உலகம்

அதிபர் டிரம்பின் வரி மசோதா நிறைவேற்றம்.. காத்திருக்கும் ஆபத்து! - அடுத்து என்ன?

Published On 2025-07-04 09:48 IST   |   Update On 2025-07-04 09:48:00 IST
  • ஏழைகளுக்கான உணவு உதவித் திட்டம் மற்றும் மருத்துவ உதவி சுகாதார காப்பீட்டுத் திட்டங்களில் பெரும் நிதி குறைப்புகள் ஏற்படும்.
  • 1.6 கோடி அமெரிக்கர்கள் தங்கள் சுகாதாரப் பாதுகாப்பை இழக்கும் அபாயத்தில் உள்ளனர் என முன்னாள் அதிபர் ஒபாமா தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிமுகம் செய்த 'பிக் பியூட்டிபுல் பில்' எனப்படும் வரி மற்றும் செலவு மசோதா காங்கிரசில் குறுகிய பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது.

வியாழக்கிழமை நடந்த பரபரப்பான வாக்கெடுப்பில், மசோதாவுக்கு ஆதரவாக 218 வாக்குகளும் எதிராக 214 வாக்குகளும் பதிவாகின. எனவே 4 வாக்குகள் வித்தியாசத்தில் மசோதா வெற்றி பெற்றது.

இந்நிலையில் அமெரிக்க சுதந்திர தினமான இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு அதிபர் டிரம்ப், மசோதாவில் கையெழுத்திடுவார் என்று பத்திரிகை செயலாளர் கரோலின் லெவிட் கூறினார். இதன்மூலம் மசோதா சட்ட்டமாக அமலுக்கு வரும். 

இந்த மசோதாவில் இராணுவ செலவினங்களை அதிகரித்தல், புலம்பெயர்ந்தோரை நாடுகடத்தும் திட்டத்திற்கு நிதியளித்தல் மற்றும் வரி நிவாரணத்தை நீட்டிக்க 4.5 டிரில்லியன் டாலர்களை ஒதுக்குதல் ஆகியவை முக்கிய அம்சங்கள் அடங்கும்.

இருப்பினும், இந்த மசோதா நாட்டின் கடனை மேலும் 3.4 டிரில்லியன் டாலர் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், ஏழைகளுக்கான உணவு உதவித் திட்டம் மற்றும் மருத்துவ உதவி சுகாதார காப்பீட்டுத் திட்டங்களில் பெரும் நிதி குறைப்புகள் ஏற்படும். இந்த மசோதா அமலானால் சுமார் 17 மில்லியன் மக்களின் காப்பீட்டுத் தொகையை இழக்க நேரிடும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

மசோதா நிறைவேற்றப்படுவதைத் தடுக்க ஜனநாயகக் கட்சித் தலைவர் ஹக்கீம் ஜெஃப்ரிஸ் அவையில் பேசுகையில், "இந்த மசோதா அமெரிக்க மக்களின் வாழ்க்கையை அழிக்கும். இது ஒரு அருவருப்பான மற்றும் ஆபத்தான மசோதா" என்று கூறினார்.

இந்த மசோதாவால் 1.6 கோடி அமெரிக்கர்கள் தங்கள் சுகாதாரப் பாதுகாப்பை இழக்கும் அபாயத்தில் உள்ளனர் என முன்னாள் அதிபர்  ஒபாமாவும்  வேதனை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News