செய்திகள்

பாகிஸ்தான் திரும்பும் நவாஸ் செரீப் 13-ந்தேதி கைது ஆகிறார்

Published On 2018-07-10 06:50 GMT   |   Update On 2018-07-10 06:50 GMT
பனாமா ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற நவாஸ் செரீப் மற்றும் அவருடைய மகள் மரியம் நவாஸ் ஆகியோர் 13-ந்தேதி கைது செய்யப்படுகிறார்கள்.
இஸ்லாமாபாத்:

பனாமா ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப்புக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

மேலும் மகள் மரியம் நவாசுக்கு 7 ஆண்டுகளும், அவரது கணவர் முகமது சப்தாருக்கு ஒரு ஆண்டும் தண்டனை விதிக்கப்பட்டது.

ஆனால் இவர்கள் 3 பேரும் ஜெயிலில் அடைக்கப்படவில்லை. புற்று நோய் பாதித்து சிகிச்சை பெறும் மனைவியுடன் நவாஸ் செரீப்பும், அவரது மகள் மரியமும் லண்டனில் தங்கியுள்ளனர். மரியமின் கணவர் முகமது சப்தார் மட்டும் பாகிஸ்தானில் இருந்தார்.

தலைமறைவாக இருந்த அவர் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி ராவல் பிண்டியில் நடத்திய பேரணியில் பங்கேற்க வந்தார். அப்போது அவரை கோர்ட்டு அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் நவாஸ் செரீப்பும், அவரது மகள் மரியம் நவாசும் லண்டனில் இருந்து வருகிற 13-ந் தேதி பாகிஸ்தான் திரும்புகின்றனர். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு விட்டன.

அவர்கள் லாகூரில் உள்ள அல்லாமா இக்பால் சர்வதேச விமான நிலையத்தில் அன்று மாலை 6 மணியளவில் வந்து இறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அப்போது அவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டு அடுத்த விமானத்தில் இஸ்லாமாபாத் கொண்டு செல்லப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்காக லாகூர் விமான நிலையம் சீல் வைக்கப்படுகிறது. அங்கு அதற்கான முன் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

அரசின் இத்தகைய செயல்பாடுகள் நவாஸ் செரீப் ஆதரவாளர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. #NawazSharif
Tags:    

Similar News