கோப்பு படம்
- ரூ. 50 லட்சம் மோசடியில் ஈடுபட்ட 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.
- தனியார் பைனான்ஸ் நிறுவனம் அப்பாவுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
புதுச்சேரி:
வில்லியனூர் அருகே வங்கி இயக்குனர் எனக் கூறி விவசாயிடம் ரூ. 50 லட்சம் மோசடியில் ஈடுபட்ட 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.
வில்லியனூர் காமராஜ் சாலை கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் அப்பாவு வயது 62 விவசாயியான இவரது மகன் பரணிதரன் குளிர்பானங்கள் மொத்த விலையில் புதுவை முழுவதும் விற்பனை செய்ய டீலர் எடுத்திருந்தார். டீலர் எடுப்பதற்காக தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் 58 லட்சம் கடனாக பெற்றிருந்தனர். கொரோனா காலகட்டத்தில் மாதத் தவணையை முறையாக இவர்களால் செலுத்த முடியாத நிலையில் தனியார் பைனான்ஸ் நிறுவனம் அப்பாவுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இந்நிலையில் அப்பாவு தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் பெற்றிருந்த கடனை திருபிசெலுத்த தான் உதவுவதாக அவரது நண்பர் தமிழக பகுதியான பெரியபாபு சமுத்திரம் மாரியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்த ராமசாமி மகன் மயிலாசலம் கூறியுள்ளார்.
மயிலாசலத்தின் நண்பர் வங்கி இயக்குனர் என கூறி கடலூர் அடுத்த கொள்ளிடம் புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் குமார் என்பவரை மயிலாசலம் அறிமுகப்படுத்தியுள்ளார். மயிலாசலம் மற்றும் ரமேஷ்குமார் கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில், அப்பாவு அவர்களிடம் பைனான்ஸ் நிறுவனத்தில் வாங்கியிருந்த கடனை திருபிசெலுத்த ரூபாய் 50 லட்சத்து 45 ஆயிரம் வங்கி மூலம் கொடுத்துள்ளார்.
ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு சம்பந்தப்பட்ட பைனான்ஸ் நிறுவனம் அப்பாவுக்கு வீடு ஜப்தி நோட்டீசை அனுப்பி இருந்தது. அதிர்ச்சி அடைந்த அப்பாவு தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து வில்லியனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அப்பாவு கொடுத்த புகாரின் அடிப்படையில் வில்லியனூர் இன்ஸ்பெக்டர் வேலயன், மயிலாசலம் மற்றும் ரமேஷ் குமார் ஆகிய இருவரும் மீதும் வழக்கு பதிவு செய்து இருவரையும் தேடி வருகின்றனர்.