தேர்தல்களில் தலையிட்டதாக புகார்: கனடா குற்றச்சாட்டுக்கு இந்தியா மறுப்பு
- இரு நாடுகள் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
- இந்தியா உலக அரங்கில் ஒரு முக்கியமான நாடாக உள்ளது.
கனடாவில் வசித்து வந்த காலிஸ்தான் அமைப்பு தலைவர் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா குற்றம் சாட்டியது. இதை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது. இவ்விவகாரத்தால் இரு நாடுகள் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது.
இதற்கிடையே கனடா பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்தார். இதையடுத்து கனடாவின் புதிய பிரதமர் வருகிற மார்ச் மாதம் தேர்வு செய்யப்பட உள்ளார்.
இந்த நிலையில் கனடாவின் தேர்தல்களில் சில வெளிநாட்டு அரசாங்கங்கள் தலையிடுவதாக எழுந்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஆணையம் தனது அறிக்கையை தாக்கல் செய்தது. அதில் இந்தியா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், கனடா தேர்தலில் வெளிநாட்டு தலையீட்டில் 2-வது மிகவும் சுறுசுறுப்பான நாடாக இந்தியா உள்ளது. இந்தியா உலக அரங்கில் ஒரு முக்கியமான நாடாக உள்ளது. கனடாவும், இந்தியாவும் பல தசாப்தங்களாக ஒன்றாக வேலை செய்து உள்ளன.
ஆனால் இரு நாடுகள் உறவில் சவால்கள் உள்ளன. நாங்கள் நீண்ட காலமாக இந்தியாவின் வெளிநாட்டு தலையீடு நடவடிக்கைகள் குறித்து தெரிவித்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளது.
கனடாவின் குற்றச்சாட்டை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதுகுறித்து வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது:-
இந்தியா குறித்த கனடா அறிக்கையின் குற்றச்சாட்டுகளை நாங்கள் நிராகரிக்கிறோம். தலையீடு என்று கூறப்படும் நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை நாங்கள் பார்த்தோம். உண்மையில் இந்தியாவின் உள் விவகாரங்களில் கனடா தொடர்ந்து தலையிட்டு வருகிறது. அவர்கள் தான் சட்டவிரோத குடியேற்றம் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்றார்.