தமிழ்நாடு செய்திகள்

VBGRAMG-யால் 125 நாட்கள் வேலை கிடைக்கப் போகிறதா? - இ.பி.எஸ்.க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி

Published On 2025-12-23 14:37 IST   |   Update On 2025-12-23 14:37:00 IST
  • மகாத்மா காந்தி பெயரை நீக்கக்கூடாது என்று உங்கள் ஓனருக்கு வலிக்காமல் அழுத்தம் கொடுத்தீர்களே...
  • உங்களை ஒரு பொருட்டாகவே டெல்லி மதிக்கவில்லையே.

இந்தியாவில் 20 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்திற்குப் பதிலாக, புதிய சட்டத்தை கொண்டு வரும் நோக்கில் மத்திய புதிய மசோதா ஒன்றை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்தது.

இதற்கு 'விபி-ஜி ஆர்ஏஎம் ஜி' (VB-G RAM G) என்றும் பெயர்மாற்றம் செய்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதாவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றியது பாஜக தலைமையிலான மத்திய அரசு.இதனையடுத்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளித்தார். இதன்மூலம் இந்த மசோதா சட்டமானது.

இந்நிலையில், VBGRAMG திட்டம் குறித்து இ.பி.எஸ்.க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "VBGRAMG-யால் 125 நாட்கள் வேலை கிடைக்கப் போகிறதா? அதைப் பாராட்ட எங்களுக்கு மனமில்லையா? MGNREGA திட்டம் முடக்கப்பட்டுள்ளதை எதிர்த்துக் குரல் கொடுக்கத் துணிவின்றி, மீண்டும் மீண்டும் பச்சைப் பொய்யை அவிழ்த்துவிடுகிறார் பழனிசாமி.

ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை என்பது சட்டமாக இருந்தபோதே அதை நிறைவேற்றாமல், சம்பளமும் வழங்காமல் அலைக்கழித்த பா.ஜ.க. அரசு இப்போது 1008 நிபந்தனைகளுடன் நிறைவேற்றும் புதிய திட்டத்தில் 125 நாட்கள் வேலை தரப்போகிறதா?

உண்மையைச் சொன்னால், ஒருநாள் வேலைக்குக் கூட இனி ஒன்றிய அரசு உத்தரவாதம் கொடுக்காமல் கடமையைக் கைகழுவியுள்ளது.

மகாத்மா காந்தி பெயரை நீக்கக்கூடாது என்று உங்கள் ஓனருக்கு வலிக்காமல் அழுத்தம் கொடுத்தீர்களே... என்ன ஆனது? உங்களை ஒரு பொருட்டாகவே டெல்லி மதிக்கவில்லையே.

மாநில அரசின் மீது 40% நிதிச்சுமையை ஏற்றும் எதேச்சாதிகாரமும் கைவிடப்படவில்லையே?

டெல்லியை எதிர்த்துக் கேள்வி கேட்கும் துணிவு உங்களுக்கு இருக்குமென்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் முட்டுகளையாவது தவிர்க்கலாம்.

வறுமையை ஒழித்து, மக்களின் மாண்பை உயர்த்திய UPA அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் பா.ஜ.க. அரசால் குழிதோண்டி புதைக்கப்படுவதற்கு வக்காலத்து வாங்கி, உங்களது அரசியல் வாழ்க்கையின் முடிவுரையை நீங்களே எழுதிக் கொள்கிறீர்கள் என்பதை மட்டும் நினைவூட்டுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News