செய்திகள்
ஜாக்கிசான்

கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்தால் 1 கோடி ரூபாய் பரிசு- ஜாக்கிசான்

Published On 2020-02-10 12:29 IST   |   Update On 2020-02-10 12:29:00 IST
கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்தால் ஒரு கோடி ரூபாய் பரிசு அளிப்பேன் என்று பிரபல ஹாலிவுட் நட்சத்திரமான ஜாக்கிசான் அறிவித்துள்ளார்.
சீனாவில் வுகான் நகரத்தில் உருவான கொரோனா வைரஸ் 25-க்கும் மேற்பட்ட நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது.

இந்த கொடூர கொரோனா வைரசால் இதுவரை 908 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் உலக அளவில் 37000-க்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா வைரசுக்கு இதுவரை மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கவில்லை. வைரஸ் பரவாமல் தடுக்க சீன அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவசர அவசரமாக 1000 படுக்கையறைகளுடன் இரண்டு தற்காலிக மருத்துவமனைகளையும் உருவாக்கி உள்ளது.

இந்நிலையில் பிரபல ஹாலிவுட் நட்சத்திரமான ஜாக்கிசான் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

இந்த கொடூர வைரசை தோற்கடிக்க விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் முக்கியம். என்னைப் போன்று பலரும் இதனை நம்புகின்றனர். அதனால் வைரசை கட்டுப்படுத்த விரைவில் ஒருமாற்று மருந்தை உருவாக்க முடியும் என்று நான் முழுமையாக நம்புகிறேன்.



இவ்வாறு தனி நபரோ அல்லது ஒரு அமைப்போ கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்தால் அவர்களுக்கு ஒரு மில்லியன் அதாவது இந்திய மதிப்பில் ஒரு கோடி ரூபாய் அளிப்பேன்.

இந்த அறிவிப்பு பணத்தை பொருட்டாக கொண்டதல்ல. எனது நண்பர்கள் வைரசால் பாதிக்கப்பட்டு போராடுவதை பார்க்க நான் விரும்பவில்லை. அவர்கள் நன்றாக வாழ வேண்டும் அதற்காகத்தான்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Similar News