புதுச்சேரி

புதுச்சேரியில் ஆட்சியாளர்கள்-அதிகாரிகள் மோதலுக்கு முற்றுப்புள்ளி வருமா?

Published On 2024-01-30 08:33 GMT   |   Update On 2024-01-30 08:33 GMT
  • கடந்த காலங்களில் ஆட்சியாளர்கள், அதிகாரிகள், கவர்னர் ஆகியோர் இடையே இணக்கமான சூழல் இருந்தது.
  • கடந்த 5 ஆண்டில் பெரும்பாலும் மோதலில்தான் காலம் கடந்தது.

புதுச்சேரி:

யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு என்பது கவர்னரையே குறிக்கும்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதுச்சேரி அமைச்சரவை கவர்னருக்கு ஆலோசனை கூறும் அவையாகத்தான் கருதப்படுகிறது.

இதனால் எந்த புதிய திட்டங்களுக்கும், நலத்திட்டங்களுக்கும் அதிகாரிகள் வழியாக கவர்னர் ஒப்புதல் பெற்றால்தான் நிறைவேற்ற முடியும். கடந்த காலங்களில் ஆட்சியாளர்கள், அதிகாரிகள், கவர்னர் ஆகியோர் இடையே இணக்கமான சூழல் இருந்தது.

திட்டங்களில் சில சந்தேகங்களை கேட்டாலும், அதற்கு விளக்கம் அளிக்கும் பட்சத்தில் கவர்னர் ஒப்புதல் அளிப்பார்.

2016-ம் ஆண்டு நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு அமைந்த பிறகு ஆட்சியாளர்கள், கவர்னர் இடையே பெரும் மோதல் உருவெடுத்தது.

ஆட்சியாளர்கள் ஒரு தரப்பாகவும், கவர்னர் தலைமையில் அதிகாரிகள் ஒரு தரப்பாகவும் இரண்டாக பிரிந்தனர். இதனால் கடந்த 5 ஆண்டில் பெரும்பாலும் மோதலில்தான் காலம் கடந்தது.

இதன்பிறகு மத்திய அரசின் கூட்டணி அரசே புதுச்சேரியில் அமைந்தது. இதனால் இந்த மோதல் தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அதிகாரிகளுடனான மோதல் நீடித்தது.

தலைமை செயலாளர் ராஜீவ்வர்மா, அரசுக்கு போதிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றும், தன்னிச்சையாக செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இது சட்டசபையிலும் எதிரொலித்தது. எம்.எல்.ஏ.க்கள், தலைமை செயலருக்கு எதிராக போர்க்கொடியும் தூக்கினர்.

எந்த திட்டத்துக்கான கோப்பை அனுப்பினாலும், அத்திட்டத்துக்கு பல்வேறு கேள்விகளை கேட்டு கோப்பை திருப்பி அனுப்பு வதாக ஆளும்கட்சி எம்.எல்.ஏ.க்கள் குற்றம்சாட்டினர்.

இதனிடையே அதிகாரிகள் மாற்றத்தில் முதல்-அமைச்சரோடு கலந்து பேசாமல் தன்னிச்சையாக தலைமை செயலாளர் செயல்பட்டதாக புகார் எழுந்தது.

இதையடுத்து தலைமை செயலர் முதல்-அமைச்சரிடம் நேரில் விளக்கமளித்தார். இதனால் தலைமை செயலாளரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக இருந்தது.

பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக தலைமை செயலாளரை மாற்றித்தர வேண்டும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி மத்திய அரசிடம் கோரிக்கை வைத்ததாகவும் கூறப்படு கிறது. இந்த நிலையில் புதுச்சேரி தலைமை செயலாளர் ராஜீவ் வர்மா சண்டிகர் மாநில அரசுக்கு ஆலோசகராக மாற்றப்பட்டுள்ளார்.

அவருக்கு பதிலாக அருணாச்சல பிரதேசத்தில் பணியில் உள்ள சரத் சவுகான் புதுவை தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேபோல புதுச்சேரி ஐ.ஏ.எஸ். அதிகாரி சவுத்ரிஅபிஜித் விஜய் சண்டிகருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அந்தமான் தீவில் பணியாற்றும் ஐ.பி.எஸ். அதிகாரி கலைவாணன் புதுச்சேரிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

புதுச்சேரி கலெக்டர் வல்லவன் கோவாவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அருணாச்சல பிரதேச அதிகாரி தால்வ்டே புதுச்சேரிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை யாரை கலெக்டராக நியமிப்பது என்பது அரசின் முடிவாகும். எனவே புதுச்சேரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ள தால்வ்டே கலெக்டராக நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

இந்த அதிகாரிகள் மாற்றம் புதுச்சேரியில் ஆட்சியாளர்கள்-அதிகாரிகளிடையே நிலவிய மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.

Tags:    

Similar News