செய்திகள்
வடலூர் சத்திய ஞானசபையில் திரை விலக்கப்பட்டு தைப்பூச ஜோதி தரிசனம் நடைபெற்ற காட்சி

வடலூரில் இன்று தைப்பூச ஜோதி தரிசனம்: ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்

Published On 2017-02-09 11:19 IST   |   Update On 2017-02-09 11:19:00 IST
கடலூர் மாவட்டம் வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்தியஞான சபையின் 146-வது ஆண்டு ஜோதி தரிசன விழாவில் முக்கிய நிகழ்வான தைப்பூச ஜோதி தரிசனம் இன்று நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்தியஞான சபை உள்ளது. இங்கு ஆண்டு தோறும் தைப்பூசத்தன்று ஜோதி தரிசன விழா நடைபெறுவது வழக்கம்.

அதன்படி 146-வது ஆண்டு ஜோதி தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி வள்ளலார் அவதரித்த மருதூர் இல்லத்திலும், தண்ணீரால் விளக்கெரித்த கருங்குழி இல்லத்திலும், வடலூர் தரும சாலையிலும், வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் ஆகிய இடங்களிலும் கொடியேற்றப்பட்டது.

தொடர்ந்து சத்திய ஞானசபையிலும் தைப்பூச கொடியேற்றப்பட்டது. மாலையில் தரும சாலை மேடை, ஞானசபை மேடைகளில் சன்மார்க்க சொற்பொழிவுகள், கருத்தரங்குகள், நாடக கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவில் முக்கிய நிகழ்வான தைப்பூச ஜோதி தரிசனம் இன்று நடைபெற்றது. 7 திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இரவு 7 மணி, 10 மணி, நாளை(வெள்ளிக்கிழமை) காலை 5.30 மணி என 6 காலங்களில், 7 திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுகிறது.

ஜோதி தரிசனத்தை காண்பதற்காக கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, திருச்சி மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடலூரில் குவிந்துள்ளனர்.

விழாவையொட்டி விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. அனிஷா உசேன் மேற்பார்வையில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் ஆகியோர் தலைமையில் 750-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஜோதி தரிசனத்தை யொட்டி பக்தர்களின் வசதிக்காக சென்னை, கும்பகோணம், தஞ்சாவூர், கோவை, சேலம், மதுரை, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

Similar News