விடுதலை சிறுத்தை கட்சியினர் ஒப்பாரி போராட்டம் நடத்திய காட்சி.
சாலையை சீரமைக்க கோரி விடுதலை சிறுத்தை ஒப்பாரி போராட்டம்
- திருச்சிற்றம்பலம் கூட் ரோட்டில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலக வாசலில் ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினர்.
- வீட்டு நிகழ்ச்சியில் அழுவதை போல் அழுதது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
புதுச்சேரி:
புதுவை அருகே தமிழக பகுதியான பூத்துறை-பெரம்பை சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக குண்டும் குழியுமாக உள்ளது.
இதனால் பட்டானூர், பூத்துறை, பெரம்பை, வாழப்பட்டாம்பாளையம் பகுதி பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளனர். திருச்சிற்றம் பலம் கூட்ரோட்டிலிருந்து வில்லியனூர் செல்ல இது பிரதான சாலை என்பதால் குண்டும் குழியுமான இந்த சாலையில் செல்ல பொதுமக்கள் பயந்து புதுவையை சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பூத்துறை, பெரம்பை பொதுமக்கள் ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு செல்ல இந்த வழியை பயன்படுத்துவார்கள். ஆனால் சாலையில் மோசமான பள்ளங்கள் இருப்பதால் நோயாளிகள் இந்த வழியாக செல்வதில்லை. மாறாக புதுவையை சுற்றி பல கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சாலையை சீரமைத்து தரக்கோரி பட்டானூர் பூத்துறை பெரம்பை வாழப்பட்ட பாளையம் பகுதி பொது மக்கள் மாவட்ட கலெக்டர், தாசில்தார், வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை சாலை போட வில்லை.
இதனை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பூத்துறை முகாம் சார்பில் திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலக வாசலில் ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கவுன்சிலர் கல்பனா பொன்னிவளவன் தலைமையில் நடந்த ஒப்பாரி ஆர்ப்பாட்டத்தில் மாநில வெளியீட்டு மைய செயலாளர் பொன்னி வளவன் வானூர் ஒன்றிய செயலாளர் கலைமாறன் வழக்கறிஞர் அணி தலித் ராமதாஸ் அய்யா பாலு கிளியனூர் ஒன்றிய செயலாளரை ஈழத் தமிழன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்தப் போராட்டத்தில் குண்டும் குழியுமான சாலையில் கீழே விழுந்து கைகால் பாதிப்படைந்த உறவினர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டு இறப்பு வீட்டு நிகழ்ச்சியில் அழுவதை போல் அழுதது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
போராட்டக்காரர்கள் பூத்துறை-பெரம்பை சாலையில் உடனே தார் சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இந்த போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் சரத் பாலாஜி சந்திரன், ராஜசேகர் சுந்தர் மற்றும் பல்வேறு அணிகளை சேர்ந்த நிர்வா கிகள் கலந்து கொண்டனர்.