வர்த்தகத்தை காரணம் காட்டி இந்தியா-பாகிஸ்தான் மோதலை நான்தான் நிறுத்தினேன்: டிரம்ப் மீண்டும் திட்டவட்டம்
- இந்தியா-பாகிஸ்தானில் உள்ள தலைவர்கள் சிறந்த தலைவர்கள்.
- உலகின் மிகச்சிறந்த ராணுவம் எங்களிடம் உள்ளது.
காஷ்மீரில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலையடுத்து இந்தியா-பாகிஸ்தான் ராணுவங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
இதில் பாகிஸ்தானில் உள்ள விமானப்படை தளங்கள் மற்றும் ராணுவ நிலைகளை இந்தியா தாக்கியது. மேலும் பாகிஸ்தானின் தாக்குதல் முயற்சிகளை இந்தியா முறியடித்தது. 4 நாட்கள் சண்டைக்கு பிறகு இரு நாடுகள் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டது.
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான மோதலை நான் பேச்சுவார்த்தை மூலம் நிறுத்தினேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். ஆனால் அதை இந்தியா மறுத்தது. இருந்தபோதிலும் டிரம்ப் தனது கருத்தை தொடர்ந்து தெரிவித்து வந்தார்.
இந்த நிலையில் இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட நான்தான் காரணம் என்று மீண்டும் திட்டவட்டமாக டிரம்ப் தெரிவித்து உள்ளார்.
அவர் வெள்ளை மாளிகையில் பேட்டி அளித்த போது கூறியதாவது:-
இந்தியாவும் பாகிஸ்தானும் சண்டையிடுவதை நாங்கள் தடுத்து நிறுத்தினோம். அது ஒரு அணுசக்தி பேரழிவாக மாறியிருக்கலாம். அதை தடுத்து நிறுத்தினோம். ஒருவருக்கொருவர் துப்பாக்கிச் சூடு நடத்துபவர்களுடனும், அணு ஆயுதங்களைப் பயன்படுத்தக் கூடியவர்களுடனும் நாங்கள் வர்த்தகம் செய்ய முடியாது' என்று இரு நாடுகளிடமும் தெரிவித்தோம்.
இந்தியா-பாகிஸ்தானில் உள்ள தலைவர்கள் சிறந்த தலைவர்கள். அவர்கள் புரிந்துகொண்டு போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டார்கள். சண்டையை நிறுத்தி விட்டார்கள். இந்திய தலைவர்கள், பாகிஸ்தான் தலைவர்கள் மற்றும் என் மக்களுக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன்.
நாங்கள் மற்றவர்களும் சண்டையிடுவதைத் தடுக்கிறோம். எங்களால் எவரையும் விட சிறப்பாகப் போராட முடியும். உலகின் மிகச்சிறந்த ராணுவம் எங்களிடம் உள்ளது. உலகின் மிகச்சிறந்த தலைவர்கள் எங்களிடம் உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.