செய்திகள்

ரோகிங்கியா அகதிகளை மியான்மருக்கு அனுப்பிய விவகாரம்- இந்தியாவிடம் விளக்கம் கேட்கிறது ஐநா

Published On 2019-01-05 08:03 GMT   |   Update On 2019-01-05 09:28 GMT
இந்தியாவில் இருந்து ரோகிங்கியா அகதிகளை மியான்மருக்கு திருப்பி அனுப்பியது தொடர்பாக ஐநா அகதிகள் முகமை விளக்கம் கேட்டுள்ளது. #UNHCR #RohingyaRefugees
நியூயார்க்:

மியான்மரில் இருந்தும் வங்கதேசத்தில் இருந்தும் ரோகிங்கியா முஸ்லிம்கள் ஏராளமானோர் இந்தியாவிற்கு அகதிகளாக வந்து தங்கியிருக்கின்றனர். இந்தியாவில் உள்ள ஐ.நா. அகதிகள் முகமையின் தரவுகளின்படி, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் 18 ஆயிரம் ரோகிங்கியா முஸ்லிம்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது.

இவர்கள் அனைவரும் ஐ.நா. அகதிகள் முகமையில் பதிவு செய்துள்ளனர். கைது நடவடிக்கைகள் மற்றும் நாடு கடத்தல்களில் இருந்து தங்களை தற்காத்து கொள்வதற்காக இவர்களுக்கு அடையாள அட்டைகள் மற்றும் ஆவணங்களும் வழங்கப்பட்டுள்ளதாக ஐநா அகதிகள் முகமை தெரிவித்துள்ளது.



இந்த அகதிகள் அவர்களின் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என இந்திய அரசு அறிவித்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. சட்டவிரோதமாக நுழைந்ததாக  தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த ரோகிங்கியா முஸ்லிம்கள் 7 பேர் கடந்த ஆண்டு இறுதியில் திருப்பி அனுப்பப்பட்டனர். தற்போது மியான்மரின் ரக்கினே மாநிலத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் நேற்று முன்தினம் மியான்மருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதற்கு ஐநா கவலை தெரிவித்துள்ளது.

இதுபற்றி ஐநா அகதிகள் முகமையின் துணை செய்தித் தொடர்பாளர் பர்ஹான் ஹக் கூறுகையில், “அடைக்கலம் கேட்டுள்ள ரோகிங்கியா முஸ்லிம்களில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களை மியான்மருக்கு நாடு கடத்தியதற்கு ஐ.நா. அகதிகளுக்கான உயர் ஆணையர் அலுவலகம் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளது. கடந்த மூன்று மாதங்களில் இரண்டாவது முறையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்ததற்காக கைது செய்யப்பட்டு 2013ம் ஆண்டில் இருந்து சிறைவாசம் அனுபவித்து வந்தவர்கள் இப்போது நாடு கடத்தப்பட்டிருப்பதாக ஐநா அகதிகள் முகமை கூறியுள்ளது.

“தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள ரோகிங்கியா அகதிகளை சந்தித்து, அவர்களின் சூழ்நிலைகளை அறிந்துகொள்ளவும், தாய் நாட்டிற்கு திரும்புவது தொடர்பான அவர்களின் விருப்பத்தை கேட்கவும் அனுமதிக்கும்படி தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டுவருகிறது. ஆனால், இந்திய அதிகாரிகளிடம் இருந்து பதில் வரவில்லை. அகதிகளை சந்திக்க அனுமதிக்க வேண்டும். மேலும், எந்த சூழ்நிலைகளில் அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர் என்பது குறித்து இந்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும்” என ஐநா அகதிகள் முகமை வலியுறுத்தி உள்ளது. #UNHCR #RohingyaRefugees
Tags:    

Similar News