கோவில் தோற்றம் - திருவாலீஸ்வரர்
காசிக்கு நிகராக போற்றப்படும் பிரம்மதேசம் திருவாலீஸ்வரர் கோவில்
- கி.பி.10-ம் நூற்றாண்டில் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இக்கோவில், பின்னர் பாண்டிய மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்டுள்ளது.
- இந்த ஆலயத்தில் மகா சிவராத்திரி, திருவாதிரை போன்ற விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே பிரம்மதேசம் என்ற ஊரில் அமைந்துள்ளது, திருவாலீஸ்வரர் கோவில். இக்கோவில் மூலவர் திருவாலீஸ்வரர் என்றும், அம்பாள் சவுந்திரநாயகி தாயார் என்றும் அழைக்கப்படுகிறார்கள். பிரம்மதேசத்தில் அமைந்துள்ள இந்த ஆலயத்திற்கு வந்து வழிபட்டு வந்தால் ஒருவரின் தலையெழுத்து மாறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
தல வரலாறு
கி.பி.10-ம் நூற்றாண்டில் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இக்கோவில், பின்னர் பாண்டிய மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆலயத்தின் சுவர்களில் சோழ மற்றும் பாண்டிய மன்னர்கள் காலத்து கல்வெட்டுகள் பல உள்ளன. மூலவர் சன்னிதியின் வடக்கு சுவரில் முதலாம் ராஜராஜ சோழன் ஆட்சியில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று உள்ளது. அதே சுவரில் மற்றொரு மன்னரின் கல்வெட்டு ஒன்றில், ராஜராஜ சோழன் - சதுர்வேதி மங்கலம் கிராம மக்களிடையே ஏற்பட்ட ஒப்பந்தம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்வெட்டு
இங்குள்ள பழங்கால நினைவுச் சின்னங்கள் தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதி, மத்திய அரசின் கீழ் இந்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. திருவாலீஸ்வரர் கோவில் சோழ கட்டிடக் கலை பாணியில் இருந்தாலும், கோவிலின் வெவ்வேறு இடங்கள் சோழர், பாண்டியர் காலத்து பாணியையும் எடுத்துக்காட்டுகிறது.
கோவில் அமைப்பு
கோவில் கருவறையில் மூலவரான சிவபெருமான், திருவாலீஸ்வரர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். கோவில் விமானத்தில் சிவபெருமான், அர்த்தநாரீஸ்வரர் வடிவில் காட்சி தருகிறார். மேலும் பூத கணங்கள், ரிஷப வாகனம், கஜ சம்ஹார மூர்த்தி, தட்சிணாமூர்த்தி போன்ற சிற்பங்கள் உள்ளன. இதன் கலைநயம், பனமலை மற்றும் காஞ்சிபுரத்தில் உள்ள பல்லவர் கால கோவில்களை ஒத்திருக்கிறது.
இந்த ஆலயத்தில் உள்ள விநாயகப் பெருமான் தனித்துவமான நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார்.
பிரகாரத்தில் சூரிய பகவான், அதிகார நந்தி, சப்த கன்னியர்கள், சுப்பிரமணியர் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். பொதுவாக, பெரும்பாலான கோவில்களில் அம்பாள், சுவாமியின் இடதுபுறமாக வீற்றிருந்து அருள்பாலிப்பார். ஆனால், இங்குள்ள தாயாரான சவுந்திரநாயகி அம்பாள் சுவாமியின் வலதுபுறத்தில் தனிச் சன்னிதியில் வீற்றிருப்பது தனிச் சிறப்பாகும். இந்த அன்னையை வழிபட்டு வந்தால் திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடந்தேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
பிரார்த்தனை
காசிக்கு சென்று பாவங்களைப் போக்க நினைப்பவர்கள், அங்கு போக முடியாத பட்சத்தில் காசிக்கு அடுத்த தலமாக கருதப்படும் இந்த பிரம்மதேசம் திருவாலீஸ்வரர் கோவிலுக்கு வந்து வழிபடலாம். இங்குள்ள இறைவனை வழிபட்டால் காசிக்கு சென்று வந்த புண்ணியம் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இந்த ஆலயத்தில் மகா சிவராத்திரி, திருவாதிரை போன்ற விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மாதந்தோறும் வரும் பவுர்ணமி மற்றும் இரண்டு பிரதோஷ தினங்களும் சிறப்பிக்கப்படுகின்றன.
கோவில், காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்களின் வழிபாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும். காலை 8 மணி முதல் 9 மணி வரையும், மாலை 5 மணி முதல் 6 மணி வரையும் பூஜை நடைபெறும்.
அமைவிடம்
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் இருந்து கவுதமபுரி சாலை வழியாக சென்றால் பிரம்மதேசம் திருவாலீஸ்வரர் திருக்கோவிலை அடையலாம். திருநெல்வேலியில் இருந்து 42 கிலோமீட்டர் தொலைவிலும், அம்பாசமுத்திரத்தில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலும் இக்கோவில் அமைந்துள்ளது.