உலகம்

வங்கதேச நிலநடுக்கத்தில் 6 பேர் உயிரிழப்பு... கொல்கத்தாவில் நிலஅதிர்வு!

Published On 2025-11-21 13:24 IST   |   Update On 2025-11-21 13:24:00 IST
  • வங்கதேச நிலநடுக்கத்தில் ஆறுபேர் உயிரிழப்பு.
  • அடுத்தடுத்த நிலநடுக்கங்கள் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.

வங்கதேசத்தில் இன்று காலை 10 மணியளவில் நர்சிங்டி அருகே 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தலைநகர் டாக்காவில் இருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் உள்ள நர்சிங்டி மாவட்டத்தின் கோரஷால் பகுதியில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்துள்ளது. இதில் குறைந்தது ஆறு பேர் உயிரிழந்துள்ளனர் எனவும், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்றும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. காலை 10:08 மணிக்கு, நர்சிங்டியிலிருந்து தென்மேற்கே 13 கி.மீ தொலைவில், 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதன் தாக்கம் கொல்கத்தா, மேற்குவங்கம், அசாமின் குவஹாத்தி போன்ற பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது. இந்த நில அதிர்வால் மக்கள் அச்சமடைந்து வீடுகளிலிருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். முன்னதாக, இன்று பாகிஸ்தானில் 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்திருந்தது. நிலநடுக்கத்தின் மையம் 135 கி.மீ ஆழத்தில் அமைந்திருந்தது. அடுத்தடுத்த நிலநடுக்கங்கள் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.


மேலும் இந்திய மற்றும் யூரேசிய டெக்டோனிக் தகடுகளின் மோதல் காரணமாக வடக்கு மற்றும் தென்கிழக்கு வங்கதேசம் பூகம்ப பாதிப்பு மண்டலங்களாக அறியப்பட்டாலும், இன்று நிலநடுக்கம் ஏற்பட்ட மத்திய பகுதியில் நிலநடுக்கங்கள் ஏற்பட குறைவான வாய்ப்புகளே இருக்கும் பகுதி என USGS தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News