நலத்திட்டங்களை செயல்படுத்த தடையாக உள்ளனர்: அரசு அதிகாரிகள் மீது பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் புகார்
- மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த தடையாக இருக்கும் அதிகாரிகளால் எம்.எல்.ஏ.க்கள் நலன் பாதிக்கப்படுகிறது.
- கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கவர்னர், முதலமைச்சரிடம் கூறிவிட்டோம்.
புதுச்சேரி:
சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைமையில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் ஜான்குமார், ரிச்சர்ட் ஜான் குமார், ராமலிங்கம், மற்றும் பா.ஜனதா ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் சிவசங்கரன், கொல்ல பள்ளி ஸ்ரீனிவாஸ் அசோக் உள்பட 7 எம்.எல்.ஏ.க்கள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து பேசினர்.
அப்போது புதுவை மாநிலத்தில் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த அரசு அதிகாரிகள் தடையாக உள்ளனர். அவர்கள் முழு ஒத்துழைப்பு தருவது இல்லை. இதனால் தொகுதி வளர்ச்சிப்பணிகள் பெரிதும் பாதிக்கப்படுகிறது. மக்களும் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே ஒத்துழைப்பு தராத அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் தெரிவித்தனர். இதனை கேட்ட கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எம்.எல்.ஏ.க்களிடம் உறுதியளித்தார்.
தொடர்ந்து சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கூறும் போது, மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த தடையாக இருக்கும் அதிகாரிகளால் எம்.எல்.ஏ.க்கள் நலன் பாதிக்கப்படுகிறது.
எனவே அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கவர்னர், முதலமைச்சரிடம் கூறிவிட்டோம். அதிகாரிகள் தொடர்ந்து தவறுகள் செய்தால் மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதி பெற்று என்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.