புதுச்சேரி

புதுச்சேரியில் மது குடிக்க பணம்தர மறுத்ததால் கழுத்தை நெரித்து பெண் கொலை

Published On 2023-09-12 13:46 IST   |   Update On 2023-09-12 13:46:00 IST
  • ராஜேந்திரன் மது குடிக்க பணம் கேட்டு மனைவியிடம் தகராறு செய்தார்.
  • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வில்லியனூர்:

புதுவை வில்லியனூர் அருகே அனந்தபுரம் பாரதி வீதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 54) கூலி தொழிலாளி அவரது மனைவி கலையரசி (47). இவர்களுக்கு ராஜசேகர் என்ற மகன் உள்ளார். ராஜேந்திரன் அடிக்கடி மது குடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்வது வழக்கம். மேலும் அடிக்கடி வேலைக்கு செல்லாமல் மனைவியிடம் பணம் வாங்கி சென்று மது குடித்து வருவார்.

நேற்று காலை மகன் ராஜசேகர் மாட்டை ஓட்டிக் கொண்டு வயல்வெளிக்கு சென்று விட்டார். வீட்டில் ராஜேந்திரன், கலையரசி மட்டும் தனியாக இருந்தனர்.

அப்போது ராஜேந்திரன் மது குடிக்க பணம் கேட்டு மனைவியிடம் தகராறு செய்தார். ஆனால் கலையரசி பணம் கொடுக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ராஜேந்திரன் கலையரசியை தாக்கி அவரது சேலையால் கழுத்தை நெரித்தார். இதில் கலையரசி பரிதாபமாக இறந்து போனார்.

உடனே ராேஜந்திரன் அங்கிருந்து தப்பி ஒடிவிட்டார். மாடு மேய்த்து விட்டு வீட்டுக்கு வந்த ராஜசேகர் தாய் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இது குறித்து வில்லியனூர் போலீசில் தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து கலையரசியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த ராஜேந்திரனை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மது குடிக்க பணம் கொடுக்கமறுத்ததால் மனைவியை கணவர் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் வில்லியனூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News