திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் கிராம நிர்வாக அலுவலர் உதவியாளர் தற்கொலை
- திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் கிராம நிர்வாக அலுவலர் உதவியாளர் தற்கொலை செய்து கொண்டார்.
- இவருக்கும், தமிழ் இலக்கியா என்ற பெண்ணுக்கும் 2014 -ம் ஆண்டு திருநள்ளாறு கோவிலில் திருமணம் நடந்தது.
புதுச்சோரி:
காரைக்காலை அடுத்த திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் கிராம நிர்வாக அலுவலர் உதவியாளராக பணி செய்து வந்தவர் விநாயகம் (வயது 39). இவர் நிரவி காக்கா மொழி கிராமத்தில் வசித்து வந்தார். இவருக்கும், தமிழ் இலக்கியா என்ற பெண்ணுக்கும் கடந்த 2014 -ம் ஆண்டு திருநள்ளாறு கோவிலில் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். விநாயகத்திற்கு அதிகப்படியான மது குடிக்கும் பழக்கம் இருந்ததால், காரைக்கால் அரசு ஆஸ்பத்திரி மற்றும் நாகை மாவட்டம் கீழ்வேளூர் மது போதை மறுவாழ்வு மையத்திலும் கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார்.
விநாயகத்தை பரிசோதித்த டாக்டர்கள் இனி மது அருந்தக் கூடாது என எச்சரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் விநாயகத்திற்கு வலிப்பு நோய் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. அதனால் விநாயகத்தை குடும்பத்தார்கள் தனியாக விடாமல் பராமரித்து வந்துள்ளனர். இந்நிலையில் விநாயகம் வழக்கம்போல் நேற்று முன்தினம் கோவில் பணிக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அவரது மனைவி வேலைக்கு சென்ற பிறகு, விநாயகம் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து விநாயகத்தின் மனைவி திருநள்ளாறு போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.