உலகம்

2 நாள் பயணமாக இந்தியாவுக்கு வருகை தரும் ரஷிய அதிபர் புதின்!

Published On 2025-11-28 15:57 IST   |   Update On 2025-11-28 15:57:00 IST
  • 23-வது இந்தியா-ரஷியா வருடாந்திர உச்சிமாநாட்டில் கலந்துகொள்கிறார்.
  • கடைசியாக பிரதமர் மோடியும் ரஷிய அதிபர் புதினும் சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்றனர்.

ரஷிய அதிபர் புதின் 2 நாட்கள் பயணமாக டிசம்பர் 4-ந்தேதி இந்தியா வர உள்ளார் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் நடைபெறும் 23-வது இந்தியா-ரஷியா வருடாந்திர உச்சிமாநாட்டில் பிரதமர் மோடியுடன் அவர் கலந்து கொள்ள உள்ளார்.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ரஷிய அதிபர் புதினின் அரசு முறை பயணம், இந்தியா - ரஷியாவின் இருதரப்பு உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்யவும்.

சிறப்பு மற்றும் சலுகை பெற்ற மூலோபாய கூட்டாண்மை குறித்த தொலைநோக்கு பார்வையை வலுப்படுத்தவும், பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்த கருத்துக்களை பரிமாறிக்கொள்ளவும் ஒரு வாய்ப்பை வழங்கும்" என்று தெரிவித்துள்ளது.

ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கியதற்காக இந்தியா மீது அமெரிக்கா கூடுதல் வரி விதித்துள்ள சூழலில் புதின் இந்தியா வருகிறார்.

இந்திய பயணத்தின்போது ரஷிய அதிபர் புதின் முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடைசியாக பிரதமர் மோடியும் ரஷிய அதிபர் புதினும் சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்றனர். 

Tags:    

Similar News