வழிபாடு

தை மாத கடைசி வெள்ளிக்கிழமை: இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

Published On 2026-02-06 15:58 IST   |   Update On 2026-02-06 15:58:00 IST
  • கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தி அம்மனை வழிபட்டனர்.
  • பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகிலுள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவில் தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இந்த கோவிலுக்கு தமிழகம் முழுவதும் இருந்து ஆண்டு முழுவதும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்து அக்னி சட்டி, அழகு குத்துதல், அங்கப் பிரதட்சணம், ஆயிரம் கண் பானை, கரும்புத் தொட்டில், தேர் இழுத்தல், மொட்டை போடுதல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்தி கடன்களை செலுத்தி சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஆடி, தை, பங்குனி, சித்திரை உள்ளிட்ட மாதங்களில் சிறப்பு விழாக்கள் நடைபெறும். இந்த காலகட்டங்களில் அதிக அளவிலான பக்தர்கள் வந்திருந்து அம்மனை தரிசனம் செய்வர்.

இந்த நிலையில் இன்று தை கடைசி வெள்ளி திருவிழாவை முன்னிட்டு திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், புளியங்குடி கரிவலம்வந்தநல்லூர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். இதனால் இருக்கன்குடி மாரியம்மன் கோவில் ஆற்றுப்படுகையில் பக்தர்கள் கூட்டம் கடல்போல் காட்சி அளித்தது.

கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தி அம்மனை வழிபட்டனர். பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர்.

இன்று தை கடைசி வெள்ளி திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் பூஜைகள் நடைபெற்று வருகிறது. பக்தர்கள் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் குழந்தைகளுக்கு பாலூட்டும் இடவசதி, குடிநீர் வசதி, தங்குமிட வசதி, கழிப்பிட வசதி, வாகனங்கள் நிறுத்துமிடம் போன்ற பல முன்னேற்பாட்டு வசதிகளை செய்திருந்தன. பக்தர்களின் பாதுகாப்பிற்காக சாத்தூர் டி.எஸ்.பி. குருசாமி தலைமையில் நூற்றுக்க ணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருவிழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூசாரி, கோவில் செயல் அலுவலர் இளங்கோவன் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர். 

Tags:    

Similar News