கோவிலில் தினமும் காலை பூஜையின்போது மூலவர் அருகில் ஸ்படிக லிங்கத்தையும், நவக்கிரகங்க ளுக்குரிய நவரத்தினத்தையும் வைக்கின்றனர். பின்பு, ஒவ்வொரு கிரகத்துக்குரிய தானியங்கள், மலர்களை கொண்டு பூஜை செய்யப்படுகிறது. சூரியனுக்கு வைத்த மலரை பிரகாரத்தில் காணப்படும் சூரியன் சிலை முன்பு வைத்து தீபாராதனை நடைபெறுகிறது. அதன்பின்பே மூலவருக்குரிய பூஜை நடத்தப்படுகிறது. இந்த பூஜையில் 'ருத்ரதிரிசதி' எனப்படும் சிவபெரு மானுக்குரிய 300 திருநாமங்களால் அர்ச்சனை செய்யப்படுகிறது. அவ்வேளையில் சிவபெருமானை வழிபட்டால் கிரக தோஷங்கள் அனைத்தும் நீங்கும் என்பது நம்பிக்கை.

பொதுவாக சிவன் கோவில்களில் அர்த்தஜாம பூஜை முடிந்து, பள்ளியறை பூஜையின்போது சிவனின் பாதமே கொண்டு செல்லப்படும். ஆனால், இங்கு சிவபெரு மானே பள்ளியறைக்குள் செல்கிறார். இதற்காக அர்த்த மண்டபத்தில் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இங் குள்ள சிவபெருமானை இந்திரன் வழிபட்டதாக கூறப் படுகிறது. அதன் அடிப்படையில், புரட்டாசியில் இந்திர பூஜை நடைபெறுகிறது. அப்போது, சுவாமியின் சன்னிதி முழுவதும் காய்கறி, பழங்கள் மற்றும் இனிப்புகளால் அலங்கரிக்கப்படுகிறது.

ஆலயத்தில் சித்திரை பிரம்மோற்சவம், வைகாசி விசாகம், புரட்டாசி மகாளய அமாவாசை, மாசி மகத்தில் தீர்த்தவாரி, பங்குனி உத் திரம் போன்ற விழாக்கள் மிகவும் சிறப் பாக கொண்டாடப்படுகிறது. கோவில், காலை 6 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 9.30 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற் காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

அமைவிடம்

சென்னை திருவல்லிக்கேணி தபால் நிலையம் பஸ் நிறுத்தத்திற்கு அருகிலேயே இக்கோவில் அமைந் துள்ளது. திருவல்லிக்கேணி ரெயில் நிலையத்தில் இருந்து 1.5 கி.மீ. தொலைவில் உள்ளது.

Tags:    

Similar News