உலகம்

சட்டவிரோதமாக நுழைவதை ஒருபோதும் சகித்து கொள்ள மாட்டோம் - இந்தியர்களை எச்சரித்த அமெரிக்கா

Published On 2025-06-11 08:23 IST   |   Update On 2025-06-11 08:53:00 IST
  • உயர்கல்விக்காக அமெரிக்கா வந்த அந்த இந்திய மாணவர் வலுக்கட்டாயமாக நாடு கடத்தப்பட்டார்.
  • இந்திய மாணவர் குற்றவாளியை போல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள நியூவார்க் சர்வதேச விமான நிலையத்தில், ஓர் இந்திய மாணவர் குற்றவாளியை போல நடத்தப்பட்ட சம்பவம் இந்திய சமூகத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஜூன் 7 அன்று, குணால் ஜெயின் என்ற இந்திய அமெரிக்க தொழிலதிபர், இந்த கொடூர சம்பவத்தை தனது செல்போன் கேமராவில் படம்பிடித்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தார்.

உயர்கல்விக்காக அமெரிக்கா வந்த அந்த மாணவர், கைவிலங்கு பூட்டப்பட்டு, தரையோடு அழுத்தப்பட்டார். கண்ணீர் விட்டு அழுத போதும், வலுக்கட்டாயமாக நாடு கடத்தப்படுவது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

இந்த வீடியோ வைரலாக நிலையில் , வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து பரவலான கவலை எழுந்துள்ளது. சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் மிகுந்த கோபத்தை வெளிப்படுத்தி, இந்திய அரசாங்கம் உடனடியாக பதிலளித்து உண்மைகளை வெளிக்கொணர வேண்டும் என்று கோருகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைவதை ஒருபோதும் சகித்துக் கொள்ள மாட்டோம் என இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் எக்ஸ் பதிவில், "அமெரிக்கா தனது நாட்டிற்கு சட்டப்பூர்வ பயணிகளை தொடர்ந்து வரவேற்கிறது. இருப்பினும், அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைவதை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது, சகித்துக்கொள்ளவும் மாட்டோம்" என்று பதிவிட்டுள்ளது.

அமெரிக்காவின் நெவார்க் நகரில் இந்திய மாணவர் கைவிலங்கிடப்பட்டு தரையில் கிடத்தப்பட்டு கிடக்கும் வீடியோ வைரலான நிலையில் அமெரிக்க தூதரகத்தின் இந்த எக்ஸ் பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என கூறி நூற்றுக்கணக்கான இந்தியர்களை கை மற்றும் கால் விலங்கிட்டு அமெரிக்கா நாடு கடத்தியது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News