அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான திட்டம் இல்லை: ஈரான் அமைச்சர் சொல்கிறார்
- ஈரானை நோக்கி அமெரிக்கா போர்க்கப்பல்களை நகர்த்தி வருகிறது.
- ஈரான் மீது அமெரிக்கா ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளும் என்ற அச்சம் நிலவி வருகிறது.
டாலருக்கு நிகரான ஈரானின் பண மதிப்பு கடும் வீழ்ச்சி அடைந்ததால், அந்நாட்டில் விலைவாசி கடுமையாக உயர்ந்து பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் சாலையில் இறங்கி போராடத் தொடங்கினர். போராடியவர்களை ஒடுக்க ஈரான் அரசு நடவடிக்கை எடுத்தது. இதனால் போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப்புடையினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. போராட்டம் வன்முறையாக வெடித்தது. இதில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
போராட்டக்காரர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டால் ஈரான் மீது ராணுவ நடவடிக்கை எடுப்போம் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரித்திருந்தார். அத்துடன் போர்க்கப்பல்களை ஈரான் நோக்கி நகர்த்த உத்தரவிட்டார். அமெரிக்க போர்க்கப்பல்களும் முன்னோக்கி வருகின்றன. இதனால் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது.
ஈரான்- அமெரிக்கா இடையிலான பதற்றத்தை தணிக்க துருக்கி முயற்சி மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக துருக்கி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி இஸ்தான்புல் சென்றுள்ளார்.
துருக்கி சென்றுள்ள அப்பாஸ் அராக்சி, "பதற்றத்தை தீர்க்க பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம். ஆனால், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்காக எந்தவொரு திடமான திட்டமும் இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில் "நாங்கள் நியாயமான மற்றும் சமமான பேச்சுவார்த்தைகளுக்கு தயாராக இருக்கிறோம். அத்தகைய பேச்சுவார்த்தைகளுக்கு முதலில் பேச்சுவார்த்தைகளின் வடிவம், பேச்சுவார்த்தைகள் நடைபெறும் இடம் மற்றும் பேச்சுவார்த்தைகளின் தலைப்பு ஆகிய அனைத்தையும் குறித்து ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
ஈரான் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதுபோன்று போருக்கும் தயாராக உள்ளது" என்றார்.