செய்திகள்
பாகிஸ்தான் பொதுத் தேர்தலுக்கான முஷரப்பின் வேட்புமனு நிராகரிப்பு
பாகிஸ்தானில் ஜூலை 25-ம் தேதி நடைபெற உள்ள பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்காக முன்னாள் அதிபர் முஷரப் தாக்கல் செய்திருந்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. #Pakistan #PervezMusharraf
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் நாட்டில் ஜூலை 25-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்நாட்டின் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப் தேர்தலில் போட்டியிட அனுமதி அளிக்க வேண்டி உச்சநீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ஜூன் 13-ம் தேதி அன்று நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன், தேர்தலில் போட்டியிட அனுமதி அளித்திருந்தனர்.
ஆனால் குறிப்பிட்ட தேதியில் முஷரப் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. நீதிமன்றத்தில் ஆஜராவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என முஷரப்பின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதையடுத்து வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்த நீதிமன்றம், முஷரப் தேர்தலில் போட்டியிடுவதற்கு அளிக்கப்பட்ட அனுமதியையும் அதிரடியாக திரும்ப பெற்றது.
இந்நிலையில், பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்காக முஷரப் அளித்திருந்த வேட்பு மனுவை அதிகாரிகள் நிராகரித்தனர். நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் நிராகரிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து வரும் 22-ம் தேதி மேல்முறையீடு செய்ய இருப்பதாக முஷரப் தரப்பு தெரிவித்துள்ளது. #Pakistan #PervezMusharraf