செய்திகள்

சோமாலியாவில் 77 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்

Published On 2019-01-19 15:44 GMT   |   Update On 2019-01-19 15:44 GMT
சோமாலியா நாட்டில் அட்டூழியம் செய்துவரும் அல் ஷபாப் பயங்கரவாதிகளை குறிவைத்து அரசுப்படைகள் இன்று நடத்திய தாக்குதலில் 77 பேர் கொல்லப்பட்டனர். #alShabab #militantskilled
மொகடிஷு:

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் அல் கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவாளர்களாக இயங்கிவரும் அல் ஷபாப் பயங்கரவாதிகள், இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை ஏற்படுத்தும் நோக்கத்தில் அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாட்டின் சில பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் இவர்கள் அவ்வப்போது வன்முறை தாக்குதல்களை நடத்தி பலரை கொன்று குவித்தும் வருகின்றனர். இவர்களை ஒழிக்கும் பணியில் ராணுவம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. ராணுவத்துக்கு உதவியாக அமெரிக்காவை சேர்ந்த அதிரடிப் படையினரும் இந்த தாக்குதலில் இணைந்துள்ளனர்.

இந்நிலையில், சோமாலியாவின் தென்பகுதியில் உள்ள அர்ராரே மற்றும் முசே ஹாஜி நகரங்களுக்கு இடையில் அல் ஷபாப் பயங்கரவாதிகளை குறிவைத்து அரசுப்படைகள் இன்று நடத்திய வான்வழி தாக்குதலில் 77 பேர் கொல்லப்பட்டதாகவும், அவர்களின் கவச வாகனங்கள் (பீரங்கி டாங்கிகள்) அழிக்கப்பட்டதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளிட்டுள்ளன.



முன்னதாக, சோமாலியாவில் அமைதிப்பணியில் ஈடுபட்டு வரும் எத்தியோப்பா நாட்டு ராணுவ வீரர்களை குறிவைத்து புர்ஹாகாபா என்ற இடத்தில் அல் ஷபாப் படையினர் நேற்று நடத்திய ஆவேச தாக்குதலில் 57 வீரர்கள் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் இன்று அரசுப்படைகள் நடத்திய தாக்குதலில் 77 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றுபோல் இன்றும் ஜுப்லான்ட் பகுதியில் உள்ள பர்-சங்குனி பகுதியில் ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்த வந்த பயங்கரவாதிகளின் திட்டம் முறியடிக்கப்பட்டதாகவும் சோமாலியா ராணுவத்தை சேர்ந்த உயரதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். #alShabab #militantskilled  
Tags:    

Similar News