செய்திகள்

புல்வாமா தாக்குதல் தொடர்பாக மேலும் ஆதாரங்களை கேட்கும் பாகிஸ்தான் அரசு

Published On 2019-03-27 15:07 GMT   |   Update On 2019-03-27 15:07 GMT
காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் 40 வீரர்கள் கொல்லப்பட்ட தாக்குதல் தொடர்பாக ஜெய்ஷ் இ முஹம்மது இயக்கத்தின் மீது நடவடிக்கை எடுக்க மேலும் ஆதாரங்களை அளிக்குமாறு பாகிஸ்தான் அரசு கேட்டுள்ளது. #Pakistanseeksevidence #Pulwamaattack
இஸ்லாமாபாத்:

காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-2-2019 அன்று ஜெய்ஷ் இ முஹம்மது பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவன் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் சி.ஆர்.பி.எப். படை வீரர்கள் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட கார், தாக்குதல் நடத்திய தற்கொலைப்படை பயங்கரவாதி மற்றும் உறுதுணையாக இருந்தவர்கள் பாகிஸ்தானில் இருந்து இயங்கி வரும் ஜெய்ஷ் இ முஹம்மது பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பது தேசிய புலனாய்வு துறை அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதற்கான ஆதாரங்களை இந்திய அரசு கடந்த மாதம் 27-ம் தேதி பாகிஸ்தான் அரசிடம் ஒப்படைத்து அங்கு இருக்கும் மசூத் அசார் உள்பட 22 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தது. மேலும், எல்லைப்பகுதியில் இயங்கிவரும் பயங்கரவாத முகாம்கள் தொடர்பாக இந்திய அரசிடம் உள்ள உளவுத்துறை தகவல்களும் பாகிஸ்தானுக்கு தெரிவிக்கப்பட்டது.

ஆனால், இந்திய அரசு அளித்துள்ள ஆதாரங்கள் போதுமானதாக இல்லை. அவர்கள் அனுப்பிய தகவலில் இவர்களுக்கு எல்லாம் தொடர்பு இருப்பதாக ‘கருதப்படுவதாக’ மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் உள்துறை அதிகாரிகள் சமீபத்தில் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், ஒரு வியக்கத்தக்க முன்னேற்றமாக இந்திய அரசு முன்னர் அளித்திருந்த ஆதாரங்களின் அடிப்படையில் பாகிஸ்தான் அரசு நடத்திய விசாரணை மூலம் அறியவந்த விபரங்களை இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய உயர் தூதருடன் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகள் இன்று பரிமாறி கொண்டதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இவ்விவகாரத்தில் பாகிஸ்தானில் உள்ளவர்களுக்கு தொடர்பு இருப்பதை நிரூபிக்கும் வகையில் நம்பத்தகுந்த ஆதாரங்கள் இருந்தால் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் முன்னர் அளித்திருந்த வாக்குறுதியின்படி, புல்வாமா தாக்குதல் தொடர்பாக இந்தியா அளித்திருந்த ஆதாரங்களின் அடிப்படையில் அந்நாட்டு அதிகாரிகள் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள் இன்று இந்திய தூதரிடம் பரிமாறப்பட்டது.

இவ்விசாரணையை மேற்கொண்டு முன்னெடுத்து செல்லும் வகையில் இந்தியாவிடம் இருந்து மேலும் சில ஆதாரங்கள் கோரப்பட்டுள்ளது என பாகிஸ்தான் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. #Pakistanseeksevidence  #Pulwamaattack
Tags:    

Similar News