தமிழ்நாடு செய்திகள்

ஊட்டியில் கடும் உறைபனி தாக்கம் நீடிப்பு - குளிரால் பொதுமக்கள் அவதி

Published On 2026-02-12 10:27 IST   |   Update On 2026-02-12 10:56:00 IST
  • குறைந்தபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் ஆக பதிவு.
  • கடும் குளிரால் வீட்டை விட்டு வெளியே செல்லவே மக்கள் தயக்கம்.

ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தின் தலைநகரான ஊட்டி, பிப்ரவரி மாதத்தின் இரண்டாவது வாரத்திலும் தொடரும் கடும் உறைபனி தாக்கத்தால், 'குட்டி காஷ்மீர்' போல் காட்சியளிக்கிறது.

ஊட்டியில் குறைந்தபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகியுள்ளது. அதே நேரத்தில், காந்தல், தலைகுந்தா, அவலாஞ்சி உள்ளிட்ட உயரமான மலைப்பகுதிகளில் வெப்பநிலை 0 டிகிரி செல்சியஸ் வரை சரிந்து, கடும் குளிர் நிலவுகிறது.

அதிகாலை நேரங்களில் புல்வெளிகள், தேயிலைத் தோட்டங்கள் மற்றும் வீடுகளின் கூரைகள் முழுவதும் வெண்மையாக உறைந்த பனிப்படலத்தால் மூடப்பட்டு, சுற்றுப்புறம் முழுவதும் கண்கவர் காட்சியாக மாறியுள்ளது.

தொடர்ந்து நிலவும் கடும் குளிர் காரணமாக, பொதுமக்கள் வெளியே செல்வதில் தயக்கம் காட்டி வருகின்றனர். குறிப்பாக முதியோர், குழந்தைகள் மற்றும் தினசரி வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கால்நடை வளர்ப்பாளர்கள் மற்றும் விவசாயிகளும் அதிகாலையில் ஏற்படும் உறைபனி காரணமாக பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

இவ்வாறு, பிப்ரவரி மாதம் தொடங்கிய பின்னும் குறையாத உறைபனி தாக்கம் காரணமாக, ஊட்டியில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News