செய்திகள்

நிருபருக்கு தடை: டிரம்ப் மீது சி.என்.என். வழக்கு

Published On 2018-11-14 05:21 GMT   |   Update On 2018-11-14 05:21 GMT
வெள்ளை மாளிகைக்குள் நிருபர் அகோஸ்டா நுழைய தடை விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிபர் டிரம்ப் மீது சி.என்.என். நிர்வாகம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. #Trump #CNN #Acosta
வாஷிங்டன்:

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த 7-ந்தேதி வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது சி.என்.என். நிருபர் அகோஸ்டா, அவரிடம் அமெரிக்காவுக்குள் நுழையும் வெளிநாட்டினர் குறித்து கேள்வி எழுப்பினார்.

பின்னர் 2016-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலின் போது ரஷியாவின் தலையீடு குறித்து கூறப்படும் குற்றச்சாட்டு பற்றி கேள்விஎழுப்ப முயன்றார். அப்போது டிரம்ப் கோபம் அடைந்து போதும்...போதும்... என்று கூறியதுடன் அவரிடம் இருந்து மைக்கை பறிக்க உத்தரவிட்டார்.

அதை பறிக்க முயன்ற பெண் ஊழியரிடம் நிருபர் அகோஸ்டா அத்துமீறி நடந்து கொண்டதாக புகார் கூறப்பட்டது. மேலும் மறு அறிவிப்பு வரும்வரை அவர் வெள்ளை மாளிகைக்குள் நுழைய தடை விதிப்பதாகவும் டிரம்ப் அரசு உத்தரவிட்டுள்ளது.


இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டிரம்புக்கு சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்தது. இதற்கிடையே வெள்ளை மாளிகைக்குள் நிருபர் அகோஸ்டா நுழைய தடை விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிபர் டிரம்ப் மீது சி.என்.என். நிர்வாகம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

இதுகுறித்து சி.என்.என். நிறுவனம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ‘‘இந்த வழக்கில் அகோஸ்டா மீது விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டு அவர் விரைவில் வெள்ளை மாளிகையின் தலைமை நிருபராக முறைப்படி மீண்டும் திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #Trump #CNN #Acosta
Tags:    

Similar News