30 ஆண்டு கால உழைப்பு வீணாக போகிறது: டிரம்பை சாடிய முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர்
- இந்திய ஐ.டி. ஊழியர்களை பாதிக்கும் வகையில் எச்-1பி நுழைவு இசைவுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
- இதனால் இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது.
வாஷிங்டன்:
ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதைக் காரணம் காட்டி இந்தியப் பொருட்கள் மீது அமெரிக்கா 50 சதவீதம் வரை வரி விதித்தது. இந்தியாவின் வர்த்தகத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஈரானின் சபஹார் துறைமுகம் மீதான தடைகளையும் விலக்கிக்கொள்ள மறுத்துவிட்டது.
மேலும், இந்திய ஐ.டி. ஊழியர்களை பாதிக்கும் வகையில் எச்-1பி நுழைவு இசைவுக்கான கட்டணத்தையும் கடுமையாக உயர்த்தி உள்ளது. இதனால் இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் கொள்கைகளை அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சூசன் ரைஸ்,
கடுமையாகச் சாடியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
இரு கட்சிகளைச் சேர்ந்த அரசுகளும் கடந்த 30 ஆண்டுகளாகப் பாடுபட்டு வளர்த்த இந்திய-அமெரிக்க நட்புறவை, டிரம்ப் நிர்வாகம் சீர்குலைத்துவிட்டது.
இது கொள்கை சார்ந்த முடிவு என்பதை விட, தனிப்பட்ட கோபத்தின் வெளிப்பாடாகவே தெரிகிறது. இந்தியா போன்ற பெருமையும் வலிமையும் வாய்ந்த ஒரு நாட்டை புறந்தள்ளினால் அது ரஷியா, சீனா போன்ற நாடுகளுடன் நெருக்கமாகும் அபாயம் உள்ளது. இது இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் நலன்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் இந்தக் கருத்துகள் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.