தமிழ்நாடு செய்திகள்

கீழடியில் அமைக்கப்பட்டுள்ள திறந்தவெளி அருங்காட்சியகத்தை படத்தில் காணலாம்.

கீழடியில் ரூ.22 கோடி செலவில் திறந்தவெளி அருங்காட்சியகம்: முதலமைச்சர் நாளை திறந்து வைக்கிறார்

Published On 2026-02-12 10:05 IST   |   Update On 2026-02-12 11:11:00 IST
  • 67 ஆயிரத்து 343 சதுர மீட்டர் பரப்பளவில் இரண்டு அரங்குகளாக காட்சிப்படுத்தும் பணிகள் தொடங்கின.
  • பண்டைய மக்களின் வாழ்வியல் முறைகள், பணிகள், அணிகலன்கள் உள்ளிட்டவைகளை நேரில் காணலாம்.

மானாமதுரை:

சிவகங்கை மாவட்டம் கீழடியில் மத்திய, மாநில தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு நடந்த இடங்கள் திறந்த வெளி அருங்காட்சியகமாக மாற்றப்படும் என தமிழக அரசு அறிவித்து, கடந்தாண்டு ஜனவரியில் ரூ.17 கோடியே 80 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது.

சுமார் 67 ஆயிரத்து 343 சதுர மீட்டர் பரப்பளவில் இரண்டு அரங்குகளாக காட்சிப்படுத்தும் பணிகள் தொடங்கின. ஏழாம்கட்ட அகழாய்வு நடந்த இடம் ஒரு அரங்கமாகவும், இரண்டு, நான்கு, ஆறாம் கட்ட அகழாய்வு நடந்த இடம் இரண்டாம் அரங்கமாகவும் மாற்றும் பணி நடந்து வந்தது. இதில் முதலாம் அரங்கம் மட்டும் திறப்பு விழாவிற்கு தயாரான நிலையில், நாளை (13-ந்தேதி) முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்த வெளி அருங்காட்சியகத்தையும் திறந்து வைக்க உள்ளார்.

இந்தியாவிலேயே முதன் முறையாக கீழடியில் ரூ. 22 கோடி ரூபாய் செலவில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைகிறது. பண்டைய கால மக்களின் வாழ்வியல் முறைகள், பணிகள், அணிகலன்கள் உள்ளிட்டவைகளை பொது மக்கள் நேரில் காண உள்ளனர்.

திறந்த வெளி அருங்காட்சியக பணியின் போது ரூ. 17 கோடியே 80 லட்சம் என திட்டமிடப்பட்டது. செலவீனம் அதிகரித்ததால் தற்போது ரூ. 22 கோடியாக திட்டமதிப்பீடு அதிகரித்துள்ளது.

Tags:    

Similar News