தமிழ்நாடு செய்திகள்

நல்லகண்ணு மறைவு : விஜய் வசந்த் எம்.பி இரங்கல்

Published On 2026-02-26 09:27 IST   |   Update On 2026-02-26 09:27:00 IST
  • தமிழக அரசியல் மற்றும் சமூக நீதி வரலாற்றில் ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.
  • அரசியல் நேர்மைக்கும், பொதுநலத்திற்குமான அர்ப்பணிப்புக்கும் அவர் ஒரு எடுத்துக்காட்டு.

கன்னியாகுமரி:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மறைவுக்கு கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மக்கள் இயக்கங்களின் முன்னோடி, எளிமையின் உருவகமாக வாழ்ந்த மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் ஆர். நல்லகண்ணு அவர்களின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். தமிழக அரசியல் மற்றும் சமூக நீதி வரலாற்றில் ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.

வாழ்நாள் முழுவதும் விவசாயிகள், தொழிலாளர்கள், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக ஓய்வின்றி போராடிய அவர், அதிகாரத்தில் அல்ல, மக்களின் இதயங்களில் தங்கிய தலைவர். அரசியல் என்பது அதிகாரம் மட்டுமல்ல, அது மனிதநேயப் பொறுப்பு என்பதை தனது வாழ்வால் நிரூபித்தவர்.

எளிமையான வாழ்க்கை, தெளிவான கொள்கை, உறுதியான நிலைப்பாடு, இவை அனைத்தும் நல்லகண்ணு அவர்களின் அடையாளங்கள். அரசியல் நேர்மைக்கும், பொதுநலத்திற்குமான அர்ப்பணிப்புக்கும் அவர் ஒரு எடுத்துக்காட்டு.

அவரது மறைவு குடும்பத்தினருக்கும், கட்சித் தோழர்களுக்கும் மட்டுமல்ல, சமூகநீதியை நம்பும் ஒவ்வொருவருக்கும் பேரிழப்பு.

அவரது சேவைகளை நினைவு கூர்ந்து, அவரது இலட்சியங்களை முன்னெடுத்து செல்லுவது தான் அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும். அவரது சேவைகளுக்கு முன் சிரம் தாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறேன் என்று கூறியுள்ளார். 

Tags:    

Similar News